திரிபோலி லிபியா தலைநகர் திரிபோலியில் உள்ள கோரிந்தியா சர்வதேச சுற்றுலா விடுதிக்குள் புகுந்த பயங்கரவாதிகள் 3 காவலர்களை சுட்டுக் கொன்றனர். மேலும், அங்குள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை பிணையக் கைதிகளாகவும் பிடித்து வைத்துள்ளனர். குண்டு துளைக்காத கவசம் அணிந்து முகத்தை மூடியபடி 5 பேர் விடுதியில் நுழைந்து கண்மூடித்தனமாக சுட்டதாக விடுதி மேலாளர் அசன் அல்-அபே தெரிவித்தார். கடற்கரை ஓரமாக உள்ள இந்த விடுதியில் நுழைந்த அவர்கள், வெளியில் நிறுத்தப்பட்டிருந்த காரை வெடிகுண்டு வைத்து தகர்த்துள்ளனர். இந்த சத்தம் கேட்டது விடுதியில் தங்கியிருந்த பயணிகள் அனைவரையும் வெளியேறும் படி மேலாளர் கூறியுள்ளார். உடனடியாக வெளியேறிய பயணிகளுடன் அபேவும் வெளியே வந்துள்ளார். ஓட்டலில் தங்கியிருக்கும் பெரும்பாலானவர்கள் ஐரோப்பா, துருக்கி ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. மர்ம நபர்களிடம் பலர் பிணைக் கைதிகளாக சிக்கி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதனிடையே இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர்.