![வந்தேறிகளின் வம்பு பிரசாரங்களால் ஏற்பட்ட விளைவுகள்! ஆனால்... உண்மை என்ன? (பகுதி-2) 1 sanskrit school board](https://dhinasari.com/wp-content/uploads/2020/01/sanskrit-school-board.jpg)
வந்தேறிகளின் வம்பு பிரச்சாரங்கள்… விளைவுகள்…. உண்மைகள்…! சம்ஸ்கிருதம் வாழும் மொழி! இறந்த மொழியல்ல…! பகுதி-2
அமிர்தத்துக்குச் சமமான சமஸ்கிருத மொழியை பற்றி வந்தேறிகளும் அவர்களின் ஆதரவாளர்களும் செய்த தீய பிரச்சாரங்களை பற்றி முதல் பகுதியில் விவரித்திருந்தோம்…
சம்ஸ்கிருத மொழியின் சிறப்பை இன்னும் விரிவாகப் பார்ப்போம்.
‘கீர்வாணவாணி’ அதாவது தேவதைகளின் மொழியின் முக்கியத்துவத்தை விவரிக்கும் ‘ஆர்ஷ வித்யாபூஷணர்’ என்ற பட்டத்தோடு கூடிய ஸ்ரீஜடாவல்லப புருஷோத்தமர் ‘சித்ர சதகம்’ என்ற நூலில் இவ்வாறு விவரிக்கிறார்…
“சதாஸ்ரவந்தீ சுரபாஷிதா யா
சுச்சாரணா சூக்தி சுரத்ன வார்தி:
சுகாவ்ய சந்தோஹ சுதிஸ்சவாணீ
சா சம்ஸ்கிருதாக்யா சுக்ருதைக லப்யா”
- சம்ஸ்கிருத மொழி சூக்த ரத்தினங்களோடுகூடிய “பியூஷ ஜலதி”… அதாவது அமிர்தக் கடல். தேவதைகளின் தினசரி செயல் மொழி. பூர்வ ஜென்மத்தில் புண்ணியம் செய்து பிறந்தவர்களுக்கு மட்டுமே இந்த மொழி மீது விருப்பம் உண்டாகும்.
மேலே கூறிய காரணங்களால் சம்ஸ்கிருதம் பிடிக்காதவர்களுக்கும் நூல் அறிமுகம் இல்லாதவர்களுக்கும் “அனாத்யாயம் விஷம் சாஸ்திரம்” என்ற பழமொழியை போல சம்ஸ்க்ருதத்தின் மீது வெறுப்பு ஏற்படும்.
ஆங்கில மொழி மீது விருப்பம் என்ற பாம்பின் விஷம் உடலெங்கும் பரவிய அதிகாரி ஒருவர் அண்மையில், “சம்ஸ்கிருதம் இந்த தலைமுறைக்கு அனாவசிய மொழி” என்று வர்ணித்தார். இது அமிர்தமொழி மீது விஷம் கக்கும் அறியாமைக்கு எடுத்துக்காட்டு.
சம்ஸ்கிருத மொழியை கிறிஸ்தவ அரசர்கள் தம் சுயநலத்திற்காக வெறுத்தாலும் ஜிஞ்ஜாசுக்களான சிலர் எப்போதும் சம்ஸ்கிருத மொழியை ருசியறிந்து வியந்து போற்றினர்.
உலகில் உள்ள அனைத்து மொழி நூல்களிலும் மிகப்பழமையான சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட சம்ஸ்கிருத பொக்கிஷத்தை கண்ணாரக் கண்ட டாக்டர். என்பின்ஸ்டன் என்ற ஆங்கில அறிஞர் தன் வியப்பை வெளிப்படுத்தி, “சம்ஸ்கிருத நூல்களின் எண்ணிக்கை கிரேக்க, இலத்தீன் மொழி இலக்கியங்களை விட எத்தனையோ மடங்கு அதிகம்” என்றார்.
ஸ்ரீஹரி பிரசாத சாஸ்திரி, ஸ்ரீராஹுல் சாம்ஸ்கிருத்யயன் போன்ற பரிசோதகர்கள் செய்த ஆராய்ச்சியில் சம்ஸ்கிருத நூல்களின் எண்ணிக்கை இலட்சத்திற்கும் அதிகமாக இருப்பதாக தெளிவாகியது. அவரவர்களின் விருப்பத்திற்கேற்ப பயின்று கடைபிடிக்கும் வாய்ப்பு சம்ஸ்கிருத இலக்கியத்தில் உள்ளது.
“நி:ஸ்ரேணிகா மோக்ஷ பதஸ்ய ஸா வாக்
ஸ்வர்கஸ்ய சோபான ததிஸ்ச ரூடா
சிருங்கார வீராதி ரசாலவாலம்
சேவ்யா சமம் பின்ன ருசேர் ஜனஸ்ய!!”
- முக்தியை விரும்புபவர்களுக்கும் சுவர்க்கத்தின் படிகளை ஏற விருப்பமுள்ளவர்களுக்கும் கவிதை கேட்டு ரசிக்கும் ரசிகர்களுக்கும் சம்ஸ்க்ருதம் பயன்படுகிறது.
அமரவாணியான சமஸ்கிருத மொழிக்கு சேவைகள் பல செய்து அமரரான ‘ஆசார்ய புல்லெல ஸ்ரீராமச்சந்த்ருடு’ சம்ஸ்கிருத நூல்களை 12 பாகங்களாகப் பிரித்தார்.
- வேத நூல்கள். 2. வேதாங்கங்கள் 3. புராண இதிகாசங்கள் 4. தர்ம, அர்த்த, காம சாஸ்திரங்கள் 5. தரிசனங்கள் 6. பௌத்த ஜைன இலக்கியங்கள் 7. ஆயுர்வேத, விருக்ஷ, அஸ்வ, கஜ, இதர உபவேதங்கள். 8. காவியங்கள், நாடகங்கள், சம்பு, கதை இலக்கியங்கள் 9. அலங்கார சாஸ்திரங்கள் 10. விளக்கவுரைகள், நிகண்டுகள் முதலானவை 11. தந்திர நூல்கள், பக்தி இலக்கியம் 12. சிலை, தாமிரம், பத்ரம் போன்ற எழுதப்பட்ட நூல்கள், பிற விஷயங்கள்.
தொலைந்துபோன விஞ்ஞானம்:-
சம்ஸ்கிருத நூல்களும் வேத கலாச்சாரமும் மறையாமல் இருக்க வேண்டுமென்று விரும்பியவர்கள் தாம் அத்யயனம் செய்தும் பிறருக்கு கற்றுத் தந்தும் கூட பல நூல்கள் கால கர்ப்பத்தில் கலந்து போயின.
” சில்யாதி சஸ்யஸ்ய கதாஉபி தேசே
க்ஷயோஸ்தி சேத்காதரதாம் கதா: ஸ்ம:
தினே தினே வைதிக சம்ஸ்கிருதிர்யா
க்ஷயம் கதா தாம் ப்ரதி குத்ர சிந்தா?”
-(சித்ர சதகம்).
” ஒரு ஆண்டு நெற்பயிர் குறைந்தால் கூச்சலிடுவோம். ஒவ்வொரு நாளும் குறைந்துவரும் வேதக் கலாச்சாரம் பற்றிய கவலை இல்லையே ஏன்?” என்று கேட்கிறார் ஸ்ரீஜடாவல்லபர்.
“புலிகள், சிங்கங்களின் எண்ணிக்கை குறைந்து வருவதற்கு கவலைப்படுவது போலவே சாஸ்திர அறிஞர்கள் குறைந்து வருவதற்கும் கூட கவலைப்பட வேண்டும். பல பண்டிதர்களிடம் நலமாக உள்ள விஞ்ஞான பாரதி அவர்கள் வயது முதிர்ந்து மறைந்து போவதால் அந்தந்த வித்யைகள் தொலைந்து போகின்றன. இது வருத்தத்திற்குரியது” என்கிறார் டாக்டர் கே அரவிந்தராவு.
‘அபௌருஷேயங்களான” வேத நூல்கள் எக்காலத்தைச் சேர்ந்தவை என்று வரலாற்று ஆய்வாளர்கள் யாராலும் கூற இயலாது .அத்தனை புராதனமான நூல்கள் பாரம்பரியமாக, தலைமுறை தலைமுறையாக பாதுகாக்கப்படுகின்ற வேதக்குவியல் இன்றைக்கு ஆபத்தில் உள்ளது. வேத இலக்கியத்தில் ஸம்ஹிதை, பிராம்மணம், ஆரண்யகம் என்று மூன்று பாகங்கள் நமக்குத் தெரியும். இப்போது பல பிராம்மணங்கள் தொலைந்து போயின. உபநிஷத்துகள் பல மறைந்து போயின. வேதாங்கங்களில் முதலாவதான சிக்ஷா கிரந்தங்கள் பலவும் கிடைப்பதில்லை.
பாணினி வியாகரணம் எட்டு அத்தியாயங்கள் கொண்ட நூல். அதனால் இது அஷ்டாத்யாயி எனப்படுகிறது. இதன் மீது சுமார் 50க்கு மேல் வியாக்கியானங்கள் வெளிவந்தன. இவற்றில் பலவும் தொலைந்து விட்டன.
பாணினிக்கு முற்பட்டவரான யாஸ்கர் என்ற அறிஞர் (நிருக்தம்) வேதத்தின் பொருளை உணர்த்தும் நிகண்டுவிற்கு வியாக்கியானம் எழுதினார்.
இவருடைய நிருக்தத்திற்கு முன்பே இருந்த நூல்கள் இன்று கிடைப்பதில்லை.
அர்த்தசாஸ்திரத்திற்கு தொடர்புடைய அனேக சித்தாந்த நூல்கள் இருந்தன. கௌடில்யரின் அர்த்தசாஸ்திரம் அதிர்ஷ்டவசமாக கிடைத்துள்ளது. அதற்கு முன்பும் பின்பும் எழுதப்பட்ட பல நூல்கள் நமக்கு இப்போது கிடைப்பதில்லை.
பௌத்த மதத்தைச் சேர்ந்த ஆசாரியர்கள் பலப்பல நூல்களை பாலி மொழியில் மட்டுமின்றி சம்ஸ்கிருத மொழியிலும் எழுதினார்கள். ஆனால் பெரும்பாலான நூல்கள் பௌத்த மதத்தோடு சேர்ந்து வெளிநாடுகளுக்குச் சென்று விட்டதால் நமக்கு கிடைப்பதில்லை.
ஆயுர்வேதத்தில் மும்மூர்த்திகளாக பெயர்பெற்ற சரகர், சுஸ்ருதர், அஷ்டாங்க ஹ்ருதயரின் நூல்கள் ஈடு இணையில்லாதவை. இவற்றுக்குப் பிறகு எழுதப்பட்ட நூல்கள் பல கிடைத்தன. இவற்றின் திபெத்திய மொழி பெயர்ப்புகள் மூலம் இந்த விஷயம் தெரிய வருகிறது.
பரத முனிவரின் நாட்டிய சாஸ்திரத்திற்கு முற்பட்ட காலத்திலேயே நான்ட்டியம் குறித்த நூல்கள் பல இருந்தன.
சம்ஸ்கிருத மொழியில் சிற்ப சாஸ்திரம், ரசாயன சாஸ்திரம், விமான சாஸ்த்திரம், வானவியல் சாஸ்திரம்… இவ்விதம் பல சாஸ்திரங்கள் குறித்து நூல்கள் கிடைக்கின்றன. இவற்றை ஆங்கில அறிஞர்கள் பரிசீலிக்க வேண்டும். நூதன கண்டுபிடிப்புகளுக்கு சமஸ்கிருத மாதா வழி காட்டுவாள்.
(தொடரும்)
தெலுங்கில் – பி எஸ் சர்மா
தமிழாக்கம் – ராஜி ரகுநாதன்
Source: ருஷிபீடம் தெலுங்கு ஆன்மிக இதழ்- செப். 2019