சம்ஸ்கிருத நியாயமும் விளக்கமும் – பகுதி 4
தெலுங்கில்- பி.எஸ் சர்மா
தமிழில்- ராஜி ரகுநாதன்
“பிக்ஷுபாத ப்ரசார ந்யாயம்” – “இடத்தைக் கொடுத்தால் மடத்தைப் பிடுங்கின கதையாக…”
பிஷு – சந்நியாசி. பாத பிரசாரம் – காலை நீட்டுவது.
“விரல் வைப்பதற்கு இடம் கொடுத்தால் கால் வைத்துவிடுவான்” என்று கூறும் சந்தர்பத்தில் பயன்படுத்தும் நியாயம் இது.
சந்நியாசி வேடத்தில் வந்த ஒரு யாசகன் குளிர்கால இரவில் ஒரு இல்லறத்தானிடம் கொஞ்சம் இடம் கொடுக்கும்படி வேண்டினான். இரக்கப்பட்டு தன் வீட்டில் ஓரிரவு தங்க இடம் கொடுத்தான் இல்லறத்தான். அந்த கபட வேடதாரி வீடெங்கும் ஆக்கிரமித்தான். வீட்டிலுள்ளோர் வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. இதுவே ‘பிக்ஷுபாத பிரசார’ நியாயம்.
1600ம் ஆண்டு ஈஸ்ட் இந்தியா கம்பெனி நம் தேசத்திற்கு வந்தது. ‘அதிதி தேவோ பவ’ என்று சிந்திக்கும் நம் தேச அரசர்கள் அவர்களை வரவேற்றனர். நம் நாட்டிலிருந்து சுகந்த திரவியங்கள், இன்டிகோ பவுடர் (நீலி பொடி), பருத்தி, பட்டு, உப்பு போன்றவற்றை வாங்கி தம் தேசத்திற்கு கப்பல் மூலம் அனுப்பினார்கள். “மூலப் பொருட்களை சேமிப்பதற்கு கோடவுன்களை கட்டிக் கொள்வோம்” என்றார்கள். “சரி” என்றனர் அரசர்கள். “எங்கள் கோதுமையின் பாதுகாப்புக்காக எங்கள் போலீசாரை வரவழைத்துக் கொள்வோம்” என்றார்கள். “சரி” என்றனர்.
அந்த கபடக் கம்பெனி சிறிது சிறிதாக அரச சமஸ்தானங்களையும் அரசர்களையும் சாம, தான, பேத, தண்டம் ஆகிய உபாயங்களால் அடிமைப்படுத்தி தேசத்தையே கைப்பற்றினார்கள். நூற்றுக்கணக்கான ஆண்டுகள் நம் தேசத்தை உறிஞ்சி சக்கையாக்கினர்கள். இது ‘பிக்ஷு பாத பிரசார’ நியாயத்திற்கு ஒரு உதாரணம்.
‘ஒட்டகமும் கொட்டகையும்’ கதை நாம் சிறுவயதில் பள்ளியில் படித்திருக்கிறோம். ஒரு ஒட்டகம் மழையில் நனைகிறது என்று அது தலை நீட்டிக் கொள்வதற்கு இடம் அளித்தவர்களை கொட்டகையில் இருந்து வெளியேற்றியது.
மைனாரிட்டி ஓட்டுகளுக்கு ஆசைப்பட்டு ரோஹிங்காக்களை வரவழைத்துக் கொள்ளும் தலைவர்களின் வரலாற்று தவறுகளால் நம் ஹிந்துக்கள் தம் கொட்டகளைகளை இழந்து விடும் அநியாயத்தை இந்த ‘பிக்ஷு பாத ப்ரசார’ நியாயம் நினைவுபடுத்துகிறது.
விருந்தினராக தகுதியற்றவர்கள்-
‘அதிதி தேவோ பவ’ என்பது நம் கலாசாரம். ஆனாலும் தகுதியற்றவர்களை நம் வீடுகளில் விருந்தினராக வரவிடக் கூடாது என்றனர் நம் மூத்தோர். அந்த தகுதிகள் என்ன? யாரை வீட்டில் விருந்தினராக தங்க விடக் கூடாது?
அகர்மசீலம் ச மஹாசனம் ச மாயாவினம் லோகவிருத்த வ்ருத்தம் |
அதேஸகாலஜ்ஞ மனிஷ்ட வேஷம் ஏதான் க்ருஹே ந ப்ரதிவாஸயேத || (மகாபாரதம்)
பொருள்: எந்த வேலையும் செய்யாத சோம்பேறி, அளவுக்கதிகமாக சாப்பிடுபவர், ஏமாற்றுபவர், உலக வழக்கத்திற்கு மாறாக நடப்பவர், இடம், பொருள், ஏவல் அறியாதவர், மக்கள் வெறுக்கும் நடை உடை பாவனை கொண்டவர் – இவர்களை வீட்டில் விருந்தினராக அனுமதிக்கக் கூடாது.
நடை உடை பாவனையில் பணிவு, பண்பாடு அற்றவர்களை அருகில் நெருங்க விட்டால் நமக்கே ஆபத்து. தீவிரவாதி என்று தெரியாமல் வீட்டிற்குள் வைத்துக் கொள்வது நமக்கு ஆபத்து. அதேபோல் ஒழுக்கமற்றவரை வீட்டில் சேர்த்தால் அந்த குடும்பம், கிராமம், தேசம் கூட கெட்டுப் போகும் ஆபத்து உள்ளது. வேலை செய்யாமல் தின்று திரிபவரை வீட்டில் சேர்த்தால் பணி செய்பவர் கூட சோம்பேறியாக மாறிவிடுவர்.
இந்த சுபாஷிதம் மூலம் பிறர் வீட்டுக்குச் செல்லும் நம்மிடம் எந்த எந்த தீய குணங்கள் உள்ளனவோ தெரிந்து விடும். ஒருவர் வீட்டில் விருந்தினராக இருக்கும் போது எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் இந்த சுலோகம் நமக்கு வழிகாட்டுகிறது.