― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்ஆடி கிருத்திகை ஆலய தரிசனம்: திருமலைக் குமாரசுவாமி!

ஆடி கிருத்திகை ஆலய தரிசனம்: திருமலைக் குமாரசுவாமி!

- Advertisement -
thirumalaikoil

—————–கட்டுரை: கே.ஜி.ராமலிங்கம்

இனிய ஆடிக்கிருத்திகை வாழ்த்துக்கள். மலையேறி தரிசனம் செய்ய பெருந்தொற்று தடையாக உள்ளது. தெய்வமாம் திருமலைக்குமாரசுவாமி நம் தடைகளை அகற்றி எல்லோருக்கும் நல்ல வாழ்க்கை அமைய அவனை துதித்து அவனருளை பெறுவோம்.

குன்றிருக்கும் இடமெல்லாம் குவலயத்தோர் வணங்கும் குமரன் இருக்கும் இடம் என்று சொல்வதுண்டு, அந்த வகையில் இயற்கையாக அமைந்த குன்று தான் திருமலைகோவில் –
திருமலைக்கோவில் – திருமலைக் குமாரசுவாமி திருக்கோயில்:

திருமலைக் குமாரசுவாமி தற்போது தென்காசி மாவட்டம் தென்காசி நகரிலிருந்து சுமார் 16 கிலோ மீட்டர் தொலைவில் செங்கோட்டை பக்கத்தில் இருக்கும் பண்பொழி (பைம்பொழில்) கிராமத்தின் அருகே உள்ளது.

தெப்போஸ்தவம் மற்றும் திருவிழாக்கள் பண்பொழியில் நடக்கும். சென்ற வருடம் முதன் முதலாக மலைமேல் உள்ள தெப்பக்குளத்தில் தெப்போஸ்தவம் நடைபெற்றதாக கேள்வி. இங்குள்ள மூலவர் பெயர் திருமலைக்குமாரசுவாமி ஆகும். திருமலைக்கோவில் 500 அடி உயரமுடைய மலைமீது ஏறிச்செல்ல படிக்கட்டுகள் உள்ளன.

ஒரு காலத்தில் திருமலைக்கோயிலில் ஒரு வேல் மட்டுமே இருந்தது. பூவன் பட்டர் ஒருநாள் நண்பகல் பூஜையை முடித்து விட்டு, ஓய்வுக்காக ஒரு புளியமரத்தடியில் படுத்திருந்தார். அப்போது, முருகப்பெருமான் கனவில் எழுந்தருளி, “பட்டரே இந்த மலை எனக்கு சொந்தமானது தான், நான் இங்கிருந்து அச்சன்கோயிலுக்குச்செல்லும் வழியில் கோட்டைத்திரடு என்ற இடத்தில் மூங்கில் புதருக்குள் இருப்பதாகவும், தான் இருக்கும் இடத்தைக் கட்டெறும்பு ஊர்ந்து சென்று காட்டும் என்றும் கூறினார்”.

thirumalaikoil

இது பற்றிய தகவல் பந்தள மகாராஜாவிற்கும் தெரிவிக்கப்பட்டது. சேரமன்னரான பந்தளமகாராஜாவின் கனவிலும் முருகன் வந்து தான் இருக்கும் இடம் பற்றிய விவரம் சொல்ல, பந்தள மகராஜாவும் பூவன்பட்டரும் கோட்டைத்திரடை நோக்கி வந்தனர். கட்டெறும்பு ஊர்ந்து சென்ற வழித் தடத்தில் மூங்கில் புதருக்குள்ளிருந்த முருகப்பெருமானை எடுத்தனர். அவர்கள் முருகப் பெருமான் விக்கிரகத்தைக் கொண்டு வந்து மலையின் உச்சியில் பிரதிட்சை செய்தனர். முருகப்பெருமான் குன்றின் மீது எழுந்தருளி திருமலைக் குமாரசுவாமியாக் காட்சி அளித்துக் கொண்டிருக்கிறார்.

பூவன் பட்டரின் கனவில் வந்த சிலையை கடப்பாரை வைத்து தோண்டி எடுக்க முயன்றபோது சிலையில் மூக்கு பகுதியில் கடப்பாரை பட்டு சிறு துளி உடைந்து விட்டது. அந்த சேதம் கூட பார்ப்பதற்கு அழகாக இருந்தது. இதனால் இதை வழிபட வந்த கிராம மக்கள் இதைப் பார்த்து முருகன் என்பதற்குப் பதிலாக ’மூக்கன்’ என்ற செல்லப்பெயரை சுவாமிக்கு வைத்து விட்டார்கள். இன்றளவும் குடும்பத்தில் குழந்தை நிலைக்காத தம்பதிகள் பிறக்கும் குழந்தைக்கு மூக்கு குத்திக் மூக்கன், மூக்காண்டி, மூக்காயி என பெயர் வைத்து அழைக்கிறேன் என்று வேண்டிக் கொள்வதும் உண்டு.

சிவகாமி அம்மையாரின் பக்தி

செங்கோட்டைக்கு அருகிலுள்ள நெடுவயல் என்னும் கிராமத்தில், குழந்தை இல்லாத பெண் ஒருவர் இருந்தார். வழிப்போக்கர்கள் இளைப்பாறுவதற்காக ஒரு கல்மண்டபம் கட்டினார். அங்கு ஒரு நாள் ‘வாலர் மஸ்தான்’ என்னும் ஞானி வந்து தங்க நேர்ந்தது. பெண்மணியும், அவர் கணவரும் அவருக்கு உணவிட்டு உபசரித்தனர். மனக்குறையை அவரிடம் சொல்லி வருந்திய போது, ”குழந்தைப்பேறு உனக்கு வாய்க்காது. இருந்தாலும், இங்கு மலையில் உள்ள ‘திருமலை முருகன்’ தான் உன் குழந்தை. அவனுக்கு சேவை செய்வதற்காக நீ பிறவி எடுத்திருக்கிறாய்” என்று ஆசியளித்தார்.

அந்த பெண்மணி பிற்காலத்தில், ‘சிவகாமி அம்மையார்’ எனப் பெயர் பெற்றார்.

திருமலை முருகன் கோயிலுக்கு இவர் திருப்பணி செய்த போது இவருக்கு ஒரு எண்ணம் வந்தது, அதாவது அருணகிரிநாதரால் பாடல் பெற்ற இத்தல முருகனைத் தன் மகனாக கருதிய அம்மையார் வசந்த மண்டபம் ஒன்றைக் கட்ட வேண்டும் என்று ஆசைகொண்டார். அதற்காக அவர் சந்தித்த சவால்கள் கணக்கில் அடங்காது. அம்மையார் பணியை மேற்பார்வை செய்ய, கல் துாண்கள், உத்தரங்களை பனை நாரால் ஆன கயிற்றால் கட்டி பணியாளர்கள் மலை மீதிருந்து இழுப்பர்.

thirumalaikoil2

கழுத்தில் ருத்திராட்சம், நெற்றியில் விபூதி, குங்குமம், ஒரு கையில் பெரிய வேல், மற்றொரு கையில் கமண்டலம், காவி உடையுடன் அம்மையார் வரும் போது, காண்பவர் எல்லாம் கைகூப்பி வணங்குவர். மேலே இழுக்கப்படும் கல்துாண் அல்லது உத்தரமோ உத்தரங்களோ, கயிறு அறுபட்டு ‘கடகட’ என்ற ஓசையுடன் உருண்டு விழும். அதைக் கண்ட அனைவரும் பதறி ஓட அம்மையாரோ, வேல் தாங்கியபடி ‘முருகா!’ என கூவிக் கொண்டு, தலையால் அதை தடுத்து நிறுத்துவார். நானுாறு அடி உயரம் கொண்ட இந்த மலையில் இருந்து ஒரு கல் கூட எடுக்காமல், உயிரைப் பணயம் வைத்து அம்மையார் செய்த சாதனையை மக்கள் இன்றும் நன்றியுடன் போற்றுகின்றனர்.

கோயில் பணிக்காக பனை நார் தேவைப்பட்டது. திருச்செந்துாரில் பனைநார் கிடைக்கும் என்பதை அறிந்த அம்மையார் அங்கு சென்றார். அப்போது திருச்செந்துாரில் மாசித் திருவிழா நடந்து கொண்டிருந்த சமயத்தில் செந்திலாண்டவர் தேரில் வலம் வந்து கொண்டிருந்தார். சுவாமியை கண்டதும் கண்ணீர் பெருக்கியபடி தன்னை மறந்து நின்றார்.

அம்மையார் நிற்பதை இடையூறாக எண்ணிய கோயில் பணியாளர் ஒருவர், கீழே தள்ளியதோடு, அவமரியாதையுடன் பேசினார். எழுந்த அம்மையார்,”முருகா! என்ன சோதனை இது? தேரில் வலம் வரும் உன்னை தரிசிப்பதைக் கூட தடுக்கிறார்களே இது நியாயமா” என்று கதறினார்.

யாரும் அதை பொருட்ப் படுத்தவில்லை. அடியவர் படும்துயரை ஆறுமுகப் பெருமான் பொறுத்துக் கொள்வாரா….என்ன…. வெகுண்டார்.

விளைவு… ஓடிய தேர் அப்படியே அசைவற்று நின்றது. கூடியிருந்தவர்கள் பலமுறை முயற்சித்தும் தேர் அசையவில்லை. அப்போது, அங்கிருந்த அர்ச்சகர் பரவசநிலை அடைந்தார். ஆவேசமுடன், ”என் பரம பக்தையான சிவகாமி தேருக்குப் பின்புறம் மனம் கலங்கி நிற்கிறார். அவரது கைகளால் வடம் பிடித்து இழுத்தால் தான் தேர் ஓடும்” என்றார்.

thirumalaikoil1

நிர்வாக அதிகாரி உட்பட அனைவரும் அம்மையாரிடம் ஓடினர். கண்ணீர் மல்க, நின்ற அம்மையாரிடம் நடந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டதோடு, வடம் பிடிக்கவும் வேண்டினர்.

அம்மையார், ”கடலோரம் நிற்கும் கந்தா! இந்த அடியவள் மீது உனக்கு இவ்வளவு கருணையா?”என்று சொல்லி வடம் தொட்டு தேர் இழுக்கலானார். அழகுத் தேர் அசைந்தாடி நகரத் தொடங்கியது. பக்தர்களும், ‘வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா” எனக் கோஷமிட்டனர்.

அதன் பின் கோயில் நிர்வாகத்தினர், ”அம்மா! திருமலை முருகன் கோயிலில் நீங்கள் செய்யும் திருப்பணி குறித்து கேள்விப் பட்டிருக்கிறோம்! இந்த உலகமே உங்களின் பெருமையை அறிய வேண்டும் என்பதற்காகவே, வள்ளி மணாளன் இந்த திருவிளையாடலை நிகழ்த்தியிருக்கிறார். உங்களுக்குத் தேவையான உதவியைச் செய்வது எங்கள் பொறுப்பு. தேவையான பனைநார் திருமலைக்கு அனுப்புகிறோம்” என வாக்களித்தனர்.

திட்டமிட்டபடி சிவகாமி அம்மையார் திருமலை முருகன் கோயிலில் வசந்தமண்டபம் கட்டி முடித்தார்.
1854 ஜூன் 9 (வைகாசி 28) வெள்ளிக் கிழமையன்று சிவகாமி அம்மையார் சித்தியடைந்தார்.

பெண் சித்தராக வாழ்ந்த அம்மையாரின் சமாதி, திருமலை முருகன் கோயிலுக்குக் கிழக்கே வண்டாடும் பொட்டல் என்னும் இடத்தில் உள்ளது.

பொதிகை மலையின் ரம்மியமான அழகையும் மலையேறிச் செல்லும் நிம்மதியையும் விரும்புவோருக்கு அருமையான இடம் இந்தத் தலம். இங்குள்ள முருகப் பெருமான், பால முருகனாக கையில் வேலோடும், மயிலோடும் காட்சி தருகிறான். சுமார் 500 அடி உயரம் உள்ள ஒரு குன்றின் மீது அமைந்துள்ளது இந்தத் திருக்கோயில்.

செல்வதற்கு அழகான மிதமான படிகள், ஓய்வெடுக்க மண்டபங்கள் என வயதானவரும் கூட வந்து தரிசிக்கும் வண்ணம் திகழுவது இத்திருத்தலம். நான்கு திருக்கரங்கள், வலது முன் கை அபய ஹஸ்தமாக உற்ற துணை நானே என்று அருகில் அழைத்து அருள் மழை பொழியும் சங்கதியைச் சொல்லுகிறது. வலது பக்க பின் கை வஜ்ராயுதம் தாங்கி அமைந்திருக்கிறது. கிட்டத்தட்ட நான்கு அடி உயரம் கொண்ட கருங்கல்லால் ஆனது இந்தத் திருவுருவம்.

திருமலையின் அடிவாரத்தில் வல்லப விநாயகர் சன்னிதி மிகப் பெரிதாக உள்ளது. இந்த விநாயகப் பெருமானை தரிசித்தபின், சுமார் 544 படிகள் கடந்து மேலே உச்சி விநாயகர் மற்றும் முருகன் சன்னிதியை அடையலாம்.

அங்கு சன்னிதி 16 படிகளில் ஏறிச் செல்லும் அழகான மண்டபமாக இருக்கிறது. மலைமீது அமைந்திருக்கும் இந்த முருகப் பெருமானை வயதானவர்களும், நடந்து சென்று தரிசிக்க இயலாதவர்களும் தரிசிக்க, மலைப்பாதை 2012 ஆம் ஆண்டு முதல் மலை மேல் வாகனங்கள் சென்று வர தார்ச் சாலையாக மலைப்பாதை அமைக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகின்றது.

மலைமீது திருமலைக்காளி அருள்பாலிக்கிறாள். இதை திரிகூடமலை என்றும் சொல்வர். இரண்டு மலைகள் இந்த மலையினைத் தொட்டுக் கொண்டிருப்பது போல் தோன்றுவதால் இந்தப் பெயர் ஏற்பட்டது. பாதையின் நடுவில் நடுவட்ட விநாயகர் சன்னதி உள்ளது. பின்னர் இடும்பன் சன்னதியை வணங்க வேண்டும். மலை உச்சியில் ஒரு உச்சிப்பிள்ளையார் சன்னதி உள்ளது. இந்த சன்னதியில் 16 கல் படிகள் உள்ளன. 16 செல்வங்களும் 16 படிக்கட்டுக்களாக இருப்பதாக கூறுகிறார்கள்.

thirumalaikoil2

மலை உச்சியிலுள்ள கோயிலின் தீர்த்தத்தை அஷ்டபத்ம குளம் என்று அழைத்தனர். தற்போது பூஞ்சுனை என்று இந்த குளத்தை அழைக்கிறார்கள். இங்கு இலக்கியங்களில் கண்ட குவளை என்னும் மலர் இதில் பூத்தது. அதை கரையில் இருந்த சப்த கன்னிமார் எழுவரும் முருகனை அந்த மலரால் பூஜித்தனர். சப்தகன்னியர் சிலை சிவாலயங்களில் மட்டுமே இருக்கும். ஆனால், இங்கு முருகன் தலமாக இருந்தாலும் இங்குள்ள தீர்த்தக் கரையிலும் சப்த கன்னியர் இருப்பது வேறு முருகன் கோவில்களில் இல்லாத சிறப்பாகும்.

விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இந்தக் கோயிலுக்கு வாழ்வில் ஒருமுறையாவது வந்து செல்ல வேண்டும். விசாகம், கார்த்திகை, உத்திரம் ஆகிய முருகனுக்குரிய நட்சத்திர நாட்களில் இம்மலையில் தங்கள் ஆதிக்கத்தை வெளிப்படுத்தும் ஓடவள்ளி, நள மூலிகை, திருமலைச் செடி ஆகிய மூலிகைகளும் வளர்ந்தன. செல்வ விருத்திக்காக, திருமலை செடியின் வேரையும், தனகர்ஷண யந்திரத்தையும் இணைத்து ஒரு காலத்தில் பூஜை செய்திருக்கிறார்கள்.

இன்று இந்த மூலிகைகளை அடையாளம் காண முடியவில்லை. “வி’ என்றால் “மேலான’ என்றும், “சாகம்’ என்றால் “ஜோதி’ என்றும் பொருள்படும். விசாக நட்சத்திரம் விமலசாகம், விபவசாகம், விபுலசாகம் என்ற மூவகை ஒளிக்கிரணங்களைக் கொண்டது. இந்த கிரணங்கள் அனைத்தும் இம்மலையில் படுவதால், விசாக நட்சத்திரத்தினர் ஆயுள்முழுவதும் சென்றுவழிபடுவதற்கு ஏற்றது என்று சித்தர்கள் கூறியுள்ளனர்.

இம்முருகப்பெருமானுக்கு நாள்தோறும் எட்டு கால பூஜைகள் நடைபெறுகின்றன.

போக்குவரத்து வசதி : இத்திருக்கோயில் செங்கோட்டை ரயில் நிலையத்திலிருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் வடமேற்குத் திசையில் இருக்கின்றது. தென்காசி, சங்கரன்கோவில் மற்றும் செங்கோட்டையிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன.

தங்குமிடம் :தென்காசி,குற்றாலம்,செங்கோட்டையில் தனியார் தங்கும் விடுதிகள் உள்ளன.

இலக்கியச் சிறப்பு: ஆய்அண்டிரன் ஆண்ட மலையான கவிரமலை இதுவென்றும், சிலப்பதிகாரத்தில் வரும் நெடுவேள் குன்றம் என்பது இக்குன்றமே என்றும், கண்ணகி இக்குன்றைக் கடந்தே சேரநாடு சென்றாள் என்றும் ஆராய்ச்சிக் குறிப்பேட்டில் திருமலைக்கோயில் வரலாற்றை எழுதியுள்ளார்கள். அருணகிரிநாதர் தமது நூலான திருப்புகழில் திருமலை முருகனைப் புகழ்ந்து பாடியுள்ளார்.

தண்டபாணி சுவாமிகள் முருகன் மீது பல பாடல்கள் இயற்றியுள்ளார். கவிராசபண்டாரத்தையா என்னும் புலவர்பெருமான் திருமலைமுருகன் பிள்ளைத்தமிழ், திருமலைமுருகன் அந்தாதி போன்ற நூல்களைப் பாடியுள்ளார். திருமலைமுருகன் குறவஞ்சி, திருமலை முருகன் நொண்டி நாடகம், திருமலை கறுப்பன் காதல் போன்ற நூல்களும் உள்ளன.திருமலைக் குமாரசுவாமி அலங்கார பிரபந்தம், திருமணிமாலை,திருத்தாலாட்டு போன்ற நூல்களும் இம்முருகப்பெருமான் புகழ்பாடுகின்றன.

அகத்தியர், கற்புக்கரசி கண்ணகி, சப்தகன்னியர், இம்முருகனை வழிபட்டு வந்துள்ளனர். பந்தளமஹாராஜா, சொக்கம்பட்டி குறுநில மன்னர் சிவனஞ்சணைத்தேவர், பூவாத்தாள். சிவகாமி பரதேசியார் போன்ற அருளாளர்கள் இக்கோயில் வளர்ச்சிக்கு உறுதுணை செய்துள்ளார்கள்.

சிவகாமி பரதேசியார் நன்செய், புன்செய் நிலங்களையும், தோப்புகளையும் இம்முருகப் பெருமானுக்குத் தானமாக வழங்கியுள்ளார். மேற்குத்தொடர்ச்சி மலைச்சரிவில் “ஓம்” என்ற வடிவம் கொண்ட உயர்ந்த குன்றில் நானூறு அடி உயரத்திற்கு மேல் இக்கோயில் உள்ளது.

நீலங்கொள் மேகத்தின் மயில்மீதே
நீவந்த வாழ்வைக்கண் டதனாலே
மால்கொண்ட பேதைக்குன் மணநாறும்
மார்தங்கு தாரைத்தந் தருள்வாயே
வேல்கொண்டு வேலைப்பண் டெறிவோனே
வீரங்கொள் சூரர்க்குங் குலகாலா
நாலந்த வேதத்தின் பொருளோனே
நானென்று மார்தட்டும் பெருமானே….

– திருப்புகழ்





 





 





 





 





 





 





 





 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version