வாஷிங்டன்:
வீட்டோ அதிகாரம் கொண்ட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக அமெரிக்கா மீண்டும் ஆதரவு தெரிவித்துள்ளது.
ஐநா பாதுகாப்பு கவுன்சிலை விரிவுப்படுத்த விவாதிக்கக் கோரும் வரைவுத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந் நிலையில், இந்தியாவுக்கு அமெரிக்கா தனது ஆதரவை தெரிவித்துள்ளது. வாஷிங்டனில், இந்திய – அமெரிக்க அதிகாரிகளிடையே முதன்முறையாக நடைபெற்ற வர்த்தக ரீதியிலான பேச்சுவார்த்தையின் முடிவில் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. அந்தக் கூட்டறிக்கையில், பாதுகாப்பு அவையில் நிரந்தர உறுப்பினராகும் இந்தியாவின் நீண்டகால முயற்சிக்கு ஆதரவு தெரிவிப்பது என முடிவு செய்யப்பட்டதாம்.
சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை நிர்வகிக்கும் பணியில், தொடர்ந்து இருநாடுகளும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சிறப்பான பங்களிப்பை வழங்கும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியப் பெருங்கடல், ஆசிய-பசிபிக் மண்டலம் உட்பட உலகம் முழுவதும் அமைதி, ஸ்திரத்தன்மை, வளம் ஆகியவற்றை கடைபிடிப்பதில் இருநாடுகளும் முக்கிய பங்களிப்பை வழங்கி வருவதாகவும் கூட்டறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.