- Ads -
Home ஆன்மிகம் ஆன்மிகக் கட்டுரைகள் வசந்த பஞ்சமி : ‘பாசரா’ க்ஷேத்திரத்தில் சரஸ்வதி தரிசனம்!

வசந்த பஞ்சமி : ‘பாசரா’ க்ஷேத்திரத்தில் சரஸ்வதி தரிசனம்!

basara-kshetra-sri-saraswathi2
basara-kshetra-sri-saraswathi2

தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

இன்று வசந்த பஞ்சமி என்றும் ஸ்ரீ பஞ்சமி என்றும் போற்றப்படும் புண்ணிய நாள்.

‘சர்வசக்திமயி’ ஜகதம்பாளை வாக்கு, புத்தி, ஞான சொரூபிணியாக வணங்கினால் அந்த தெய்வீக வடிவமே சரஸ்வதி தேவி. சரஸ்வதியைை வழிபடும் உயர்ந்த பருவகாலம் மாக மாத சுக்லபட்ச பஞ்சமி திதி. இதனையே ஶ்ரீபஞ்சமி என்கிறோம்.

தெலங்காணாவிலுள்ள பா(வா)சரா க்ஷேத்திரத்தில் சரஸ்வதி தேவி தோன்றிய நாளான இன்று மகா உற்சவமாகக் கொண்டாடுவர். தேவி பாகவதம் போன்ற சக்தி நூல்கள் இன்றைய நாளை சரஸ்வதி பூஜைக்கு உகந்த நாளாக விளக்கிக் கூறுகின்றன.

மாக சுக்ல பஞ்சம்யாம் வித்யாரம்ப தினேபிச |
பூர்வேஹ்னி சமயம் க்ருத்யா தத்ராஹ்ன சம்யத: சுசி: ||

மாக மாதம் சுக்லபட்ச பஞ்சமி திதி விடியற்காலையில் சரஸ்வதி தேவியை தரிசிக்க வேண்டும். இன்று கலைகளின் தொடக்க தினம். வித்யாரம்ப நாள். முதலில் கணபதியை பூஜை செய்து அதன்பின் சாரதா தேவியின் பிரதிமை, புத்தகம், எழுதுகோல்களை வழிபடவேண்டும். சோடஷ உபசார பூஜையால் சரஸ்வதி தேவியை துதிக்கவேண்டும். வெண்ணிற மலர்களாலும் சுகந்த திரவியங்கள் நிரம்பிய சந்தனத்தாலும் வெண் வஸ்திரத்தாலும் அர்ச்சிக்க வேண்டும். பாலன்னமும் வாழைப்பழங்களும் தேங்காயும் நிவேதனம் செய்யவேண்டும்.

basara-kshetra-sri-saraswathi

பிரம்மதேவர் பராசக்தியை சாரதா வடிவத்தில் தரிசித்து வணங்கி அவள் அருளால் படைப்புத் தொழிலை செய்யும் கலையை பெற்றார். அதன்பின் தேவதைகள் அனைவரும் அந்த மகா சக்தியை வழிபட்டனர்.

யாக்யவல்கிய மகரிஷி குருவின் சாபத்தால் கற்ற கல்வியை இழந்து சூரிய பகவானை வழிபட்டார். அவர் சரஸ்வதி தேவியை உபாசனை செய்யும் படி உபதேசம் செய்தார். யாக்யவல்கியர் ‘கீர்வாணி’யின் கிருபையால் மறந்த கல்வியை மீண்டும் பெற்று அறிஞரானார் என்பது புராண வசனம்.

திறமை, மேதமை, சாகித்தியம், சங்கீதம் போன்ற கலைகளில் நுட்பம்… இவை அனைத்தும் சரஸ்வதியின் சொரூபங்கள்.

வால்மீகி மகரிஷி சரஸ்வதியை உபாசனை செய்து மகா காவியங்களைப் படைத்ததாக புராணங்கள் எடுத்தியம்புகின்றன. வால்மீகி மகரிஷியிடமிருந்து சாரதா தீக்ஷயைப் பெற்ற வியாசர் வேதங்களைப் பகுத்து, புராணங்களை எழுதி வெளியிட்டார். மகாபாரதம், ஸ்ரீமத் பாகவதம், பிரம்ம சூத்திரம் ஆகிய படைப்புகளை இயற்றி பாரதிய கலாச்சாரத்திற்கும் சனாதன தர்மத்திற்கும் ஆச்சாரியரானார்.

பாசரா புண்ணிய க்ஷேத்திரம்:-

சாரதாம்பாளை சாட்சாத்தாக தரிசித்த வியாச பகவான் பவித்திரமான கோதாவரி நதி தீரத்தில் தேவியின் ஆக்ஞைப்படி மணலால் சாரதாதேவி விக்கிரகத்தைச் செய்தார். மகா சரஸ்வதி தேவி அதில் பிரவேசித்து நிலைபெற்று இருந்து பக்தர்களுக்கு அருளி வருகிறாள். இந்த புனிதத் தலமே வியாசபுரியாக, வா(பா)சரா க்ஷேத்திரமாக பிரசித்தி பெற்று விளங்குகிறது.

உலகியலான அபர வித்யைகளுக்கும், பாரமார்த்திகமான பரப்பிரம்ம வித்யைக்கும் அதிஷ்டான தேவதை சரஸ்வதி.

basara-kshetra-sri-saraswathi3

பிரமை, ஞாபக மறதி, மனச்சோர்வு, பேச்சுத் திறன் குறைவு போன்ற மந்தநிலைகளை முழுமையாக நீக்கிவிடுகிறாள். “நிஸ்ஸேஷ ஜாட்யாபஹா” என்று வித்யாதேவி போற்றப்படுகிறாள்.

வேதத்தில் சரஸ்வதி சூக்தங்கள் உள்ளன. பிராண சக்தியாக, ஞான சக்தியாக உபாசிக்கும் சரஸ்வதியை, “அம்பீதமே நதீதமே தெய்வீதமே சரஸ்வதி” என்று சுருதி கீர்த்தனை செய்கிறது.

“அம்மன்களில் சிறந்தவள், நதிகளில் உயர்ந்தவள், தேவதைளில் உன்னதமானவள் சரஸ்வதி.”.

யா ப்ரஹ்மாச்யுத சங்கர: ப்ரப்ருதிபி: தேவை: சதா பூஜிதா
என்று சகல தேவர்களாலும் வணங்கப்படுபவளாக வாக்கின் கடவுளை போற்றுகிறார்கள்.

ஆதிசங்கரர் அபாரமான சுலோகங்களையும் தத்துவ ஞானங்களையும் சாரதா தேவியின் அருளால் இயற்றியதாக குறிப்பிடுவதோடு, சாரதாதேவியின் அனுகிரகத்தால்தான் நாமனைவரும் முழுமையான ஞானத்தோடும் நல்லறிவோடும் வளர முடியும் என்று உரைத்து புனிதமான சிருங்கேரி க்ஷேத்திரத்தில் ஸ்ரீ சாரதா தேவியை பிரதிஷ்டை செய்தார்.

காயத்ரியாக சாவித்திரியாக பராசக்தியாக வேதங்கள் போற்றும் சர்வ சைதன்ய ரூபிணி சாரதாவை இன்று வழிபடுவோம்.

NO COMMENTS

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version