- Ads -
Home பொது தகவல்கள் ஆன்லைனை பயன்படுத்துங்கள் என கூறி விட்டு கட்டணம் வசூலிப்பது நியாயமா? அதிருப்தியில் மக்கள்!

ஆன்லைனை பயன்படுத்துங்கள் என கூறி விட்டு கட்டணம் வசூலிப்பது நியாயமா? அதிருப்தியில் மக்கள்!

bank

‘ஆன்லைன்’ பண பரிவர்த்தனைகளுக்கு வங்கிகள் கட்டணம் விதிப்பது வாடிக்கையாளரிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.நேரடி பணப் பரிவர்த்தனையை தவிர்த்து மின்னணு முறையில் பரிவர்த்தனைகள் மேற்கொள்ள மத்திய அரசு மக்களை ஊக்கப்படுத்தி வருகிறது.

வங்கிகளும் ’40 ஆயிரம் ரூபாய்க்கு மேல் என்றால் நேரில் வாருங்கள்; அதற்கும் குறைவான பரிவர்த்தனைகளை ‘ஆன்லைன்’ வழியிலோ ஏ.டி.எம். மையங்களிலோ மேற்கொள்ளுங்கள்’ என அறிவுறுத்தி உள்ளன.

மேலும் ‘ஆல் இன் ஒன்’ என அனைத்து பரிவர்த்தனைகளையும் அலைபேசி வழியாக ஒரே செயலியில் செயல்படுத்தும் வசதியையும் வங்கிகள் ஏற்படுத்திக் கொடுத்துள்ளன.

ஆன்லைன் பண பரிவர்த்தனைகளுக்கு என்.இ.எப்.டி. எனும் தேசிய மின்னணு நிதி பரிமாற்ற கட்டணம்; ஐ.எம்.பி.எஸ். எனும் உடனடி சேவை கட்டணம்; ஆர்.டி.ஜி.எஸ். எனும் ஒரு வங்கியில் இருந்து மற்றொரு வங்கிக்கு பணம் அனுப்பும் சேவைக்கான கட்டணங்களையும் ரிசர்வ் வங்கி நீக்கி உள்ளது.

இந்நிலையில் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை அடிப்படையில் வங்கிகள் கட்டணம் வசூலிப்பது வாடிக்கையாளர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து வாடிக்கையாளர்கள் கூறியதாவது:இணையதள வழி பரிவர்த்தனை செய்யுமாறு வங்கிகள் வலியுறுத்துகின்றன. அதற்கேற்ப ஆன்லைன் பரிவர்த்தனை மேற்கொண்டால் அதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.

‘ஆறு மாதத்திற்கு 90 பரிவர்த்தனைகள் மட்டுமே இலவசமாக செய்யலாம். அதற்கு மேல் செய்யப்படும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 2.25 ரூபாய் கட்டணம் விதிக்கப்படும்’ என கரூர் வைசியா வங்கியில் இருந்து எஸ்.எம்.எஸ். தகவல் வந்துள்ளது.அதேபோல் பாரத ஸ்டேட் வங்கியில் ‘அனைத்து ஆன்லைன் பரிவர்த்தனைகளும் இலவசமாக மேற்கொள்கிறோம்;

ஆன்லைனை பயன்படுத்துங்கள்’ என கூறி விட்டு கட்டணம் வசூலிப்பது சரியல்ல. இதில் ரிசர்வ் வங்கி தலையிட்டு ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிப்பதை தடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து கரூர் வைசியா வங்கி அதிகாரிகள் கூறியதாவது:இதர வங்கிகள் குறித்து எங்களுக்கு தெரியாது. எங்களது வங்கியில் எந்த நடவடிக்கையாக இருந்தாலும் ஆறு மாதத்திற்கு 90 பரிவர்த்தனைகள் மட்டுமே அனுமதிக்கப்படும்; அதற்கு மேல் கட்டணம் விதிக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து இந்திய ரிசர்வ் வங்கி அதிகாரிகள் கூறியதாவது:’ஆன்லைன்’ பரிவர்த்தனைகளுக்கு என கட்டணம் நிர்ணயிக்கப்படவில்லை. என்.இ.எப்.டி. மற்றும் ஆர்.டி.ஜி.எஸ். கட்டணங்களும் திரும்ப பெறப்பட்டுள்ளன.

ஆனால் குறிப்பிட்ட பரிவர்த்தனைகளுக்கு மேல் கட்டணம் விதிப்பது என்பது வங்கிகளின் தனிப்பட்ட முடிவு. இவ்வாறு அவர்கள் கூறினர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version