இஸ்லாமாபாத்:
பவுன்சர் பந்து வேகமாகத் தாக்கியதில், பாகிஸ்தானில் உள்ளூர் கிரிக்கெட் விளையாட்டு வீரர் மரணம் அடைந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பாகிஸ்தானில் உள்ளூர் கிரிக்கெட்டில் முதல் தர போட்டிகளில் விளையாடி வந்த இளம் வீரர் ஜுபைர் அகமது. இவர், பாகிஸ்தானில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தில் உள்ல மர்தான் மாவட்டத்தில், ஆகஸ்ட் 14 ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் பங்கேற்றார். அப்போது, பவுன்சர் பந்து வேகமாக அவரது தலையில் தாக்கியதில், அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்தார். ஜூபைர் அகமது மரணத்துக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம். அது தனது டிவிட்டர் செய்தியில், பேட்ஸ்மேன்கள் ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளது.
மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் ஆஸ்திரேலிய துவக்க வீரர் பிலிப் ஹூக்ஸ் உள்ளூர் போட்டியில், பவுன்சர் பந்து பின்கழுத்துப் பகுதியில் தாக்கப்பட்டு, மைதானத்திலேயே நினைவிழந்து உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அப்போது, கிரிக்கெட் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதன் பின்னர் ஹெல்மெட் அணிந்து விளையாட வேண்டியதன் அவசியத்தை வீரர்கள் பலரும் முன்னிறுத்தினர். அண்மையில் பயிற்சி ஆட்டத்தின் போது ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னருக்கு ஹேசல்வூட் வீசிய பந்து கழுத்துப் பகுதியை பலமாகத் தாக்கியது.
இவ்வாறு இருக்கும்போது, மீண்டும் இப்படி ஒரு துயரச் சம்பவம் நிகழ்ந்திருப்பது கிரிக்கெட் உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.