மகப்பேறு காலத்தில் பெண்கள் தன்னிச்சையாக மருந்துகள் சாப்பிடக் கூடாது என்று அரசு பொதுமருத்துவமனை இரைப்பை-குடல் அறுவைச் சிகிச்சை துறைத் தலைவர் டாக்டர் எஸ்.எம்.சந்திரமோகன் கூறுகிறார். உலக பெண்கள் தினத்தை முன்னிட்டு மகப்பேறு காலத்தில் பெண்களுக்கு இரைப்பை-குடல் பிரச்னை தொடர்பாக அவசர சிகிச்சை தேவைப்படும் நிலையில் மருத்துவ ரீதியாக அதைச் சமாளிப்பது குறித்து சென்னை மருத்துவக் கல்லூரியில் சனிக்கிழமை கருத்தரங்கு நடைபெற்றது.
இதில் அவர் பேசியது:- “பெண்கள் மகப்பேறு காலங்களில் ஏற்படும் பிரச்னைகளுக்கு தன்னிச்சையாக மருந்துகள் சாப்பிடக்கூடாது. மாறாக, டாக்டர்களின் பரிசோதனைக்கு பிறகு பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை தவறாமல் சாப்பிட வேண்டும்.மகப்பேறு காலத்தில் ஒட்டுக்குடல், பித்தப்பையில் கல், தொடர் குமட்டல் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு உடனுக்குடன் டாக்டர்களை அணுகுவதுடன் தேவைப்படும் பட்சத்தில் ஸ்கேன், ரத்தப் பரிசோதனைகளை அவசியம் மேற்கொள்ள வேண்டும். ரத்த அழுத்தம் இருக்கும் பெண்கள் தங்கள் உடல் நலனில் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும். உணவில் உப்பை அறவே தவிர்க்க வேண்டும். சர்க்கரை நோய் இருப்பின் மாத்திரைகள் சாப்பிடுவதை விட உணவு வகைகள் மூலம் அதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சிக்க வேண்டும். வயிற்றுப் பகுதியில் ஏற்படும் பிரச்னைகளுக்கு சம்பந்தப்பட்ட துறை நிபுணர்களிடம் ஆலோசனை பெறுவதன் மூலம் மேற்கொண்டு ஏற்படும் இடர்பாடுகளை முன்கூட்டியே தவிர்க்க முடியும்” என்றார் டாக்டர் சந்திரமோகன்.