- Ads -
Home உரத்த சிந்தனை மாட்டுக்கறிக்காக… பற்றி எரிகிறது… உயிர்மூச்சு தரும் அமேசான் காடு!

மாட்டுக்கறிக்காக… பற்றி எரிகிறது… உயிர்மூச்சு தரும் அமேசான் காடு!

amazon forest fires

பிரேஸில் அமேஸான் காடுகள் பற்றி எரிகின்றன. எதனால் தெரியுமா?

உலகின் மாட்டுக்கறி ஏற்றுமதியில் முன்னணியில் இருக்கும் நாடு பிரேஸில்.  மாட்டுக்கறி அதிகம் கிடைக்கவேண்டுமானால் மாடுகளை அதிகம் வளர்க்க வேண்டும். மாடுகளை அதிகம் வளர்க்க வேண்டு மென்றால் அவற்றுக்கான தானியங்கள், மேய்ச்சல் நிலங்கள் தேவை. பிரேஸிலில் இப்போது காடு பற்றி எரிவது அதற்காகத்தான்.

பொதுவாகவே காட்டை அழித்து விவசாயம் செய்வதென்பது ஆதிகால வழிமுறைதான். பிரேஸிலுக்கு உலகின் மாட்டுக்கறிச் சந்தையில் மேலும் மேலும் வெற்றியைக் குவிக்கும் வெறி இருக்கிறது. எனவே, எரியும் காட்டைத் தள்ளி நின்று வேடிக்கை பார்க்கிறார்கள்.

தற்போது சீனாவும் ஹாங்காங்குமே மாட்டுக்கறியை பிரேஸிலிடமிருந்து அதிகம் வாங்கிக் குவிக்கின்றன. பிரேஸில் உலகின் பிற நாடுகளுக்கான மாட்டுக்கறித் தேவையையும் பூர்த்தி செய்து கொள்ளை லாபம் ஈட்டத் துடிக்கிறது. அதன் ஓர் அங்கமாகவே விபத்து போல் நடந்திருக்கும் இந்த அமேஸான் காட்டுத் தீ.

இதைத் தடுக்க உலகம் இப்போது களமிறங்கியிருக்கிறது. ஃபின்லாந்து இனிமேல் பிரேஸிலில் இருந்து வரும் மாட்டுக்கறியை இறக்குமதி செய்யமாட்டேன் என்று அறிவித்திருக்கிறது. அதிக வரி விதிப்பு போன்ற நடவடிக்கைகளைப் பிற நாடுகளும் எடுத்துள்ளன. டைட்டானிக் கதாநாயகன் டிகாப்ரியோ உலக மக்களை மாட்டுக்கறி தின்பதில் இருந்து வெளியேறுபடிக் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

பாரதம் இந்த விஷயத்தில் மெளனமாக இருப்பது பெரிதும் வேதனைக்குரியது. வெட்கத்துக்குரியது. புத்தர், மகாவீரர், திருவள்ளுவர், வள்ளலார் என பாரதத்தில் தோன்றிய ஞானிகள் அனைவருமே புலால் மறுப்பை முக்கிய அறமாக முன்வைத்திருக்கிறார்கள். அதிலும் சமணம் அந்த விஷயத்தில் அதை மட்டுமே ஒரே அறமாக முன்வைத்திருக்கிறது என்று சொல்லும் அளவுக்கு புலால் மறுப்பை தனது முத்திரை முழக்கமாக வைத்திருக்கிறது.

இந்து மதம் பசுவைப் புனிதமாக மதித்து வந்திருக்கிறது. மனிதர்களை மாமிசத்தில் இருந்து விலக்கவும் முடியாது; அதே நேரம் அதீத மாமிச வெறியர்களாகவும் அவர்கள் ஆகிவிடக்கூடாதென்ற இந்து மதத்துக்கே உரிய எதையும் கறாராக வலியுறுத்தாத ஜனநாயகத் தன்மை சார்ந்து மாட்டுக்கறியை மட்டுமே முற்றாக தவிர்க்கச் சொல்லியிருக்கிறது. அதை மறுதலிப்பவர்களைக் கூட (இறந்த மாடுகளை சாப்பிட்டுக்கொள்ளுங்கள் என்று சொல்லி) அவர்களுக்கான உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுத்து அங்கீகரித்தே வந்துள்ளது.

உலகம் பல்வேறு விஞ்ஞான, தொழில்நுட்ப சாதனைகளைச் செய்யத்தொடங்கி பல காலம் ஆகிவிட்டது. பாரதம் வானவியல் துறையில் பழங்காலத்திலேயே முன்னணியில் இருந்ததால் இன்றும் அது விண்வெளி சார்ந்த விஷயங்களில் முன்னணியில் இருக்க விரும்புவதில் தவறே இல்லை.

ஆனால், பாரதத்தின் தனிச் சிறப்பான குணங்களில் ஒன்று பசுவைப் புனிதமாக மதிப்பது; புலால் உணவை மறுப்பது. இந்த விஷயத்தில் பாரத விஞ்ஞானிகள் ஒரு அடி கூட இதுவரை எடுத்துவைக்கவில்லை என்பது மிகப் பெரிய தலைக்குனிவு.

சமணர்களும் வள்ளலார் வழியில் வந்தவர்களும் தீர்த்திருக்கவேண்டிய விஷயம் இது. பசுவைப் புனிதமாக மதிக்கும் இந்துக்கள் செய்திருக்க வேண்டிய செயல் இது.

மாமிசத்துக்கு மாற்றாக அதே சுவை, அதே ஊட்டச் சத்து கொண்ட செயற்கை மாமிசத்தைத் தயாரிக்கும் ஆராய்ச்சியில் மாமிசத்தை விரும்பி உண்ணும் பல நாடுகள் ஈடுபட்டு வருகின்றன. இது மிகவும் வேதனையான வேடிக்கை.

வின்ஸ்டன் சர்ச்சில் கோழியின் காலை மட்டுமே தின்பதற்காக முழு உடம்பையும் எதற்காக தீனிபோட்டு வளர்க்க வேண்டியிருக்கிறது; சோதனைச் சாலையில் சீக்கிரம் கண்டுபிடியுங்களேன் என்று சொன்னதாகச் சொல்லப்படுகிறது.

பிற உயிர்களையும் தம் உயிர் போல் மதிக்கும் உன்னத தர்மம் நேர்வழியில் கவனம் செலுத்தியிருக்க வேண்டிய விஷயம் இது.

உண்மையில் மாமிசத்துக்கான மாற்று உணவு கண்டுபிடிக்கப் பட்டாயிற்று. அதன் விலைதான் நான்கு மடங்கு அதிகமாக இருக்கிறது. அதுவும் கூட முதன்முதலில் ஆய்வகத்தில் உற்பத்தி செய்யப்பட்டபோது விலங்கைக் கொன்று பெறப்படும் மாமிசத்தைவிட ஆயிரம் மடங்கு விலை அதிகமாக இருந்தது. தற்போது அது மளமளவெனக் குறைந்து கொன்று பெறப்படும் மாமிசத்தைவிட வெறும் பத்து மடங்கு விலை மட்டுமே அதிகமாக இருக்கிறது.

செயற்கை மாமிசம் பல வகைகளில் நல்லது. முதலாவதாக எந்த உயிரையும் கொல்லாமல் பெறப்படுகிறது. அடுத்ததாக, ஆய்வகங்களில் தயாரிக்கும் மாமிசத்தில் தேவையான ஊட்டச் சத்துகளை சேர்ப்பது எளிது.

இப்போது ஆடுமாடுகளை வளர்க்க/அவற்றுக்கான தானிய புல்வெளிக்காக ஆகும் நிலத்தில் பத்தில் ஒரு பங்கு இருந்தாலே போதும். தற்போது செலவிடப்படும் மின் சக்தியில் 45% செலவிட்டாலே போதும்.

சூழல் மாசு விஷயத்தில் இப்போதைய இறைச்சிக் கூடங்கள் மூலம் ஏற்படும் பாதிப்பில் 4% மட்டுமே சோதனைச் சாலை இறைச்சி உற்பத்தியில் ஏற்படும். உலகை மாபெரும் கோசாலையாக மாற்றக் கிடைத்த அரிய வாய்ப்பும் கூட.

செல்வச் செழிப்பில் மிகுந்து நிற்கும் பாரத சமண சமூகம் மாமிசத்துக்கு மாற்று உணவைக் கண்டுபிடிக்கும் பரிசோதனைக்கு (இதுவரை கண்டுபிடிகப்பட்டவற்றுக்கு) பொருளுதவி முதல் அனைத்துவகை ஆதரவையும் தரவேண்டும். துறவு மேற்கொள்ளும் நூறு பேரை இந்த இலக்குடன் சோதனைச் சாலைக்கு அனுப்பிவைத்தால் போதும்.

இந்து தேசியவாதியால் ஆளப்படும் பாரத அரசு இதில் அதைவிடக் கூடுதலாகச் செய்ய முடியும். உலகுக்கு யோகாவை வழங்கியது எந்த அளவுக்கு பெருமைக்குரியதாக இருக்கிறதோ அதைவிட ஆயிரம் மடங்கு பெரிய சாதனையாக இது அமையும்.

ஓருயிரையும் கொல்லாமல் புலால் உண்ணாமல்  வாழ வழி செய்கிறவர்களை  உலகத்தில் உள்ள எல்லா உயிர்களும் கைகூப்பி வணங்கும்.

கட்டுரை : – பி.ஆர்.மகாதேவன்

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version