கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தான் ஓய்வு பெறும் திட்டம் இல்லை என்று கூறியுள்ளார் மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல். உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெலிங்டனில் நடந்த 4-வது காலிறுதிப் போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி 143 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்திடம் தோல்வி அடைந்தது. இதன் மூலம் அரை இறுதி வாய்ப்பையும் இழந்து போட்டித் தொடரில் இருந்து வெளியேறியது. இந்தத் தோல்விக்குப் பின்னர் மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘நான் காயத்தால் அவதிப்படுவது உண்மை. ஆனாலும் நான் எந்த வடிவிலான கிரிக்கெட் ஆட்டத்திலும் இருந்து ஓய்வு பெறும் திட்டம் இப்போதைக்கு இல்லை. வரும் 2016 ஆம் ஆண்டு நடைபெறும் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியிலும் மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்காக விளையாட விரும்புகிறேன். உலகக் கோப்பை போட்டியில் எங்கள் அணி சிறப்பாகவே செயல்பட்டது’ என்று கூறினார். மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்காக விளையாடிய கிறிஸ் கெய்ல் ஒரு போட்டியில் சதம் அடித்தும் நியூசிலாந்து அணிக்கு எதிராக அரை சதம் அடித்தும் அசத்தினார்.