- Ads -
Home கட்டுரைகள் சம்ஸ்க்ருத நியாயமும் விளக்கமும்: காக தாளீய நியாயம்!

சம்ஸ்க்ருத நியாயமும் விளக்கமும்: காக தாளீய நியாயம்!

சம்ஸ்கிருத மொழி ஒரு காலத்தில் பாரத தேச மக்களின் பேச்சு மொழியாக விளங்கியது. இன்றைய இந்திய மொழிகளுக்கு தாய் மொழி அதுவே. உலகிற்கு விஞ்ஞானத்தை

samskrita nyaya

காக தாளீய நியாயமும் விளக்கமும்!

தெலுங்கில்: பிஎஸ் சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

உலக மொழிகளில் சிறப்பான இடத்தைப் பெற்ற மொழி சமஸ்கிருதம். இந்திய – ஐரோப்பிய குடும்பத்தைச் சேர்ந்த எந்த மொழியிலும் முழுமையான அறிவு பெற வேண்டும் என்றால் சமஸ்கிருத மொழியை அறிவது அவசியம். நவீன விஞ்ஞானத்திற்கு கணித அறிவு எத்தனை முக்கியமோ உலக மொழிகளுக்கு சம்ஸ்கிருதம் அதுபோல் தேவை என்பது கீழை, மேலை நாட்டு அறிஞர்கள் அனைவரும் அங்கீகரித்த உண்மை. உலக நாகரிகம் என்பது இந்தியப் பண்பாட்டின் விரிவாக்கமே.

சம்ஸ்கிருத மொழி ஒரு காலத்தில் பாரத தேச மக்களின் பேச்சு மொழியாக விளங்கியது. இன்றைய இந்திய மொழிகளுக்கு தாய் மொழி அதுவே. உலகிற்கு விஞ்ஞானத்தை அருளிய மொழியும் சமஸ்கிருதமே. உயர்ந்த வாழ்க்கைக்கான ஆதரிசங்களை போதித்த மொழி சம்ஸ்கிருதம்.

பாரத தேசத்தின் வைபவத்திற்கும் கீர்த்திக்கும் காரணங்கள் இரண்டு. ஒன்று சம்ஸ்கிருத மொழி. இரண்டாவது பாரத கலாச்சாரம். இவ்விரண்டும் நமக்கு பெருமை அளிப்பவை. செழுமையான, புராதனமான, நித்திய நூதனமான இந்த அமர பாஷையில் ரசிகர்களுக்கு ஆனந்தம் அளித்து, அற்புதம் என்று வியக்க வைக்கும் அம்சங்கள் பல உள்ளன. சமத்கார ஸ்லோகங்கள் புதிர்கள், நியாயங்கள்… இப்படி பலப்பல. 

சம்ஸ்கிருதத்தில் ‘நியாயம்’ என்ற சொல்லை- லா, ஜஸ்டிஸ்,ரைட் என்ற ஆங்கில பதங்கள் விளக்குகின்றன. தமிழில் இவற்றை பழமொழிகளாக பயன்படுத்துகிறோம். ஆனால் நியாயம் என்ற சொல்லுக்கு சமஸ்கிருதத்தில் பல அர்த்தங்கள் உள்ளன. நீதி, வழிமுறை, நியமம், யோக்கியதை, இணைப்பு, விவகாரம், விதம், உத்தரவு, தர்க்கம், நியாய சாஸ்திரம், மகாவிஷ்ணுவின் பெயர்… இப்படி எத்தனையோ.

இந்திய ‘சம்ஸ்கிருதி’ அதாவது கலாச்சாரம் கூறும் நியாயங்கள் என்ன?

பண்டிதர்களுக்கு பரிச்சயமான தர்க்க சாத்திரம் மட்டுமின்றி வேதாந்த உரைகளிலும் உலகியல் விவகாரங்களிலும் கூட உதாரணம் காட்டும்  சொல்லாடல்கள் பல உள்ளன.

மேலெழுந்தவாரியாகப் பார்க்கும்போது ஏதாவது ஒரு விலங்கின் பெயரோ, ஒரு பறவையின் பெயரோ, பலவித இயல்புகளின் பெயர்களோ அவற்றில்  காணப்படும். சாஸ்திர சம்பிரதாய சூத்திரங்கள் குறைவான எழுத்துக்களை கொண்டிருந்தாலும் ஆழமான பொருளோடு விளங்கும். அதேபோல்தான் இந்த நியாயங்களும்.

இந்திய முனிவர்களின் ஆய்வும் ஆலோசனைகளும் சாமானியர்கள் யாரிடமும் பார்க்க இயலாது.  குறைந்த எழுத்துக்களைக் கொண்ட இந்த நியாயங்களில் ஒரு சம்பவவோ, ஆர்வமூட்டும் ஒரு கதையோ மறைந்திருக்கும். இதைக் கேட்பவர்களுக்கு  முழுமையும் புரிய வேண்டும் என்பதற்காக ஒரு உதாரணமும் ஒளிந்திருக்கும்.

நியாயங்களில் ஒரு ஏளனம் தொனிக்கும். ஒரு ஆராய்ச்சி மிளிரும். மிகவும் கூர்மையாக இயற்கை குறித்த பார்வை இருக்கும். இதில் வேதாந்தம், அனுபவம், படிப்பினை, உபதேசம், தத்துவம், சுபாஷிதம் அளிக்கும் ஞானம்… அனைத்தும் இடம்பெற்றிருக்கும்.

காகதாளீய நியாயம்:-
காக: என்றால் காகம். தாளீயம் என்றால் பனம்பழம்.  இதனை தமிழில் காக்கை உட்கார பனம்பழம் விழுந்த கதையாக… என்கிறோம்.

யதேச்சையாக நடந்த செயல் என்பது இதன் பொருள். ஒரு காகம் பறந்து வருகிறது. நாம் பார்த்துக் கொண்டிருக்கும் போதே ஒரு பனை மரத்தின் மீது வந்து அமர்கிறது. ஒரு பழுத்த பனம்பழம் டமால் என்று மரத்திலிருந்து கீழே விழுகிறது. இதில் விந்தை என்னவென்றால் காகம் உட்கார்ந்த எடையால் பழம் விழுந்ததா என்றால்..  இல்லை. மிகவும் பழுத்த பழம் உதிரத் தயாராக இருந்தது. அது விழும் சமயத்தில் சரியாக காகம் வந்து அதன் மேல் அமர்ந்தது. இந்த இரு சம்பவங்களுக்கும் இடையில் பரஸ்பர தொடர்பு சிறிதும் இல்லாவிட்டாலும் இரண்டும் ஒரே நேரத்தில் நடந்தன. இப்படிப்பட்ட காகதாளீய நிகழ்வுகளை நாமும் கவனிப்பது உண்டு. இவை சிறிது சந்தேகத்திற்கும் சில நம்பிக்கைகளுக்கும் வழிவகுப்பதுண்டு. 

ஐம்பதாண்டுகளுக்கு முன் நடந்த ஒரு சம்பவம்… ஒருவர் வீட்டில் பிள்ளையார் சதுர்த்தி விரதம் நடக்கிறது. பூஜைக்காக தேங்காய் உடைக்கும்போது அடுத்த அறையில் படுத்திருந்த பாட்டி இறந்து போனாள். அப்போதிலிருந்து அவர்கள் வீட்டில் விநாயகர் சதுர்த்தி செய்வதும் இல்லை. தேங்காய் உடைப்பதும் இல்லை. ‘எங்கள் குடும்பத்துக்கு ஆகாது’ என்று மூன்று தலைமுறைகளாக ஒதுக்கி வருகிறார்கள்.

அந்த வீட்டுக்கு புதிதாக வந்த மருமகள் இந்த ‘காகதாளீய’ மனநிலையை உடைத்த சம்பவம் அண்மையில் நடந்தது. அந்தப் பெண்  தன் குருவின் அறிவுரைப்படி பிள்ளையார் சதுர்த்தி கொண்டாடினாள். தேங்காயும் உடைத்தாள். யாருக்கும் எந்த கெடுதலும் நேரவில்லை.

இப்படிப்பட்ட சம்பவங்கள் நிகழும்போது சில சந்தேகங்கள் எழுவதுண்டு. ஒரு வீட்டில் புது மருமகள் வந்த அதே நாளில் அவர்கள் வீட்டுக் கிழவர் ஒருவர் மரணித்தார். அந்தப் பழியை இந்த புது மருமகள் மீது போட்டார்கள். அது ஒரு துரதிருஷ்டம். விதிவசத்தால் நடக்கும் சில நிகழ்வுகளால் வேண்டாத ஐயங்கள் எழுவதும் காகதாளீய நியாயம் அளிக்கும் நீதியே.

தெய்வ நிர்ணயத்தால் நடக்கும் செயல்களுக்கு நானே காரணம் என்று கர்வப்படக் கூடாது…. இதனைக் கொண்டு மூட நம்பிக்கைகளை வளர்த்து கொள்ளவும் கூடாது என்ற செய்தியை இந்த நீதி சூத்திரம் நமக்கு அளிக்கிறது. 

நீலகண்ட தீட்சிதர் எழுதிய ‘கவி விடம்பன சதக‘த்தில் இவ்வாறு கூறுகிறார்: கபடமான ஜோதிடர்கள் சிலர் எதையும் நிச்சயமாகக் கூற மாட்டார்கள். இப்படியும் நடக்கலாம் அப்படியும் நடக்கலாம் என்று இரு விதமாகவும் கூறுவார்கள். இப்படி சந்தேகத்திற்கிடமாக  கூறுவதால் காகதாளீயமாக ஏதாவது ஒன்று நடக்காமல் போகுமா, என்ன?  

சர்வம் கோடி த்வயோபேதம்
சர்வம் காலத்வயாவதி !
சர்வம் வ்யாமி ஸ்ரமேவ
வகத்வ்யம் தெய்வ சிந்தகை:!

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version