வாஷிங்டன் : மோடி தலைமையில் இந்தியாவில் நடைபெற்று வரும் ஆட்சியின் காரணமாக தெற்காசியாவில் நம்பிக்கையும், புத்துணர்வும் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கா துணைச் செயலர் பேசினார். அமெரிக்காவில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தெற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கான அமெரிக்க துணை செயலாளர் நிஷா தேசாய், கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற தேர்தலுக்கு பின் பொறுப்பேற்ற மோடியின் ஆட்சியால் தெற்காசிய நாடுகளில் புதிய நம்பிக்கையும், புத்துணர்வும் ஏற்பட்டுள்ளது. இது வரலாற்றிலேயே மிகப் பெரிய ஜனநாயக நடைமுறை. மோடி ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு இந்தியா உடனான அமெரிக்காவின் உறவு மற்ற நாடுகளை விட பலமடைந்துள்ளது. அமெரிக்க அதிபர் ஒபாமாவின் இந்திய குடியரசு தின விழா வருகை இரு நாடுகளின் உறவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதனால் இருநாடுகளின் பாதுகாப்பு பொருளாதாரம், சுற்றுப்புறம் குறித்த நோக்கங்கள் ஆகியவற்றில் புதிய எழுச்சியை ஏற்படுத்தி உள்ளது. தெற்காசிய பிராந்தியத்தில் மட்டுமின்றி உலக அளவிலும் அமெரிக்காவின் முக்கிய கூட்டணி நாடாக இந்தியா மாறி உள்ளது. மோடி-ஒபாமா இடையே போடப்பட்ட ஒப்பந்தத்தால் பொருளாதாரம், பெண்கள் அதிகாரம், மனித உரிமைகள், ஆட்சி முன்னேற்றம் ஆகியவை மிகவும் பலமடைந்துள்ளன… என்றார்.