நேபாளத்தில் துருக்கி விமானம் ஒன்று வழுக்கிச் சென்றபடி வயலுக்குள் பாய்ந்தது. இதில் பயணம் செய்த 238 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இன்று காலை 7:40 மணியளவில் துருக்கியில் இருந்து நேபாளம் வந்த துருக்கி ஏர்லைன்சுக்குச் சொந்தமான ஏ330 ரக பயணிகள் விமானம் காத்மண்டு விமான நிலையத்தில் தரையிறங்கியது. அப்போது, கடும் பனிப்பொழிவு இருந்ததால், விமானம் ஓடுபாதையில் இருந்து விலகியது. அப்போது விமானத்தில் 227 பயணிகள், 11 விமானப் பணியாளர்கள் இருந்தனர். விமானம் வயல் வெளிக்குள் வழுக்கிச் சென்றதை அடுத்து விமானத்தின் அவசரக் கதவு திறக்கப்பட்டது. அதன் வழியாக உடனடியாக அனைத்து பயணிகளும் காயமின்றி மீட்கப்பட்டனர். இஸ்தான்புல் நகரில் இருந்து காத்மண்டு வந்த இந்த விமானத்தில் பயணம் செய்தவர்கள் பெரும்பாலும் வெளிநாட்டவர்கள் என்றும், விமானம் பனி மூட்டம் காரணமாக விமான ஓடுதளத்திற்கும், டாக்சி பாதைக்கும் இடையில் இறக்கப்பட்டதால், இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விமானத்தில் முன் பக்க சக்கரங்கள் மற்றும் முன் பகுதி பெரிதும் சேதமடைந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. [su_youtube url=”https://www.youtube.com/watch?v=kG7czm9EjK8″]