![]()
புது தில்லி: எல்லைக்குள் அத்துமீறி நுழைபவர்களை சுடும் அதிகாரம் கடற்படைக்கு உள்ளது என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க மீண்டும் உறுதிபடக் கூறியுள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை பயணத்தை முன்னிட்டு, ஆங்கில செய்தி சேனலான என்.டி.டி.வி.க்கு அவர் பேட்டி அளித்துள்ளார். அதில், “இலங்கையின் எந்த ஒரு பகுதியிலும், யாராவது எங்களது கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்தால் அவர்களைச் சுடும் உரிமை இலங்கைக் கடற்படைக்கு உள்ளது. இது ஒன்றும் புதிதல்ல” என்று கூறியுள்ளார். முன்னதாக, பிரதமர் மோடி இலங்கைக்கு பயணம் செய்வதற்கு முன்னால், சென்னையில் இருந்து இயங்கும் செய்தி சேனலான தந்தி டிவிக்கு அளித்த பேட்டியில் ரணில் விக்ரமசிங்க, “அனுமதியின்றி என்னுடைய வீட்டுக்குள் யாரேனும் நுழைந்தால், அவர்களை நான் சுட முடியும், அதனால் அவர்கள் உயிரிழக்கலாம். நான் இதனைச் செய்ய சட்டம் அனுமதித்துள்ளது. இலங்கை கடற்பகுதியில் அத்துமீறி நுழையும் மீனவர்களைச் சுட கடற்படைக்கு அதிகாரம் உள்ளது,” என்று கூறினார். ரணீலின் இக்கருத்துக்கு தமிழகத்தில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜிடம், மோடி பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில் இப்படி தெரிவித்திருக்கக் கூடாது என்று அவர் வருத்தம் தெரிவித்ததாக சுஷ்மா ஸ்வராஜ் நாடாளுமன்றத்தில் கூறினார். ஆனால் மீண்டும் அதே கருத்தையே ரணில் இப்போது தெரிவித்துள்ளார். விக்ரமசிங்க மேலும் கூறுகையில், இந்திய பிரதமர் மோடியின் இலங்கை பயணம் வெற்றிகரமாக அமைந்தது என்றும், இரு நாடுகளும் மீனவர் பிரச்னையை சுமூகமாகப் பேசித் தீர்க்க முயற்சித்து வருவதாகவும் கூறினார்.