இது குறித்து விஜய் டிவி.,யும் உறுதிப் படுத்தியுள்ளது. மேலும், வனிதா விஜயகுமாரிடம் வழக்கமான விசாரணை நடத்ததான் போலீஸார் வந்ததாகவும் கூறியது. இருப்பினும், இதுவரை எந்த முடிவும் எடுக்கப் படவில்லை என்றும், அவரை பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றுவதற்கான எந்த முடிவும் டிவி நிர்வாகத்தால் எடுக்கப் படவில்லை, இப்போதும் பேச்சுதான் நடந்து கொண்டிருக்கிறது என்று கூறியுள்ளனர் டிவி தரப்பினர். இதே போல் இன்னொரு பங்கேற்பாளர் மீதும் ஒரு மோசடி வழக்கு இருப்பதாகவும், சென்னை போலீசார் இது குறித்து விசாரித்து வருவதாகவும் டிவி.,தரப்பில் கூறப்பட்டது.
நடிகர் விஜயகுமார் – மஞ்சுளா தம்பதியரின் மூத்த மகள் வனிதா விஜயகுமார்! இவருக்கு முன்னாள் கணவர்கள் 2 பேர். முதல் கணவர் நடிகர் ஆகாஷுக்கு ஒரு மகன் உள்ளார். வனிதாவின் இரண்டாவது கணவர் தொழில் அதிபர் ஆனந்தராஜூக்கு 10 வயதில் ஒரு மகள் உள்ளார். அவரை பிரிந்து 3-வதாக நடன இயக்குனர் ராபர்ட் உடன் வாழ்ந்து வந்தார்.
இவர், இரண்டாவது கணவரை பிரிந்தபோது, அவர்களது மகள் தனது தந்தையுடன் இருக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. சில மாதங்களுக்கு முன்பு தனது மகளைப் பார்க்க ஐதராபாத் சென்ற வனிதா, கணவர் ஆனந்தராஜுக்குத் தெரியாமல் மகளை சென்னைக்கு அழைத்து வந்துவிட்டாராம். இது குறித்து ஆனந்தராஜ் அளித்த புகாரின் பேரில், தெலங்கானா காவல்துறையினர் கடத்தல் வழக்குப் பதிவு செய்து வனிதாவை தேடி சென்னை வந்தனர். வனிதா தலைமறைவாக உள்ளார் என்று கூறி வழக்கை விசாரிக்காமல் கிடப்பில் போட்டனர்.
இந்நிலையில் வனிதா, விஜய் டிவி.,யின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருப்பதால், அவர் தலைமறைவாகவில்லை என்பது உறுதியானது. இதை அடுத்து ஆனந்தராஜ், மீண்டும் தெலங்கானா காவல்துறைக்கு தகவல் அளித்தார். இந்நிலையில், கடத்தல் வழக்கில் தொடர்புடைய வனிதா விஜயகுமாரை கைது செய்வதற்காக தெலங்கானா காவல்துறையினர் சென்னை வந்தனர். பூந்தமல்லியில் பிக்பாஸ் அரங்கம் அமைக்கப்பட்டுள்ள ஈ.வி.பி. பிலிம் சிட்டிக்கு சென்று விசாரணை நடத்தினர்.
வனிதாவை கைது செய்ய ஒத்துழைக்குமாறு, டிவி நிகழ்ச்சி தயாரிப்பாளரிடம் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் முடிவு எட்டப்படவில்லை. இதனால் அவர்கள் நசரத்பேட்டை காவல் நிலையத்திற்கு சென்று தமிழக போலீஸிடம் உதவி கோரினர். போலீசார் டிவி நிகழ்ச்சித் தயாரிப்பாளரை அழைத்து வனிதாவையும், கடத்தப்பட்டதாகக்கூறப் பட்ட சிறுமியையும் போலீசிடம் ஒப்படைக்க அறிவுறுத்தினர்.
மேலும், கடத்தல் வழக்கில் சம்பந்தப்பட்ட நடிகை வனிதாவை ஒப்படைக்க மறுக்கும் பட்சத்தில், பிக்பாஸ் அரங்கத்திற்குள் புகுந்து வனிதாவை கைது செய்து அழைத்துச் சென்று குழந்தையை மீட்போம் என்று போலீஸார் கூறினராம்.
இந்நிலையில், கடத்தல் வழக்கில் தொடர்புடையவர்கள் பதுங்கும் இடமாகவும் அவர்களைப் பாதுகாக்கும் இடமாகவும் பிக்பாஸ் வீடு உள்ளது என்று தெலங்கானா போலீஸார் கூறியுள்ளனர்.