![கோவை கார் வெடிப்பு-கைதான ஐவருக்கு மூன்று நாள் போலீஸ் காவல்.. 1 888265](https://dhinasari.com/wp-content/uploads/2022/10/888265.jpg)
கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 5 பேருக்கு மூன்று நாள்கள் போலீஸ் காவல் வழங்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம், டவுன்ஹால் பகுதி கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் கார் முழுவதும் சேதமடைந்ததோடு காரில் இருந்த உக்கடம் பகுதியைச் சேர்ந்த ஜமேஷா முபீன் என்ற இளைஞர் உடல் கருகி உயிரிழந்தார்.
சென்னையில் இருந்து தடய அறிவியல் துறையினரும் தடயங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டதில், ஆணிகள், கோழிகுண்டுகள் ஆகியவை எடுக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இந்த விசாரணையின் அடிப்படையில், முகமது தல்கா (25), முகமது அசாருதீன் (23), முகமது ரியாஸ் (27), ஃபிரோஸ் இஸ்மாயில் (27), முகமது நவாஸ் இஸ்மாயில் (26) ஆகியோரை கைது செய்து உபா சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இவர்கள் 5 பேரையும் விசாரிக்க மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் அனுமதி கேட்டு காவல்துறை சார்பில் மனு அளிக்கப்பட்ட நிலையில், 3 நாள்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இதற்கிடையே, தேசிய புலனாய்வு முகமையின்(என்ஐஏ) விசாரணைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிந்துரைத்த நிலையில், என்ஐஏ அதிகாரிகளும் கோவையில் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
6வது நபர் கைது: விசாரணையில் பரபரப்பு திருப்பம்
கார் சிலிண்டர் வெடிப்பில் உயிரிழந்த ஜமேஷா முபின், ஆன்லைனில் அமேசான், ஃபிளிப்கார்ட் போன்ற இணையதளங்களில் இருந்து வேதிப்பொருட்களை வாங்கியுள்ளதாக அஃப்சர் கானிடம் விசாரித்ததில் தகவல் வெளியாகியுள்ளது
76.5 கிலோ பொட்டாசியம் நைட்ரேட், முபின் வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.