சிட்னி: போட்டியின் போது களத்தில் ஆக்ரோஷமாக செயல்பட்டு ஐசிசி விதிகளை மீறியதாக ஆஸ்திரேலிய அணியின் வாட்சன், பாகிஸ்தான் அணியின் வஹாப் இருவருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் அடிலெய்டில் வெள்ளிக்கிழமை அன்று நடந்த 3ஆவது காலிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. இந்தப் போட்டியின் போது, பாகிஸ்தான் அணியின் வஹாப் ரியாஸை ஆஸ்திரேலிய அணியினர் சீண்டி விட்டு வேடிக்கை பார்த்தனர். இதேபோல் ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வாட்சன் பேட்டிங் செய்தபோது, பவுன்சராகப் பந்துகளைப் போட்டு, வஹாப் ரியாஸ் சீண்டிவிட்டார். மேலும், நான் வீசும் பந்தை அடித்துப் பார் என்றும் சவால் விடும் வகையில் சைகை செய்தார். இருவரின் நடத்தை குறித்தும் விசாரணை நடத்திய போட்டி நடுவர் ரஞ்சன் மதுகுலே வஹாப் ரியாசுக்கு போட்டி கட்டணத்தில் 50 சதவீதமும், ஷேன் வாட்சனுக்கு போட்டி கட்டணத்தில் 15 சதவீதமும் அபராதமாக விதித்தார். இருவரும் தவறை ஒப்புக்கொண்டதால் பிரச்னை தீர்க்கப்பட்டு விட்டதாக ஐசிசி தெரிவித்தது.