காஷ்மீரின் சோக வரலாற்றில் மிக முக்கிய பங்கு வகித்ததும் காரணகர்த்தாவாக இருந்ததும் பண்டிட் ஜவஹர்லால் நேரு மற்றும் மகாராஜா ஹரிசிங் ஆகியோரின் ஈகோ மட்டுமே. நேருவுக்கு காஷ்மீரின் மகாராஜா ஹரிசிங்கை எள்ளளவும் பிடிக்காது. 1946 ஜூன் 20ந்தேதி காஷ்மீர் செல்ல முயன்ற நேருவை மகாராஜா ஹரிசிங் அனுமதிக்கவில்லை மேலும் மீறிய நேருவை கைதும் செய்தார். அப்போது இராமச்சந்திர காக் என்பவர் காஷ்மீரத்தின் பிரதமராக இருந்த தருணம். அவரது மனைவி ஒரு ஆங்கிலேய பெண்மணி.
இராமச்சந்திர காக் மகாராஜா ஹரிசிங்கிடம் காஷ்மீரம் தனி நாடாகவே இருக்கட்டும் என்று சொல்கிறார். ஆனால் சமயோசிதமாக சர்தார் பட்டேல் அவர்கள், காஷ்மீரத்து பிரதமரை மாற்ற செய்து அவருக்கு பதிலாக ஸ்ரீ மெஹர் சந்த் மகாஜன் என்பவரை பிரதமராக்குகிறார். (அப்போது காஷ்மீரம் தனி நாடாகவும், ஏனைய பாரதம் தனி நாடாகவும் இருந்தது என்பதை புரிந்து கொள்க)
ஸ்ரீ மகாஜன் மகாராஜா ஹரிசிங்கிடம் பாரதத்தோடு இணைந்துவிட வலியுறுத்தியும்கூட, மகாராஜா ஹரிசிங்கிற்கு மிகுந்த மனஉளைச்சலும் குழப்பமுமே தொடர்ந்தது. தன்னால் முடிந்தவரை காஷ்மீரத்தை தனி நாடாக தொடரச்செய்ய வேண்டும், ஆனால் அதற்கான வழிமுறை அவருக்கு தெரியவில்லை. ஒருபுறம் பாகிஸ்தான் தொடர்ந்து காஷ்மீரத்திற்குள் அத்துமீறிக் கொண்டிருக்கிறது, வன்முறையை கட்டவிழ்த்துவிடுகிறது, மிகச்சிறிய படைபலத்தோடு பாகிஸ்தானை எதிர்க்க வேண்டிய சூழ்நிலை.
இந்நிலையில், மகாராஜா ஹரிசிங் அவர்களுக்கு ஆர்.எஸ்.எஸ். சர்சங்கசாலக் ஸ்ரீ குருஜி எம்.எஸ்.கோல்வால்கர் மீது மிகுந்த மரியாதையும் மதிப்பும் உள்ளது என்பதை உணர்ந்த சர்தார் பட்டேல், மகாஜ்ன் மூலமாக குருஜியும் ஹரிசிங்கும் சந்தித்துப் பேச வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். முதலில் குருஜி அவர்கள் ராய் பகதுார் தேவன் பத்ரிநாத் என்பவரை மகாராஜாவை சந்தித்து பாரதத்துடன் இணையக் கோரிக்கை வைக்கிறார், ஆனால் மகாராஜா ஹரிசிங் அதற்கு உடன்படவில்லை.
அதன் பிறகு திரு.மகாஜன் அவர்கள் ஸ்ரீகுருஜி அவர்களே மகாராஜாவை சந்திக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைக்க, அதனை ஏற்று 1947 அக்டோபர் மாதம் 17ந்தேதி ஸ்ரீநகர் விமான நிலையத்தில் வந்திறங்குகிறார். அவருடன் ஸ்ரீ அபாஜி தட்டே, பாரிஸ்டர் நரிந்தர்ஜித்சிங் (அப்போதைய உ.பி.மாநிலத்தின் சங்கசாலக் மற்றும் மகாராஜாவின் திவான் அவர்களின் மருமகனுமான) , ஸ்ரீ வசந்தராவ் ஓக் மற்றும் ஸ்ரீ மாதவராவ் மூலே ஆகியோரும் எடனிருந்தனர்.
அக்டோபர் 18ந்தேதி ஸ்ரீ குருஜி மற்றும் மகாராஜா ஹரிசிங்குடனான சந்திப்பு காலை 10.30 மணிக்கு மகாராஜாவின் கரண் அரண்மனையில் நடந்தது. மகாராஜாவும் மகாராணி தாராவும் உற்சாகமான வரவேற்பு நல்கினர். மகாராஜா ஹரிசிங்
ஸ்ரீகுருஜியின் பாதங்களைப் பணிய முற்பட்ட போது, குருஜி அவர்கள் அவரை தடுத்து அவரது கைகளைப் பற்றி அன்பு காட்டுகிறார்.
அந்த சந்திப்பின்போது இருந்த முக்கியமானவர்கள் என்று சொன்னால் யுவராஜா கரண்சிங் (பின்னாளில்
வாஜ்பாய் காலத்தில் காங்கிரஸ் கட்சி சார்பாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு தோற்றவர்) தன்னுடைய வாலிப வயதில் இருந்தவர், ஸ்ரீ மேஹர்சந்த் மகாஜன் மற்றும் ஸ்ரீ அபாஜி தட்டே ஆகியோர்.
மகாராஜா ஹரிசிங் தன் தரப்பு வாதங்களை ஒவ்வொன்றாக எடுத்துரைக்கிறார். பாகிஸ்தானின் காட்டுமிராண்டி படைகளுக்கு தன்னுடைய படைகள் ஈடாகாது, இருந்தாலும் என் தேசம் காக்க இறுதிவரை போராட துணிந்துவிட்டோம். நாங்கள் போராடுவோம். துரதிருஷ்டவசமாக நாங்கள் பாகிஸ்தானை சார்ந்து இருக்க வேண்டியுள்ளது. சியால்கோட் ராவல்பிண்டி வழியாக எனது நாட்டிற்குள் நுழைய வேண்டியிருக்கிறது, இரயில்வேயும் சியால்கோட் வழியாகவே உள்ளது, விமான நிலையமோ லாகூரில் உள்ளது. இந்நிலையில் எப்படி பாரத நாட்டோடு எங்களது காஷ்மீரத்தை இணைப்பது சாத்தியம் என்று புரியவில்லை என்று புலம்புகிறார்.
குருஜி மிகவும் அமைதியாக இதையெல்லாம் கேட்டுக் கொண்டார். நீங்கள் சொல்வது உண்மையாக இருக்கலாம். ஆனால் பாரத நாட்டோடு இணைவது மட்டுமே தங்களது கொளரவத்திற்கும் பாதுகாப்பிற்கும் நன்மை பயக்கும். நீங்கள் கூறிய ஏனைய விஷயங்கள் நாளடைவில் சரி செய்யப்படக் கூடியதே. தயக்கம் தேவையில்லை என்று கனிவாக புரிய வைக்கிறார்.
ஸ்ரீ மெஹர்சந்த் மகாஜன் அவர்களும் குருஜி அவர்களின் கருத்தை ஆமோதிக்கிறார். மகாராஜா ஹரிசிங் அவர்களே பாகிஸ்தானின் காட்டுமிராண்டித்தனத்தை எதிர்கொள்ள இந்தியாவுடன் சேருவதே சாலச்சிறந்தது என்று கூறுகிறார்.
இருந்தும் மகாராஜாவிற்கு உடன்பாடில்லை. ஸ்ரீ குருஜி அவர்கள் தன்னுடைய கருத்துக்கள் பிடித்திருக்கிறதா என்று கேட்க, பிடித்திருக்கிறது ஆனால் என்னால் முடிவெடுக்க முடியவில்லை என்பதாக சொல்கிறார். (காரணம் நேருவுடனான கசப்பான அனுபவம்)
மகாராஜா மீண்டும் ஸ்ரீகுருஜி அவர்களிடம் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் தனக்கு எந்த வகையில் உதவ முடியும் என்று கேட்க, தற்போதைய சூழ்நிலையில் சங்கம் அந்தளவிற்கு ஒன்றும் செய்துவிட முடியாது, ஆயுதப் போருக்கு சங்கம் துணைபோக முடியாது என்று சொல்ல, மகாராஜா தன்னுடைய ஈகோ (பிடிவாதம்)வை துறந்தால் தீர்வு கிடைக்கும் என்று சொல்ல, மகாராஜா கண்களிலி்ருந்து கண்ணீர் பொலபொலவென்று வருகிறது. தங்களது கோரிக்கையை நிச்சயம் பரிசீலிக்கிறேன் என்று உத்தரவாதமும் தருகிறார்.
ஸ்ரீகுருஜி விடைபெறும் போது மகாராஜா காஷ்மீரத்து ஷால்களை பரிசாக கொடுத்து கௌரவிக்கிறார்.
கிளம்பும்போது ஸ்ரீ குருஜி மகாராஜாவிடம் ஒரு கோரிக்கை வைக்கிறார். தங்களது மக்கள் மனதில் நம்பிக்கை தளரக்கூடாது, வீரர்களும் உத்வேகம் பெற வேண்டும். அதற்கு முக்கியமாக தாங்கள் செய்ய வேண்டியது, யுவராஜா கரண்சிங்கை ஜம்மு பகுதிக்கு அனுப்பி வையுங்கள் என்பதாக.
அடுத்த 8 நாட்களுக்குள் ஜம்மு காஷ்மீரம் பாரதத்தின் அங்கமாக மாறியது.
பாகிஸ்தான் படையெடுத்து, வன்முறையை கட்டவிழ்த்து, கைப்பற்ற முயன்ற ஜம்மு காஷ்மீர், ஸ்ரீ குருஜி அவர்களின் மகாராஜாவுடனான சந்திப்பால், தீர்க்கமான, தெளிவான உரையாடலின் மூலம் பாரதத்தோடு இணைக்கப்பட்ட நாள் 26-10-1947.
நன்றி – ஆர்கனைசர்
(ஆர்கனைசரில் வந்த Thiru. R.C. Batura அவர்களின் கட்டுரயின் தமிழாக்கம்)
தமிழில்…: சுப்ரமணியன் ரமேஷ்