“நீங்கள் புகைபிடிப்பீர்களா?”
ஒரு நாளைக்கே இவ்வளவு என்றால் ஒரு மாதத்திற்கு எவ்வளவு! ஒரு வருடத்திற்கு எவ்வளவு என்று பாருங்கள். சென்னை ஒரு நகருக்கே இத்தனை டன்கள் மாசு என்றால், இந்தியா முழுவதும் எத்தனை நகரங்கள்? எத்தனை லட்சம் வாகனங்கள்? அவைகள் வெளியேற்றும் நச்சுகள் எவ்வளவு? அப்பப்பா..! இப்பவே மூச்சு முட்டுது.!
ஓசோனின் குணம் ரத்தத்தில் கலக்கும் ஆக்சிஜனை தடுப்பது. ரத்தத்தில் ஆக்சிஜன் குறையும் போது ஆஸ்துமா உருவாகிறது. அதே நேரத்தில் நுரையீரலின் செயல்பாடும் குறைகிறது. இப்படி உருவாகும் ஓசோன் மழைக்காலத்தில் குறைவாகவும் வெயில் காலத்தில் அதிகமாகவும் இருக்கிறது.
இந்த பாதிப்புகள் பெரியவர்களை விட குழந்தைகளுக்கு அதிகம். குழந்தைகளின் உடல் எடையோடு கணக்கிடும் போது குழந்தைகள் பெரியவர்களை விட அதிக அளவில் உணவையும், நீரையும், காற்றையும் ஈர்த்துக் கொள்பவர்கள். குழந்தைகள் பெரியவர்களை விட 2 மடங்கு காற்றை சுவாசிக்கிறார்கள். அதனால் பாதிப்பும் அவர்களுக்கு அதிகம்.
காற்று மாசால் அதிகம் பாதிக்கப்பட்ட இந்திய நகரங்களில் டெல்லி முதலிடத்தில் இருக்கிறது. கடந்த வருடம் மட்டும் அந்த நகரில் 32,000 பேர் காற்று மாசுப்பாட்டால் இறந்திருக்கிறார்கள் லண்டன் ஆய்வு மையம் ஒன்று இதை தெரிவித்திருக்கிறது. கடந்த 20 ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரம் 2.5 மடங்கு வளர்ச்சி கண்டிருக்கும் அதேவேளையில் தொழிற்சாலைகள் வெளியேற்றும் மாசு 3.48 மடங்கும், வாகன மாசு 7.5 மடங்கும் அதிகமாகியுள்ளது.
வாகன புகை இத்தனை பாதிப்புகளை தரும் என்பதை தாமதமாக உணர்ந்துகொண்ட ஐரோப்பிய நாடுகள் ஒன்றிணைந்து யூரோ 1 என்ற தரக்கட்டுப்பாட்டை கார் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு கொண்டு வந்தன. அதன்படி கார்பன் மோனாக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடு, ஹைட்ரோ கார்பன், நுண் துகள்கள் காற்றில் அதிக பட்சமாக எவ்வளவு இருக்க வேண்டும் என்று நிர்ணயம் செய்யப்பட்டது. இந்தியாவில் இது ‘பாரத் ஸ்டேஜ்’ என்று அழைக்கப்படுகிறது.
இதற்கேற்ப வாகனங்களின் இன்ஜின்களில் மாற்றம் செய்தால் கார்பன் மோனாக்சைடு வெளியேறுவதை குறைக்கலாம். ஆனால், நைட்ரஜன் ஆக்சைடும், மிதக்கும் நுண் துகள்களையும் குறைப்பது தரமான எரிபொருள் மூலம்தான் முடியும். இந்தியா இரண்டிலுமே மெத்தனமாகத்தான் இருக்கிறது. ‘பாரத் ஸ்டேஜ் 1, 2, 3, 4,..’ என்று வரிசையாக தரக்கட்டுப்பாட்டை அரசு அதிகரித்துக் கொண்டே போனாலும் கார் தயாரிப்பாளர்கள் அதை நடைமுறை படுத்துவதற்கு தயாராக இல்லை.
இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் கார்களில் எல்லாம் வெளியேறும் மாசு எந்த அளவிற்கு இருக்க வேண்டுமோ அந்த அளவிற்கு குறைவாக இருக்கிறது. ஆனால், உள்நாட்டில் விற்கப்படும் கார்கள் அந்த தரத்தில் தயாரிக்கப்படுவதில்லை. கேட்டால் தரக்கட்டுப்பாடுபடி வாகனத்தை தயாரித்தால் ஒரு காரின் விலை ரூ.25,000 லிருந்து 45,000 வரை கூடுமாம். வர்த்தக போட்டியில் அது சாத்தியம் இல்லையாம்.
இந்தியர்கள் உயிர்தானே போனால் போகட்டும் என்று அரசும், வாகன தயாரிப்பாளர்களும், எரிபொருள் சுத்திகரிப்பு நிறுவனங்களும் அலட்சியமாக இருக்கின்றன. அவர்களுக்கு மேலைநாட்டினர் உயிர்தான் சக்கரைக்கட்டி.
மக்களை மதிக்காத அரசும், அரசியல்வாதிகளும், பணம் பண்ணும் முதலாளிகளும் இந்தியாவுக்கு கிடைத்த சாபக்கேடுதான். அவர்களை விட்டுத்தள்ளுங்கள். நமக்கும் இந்த சமூகத்தின் மீது பொறுப்பிருக்கிறது. நாம் என்ன செய்ய வேண்டும்.?
கூடுமான வரை சொந்த வாகனங்களை உபயோகிக்காமல் பொது வாகனங்களை பயணத்திற்கு உபயோகிப்போம். ஒரு கி.மீ. தூரத்துக்குள் இருக்கும் எந்த இடத்திற்கும் நடந்தே செல்வோம். டூ வீலர், கார் வேண்டாம். அது சுற்றுச்சூழலுக்கு மட்டுமல்ல நமது ஆரோக்கியத்துக்கும் நல்லது.
இதையெல்லாம் விட்டுவிட்டு ‘என்னிடம் பணம் இருக்கிறது, நான் சொகுசாக போவதற்குத்தான் காரை வாங்கி வைத்திருக்கிறேன்’ என்று கூறி நம்மால் ஆனா ஒரு சிறு மாற்றத்தை கூட இந்த சமூகத்திற்காக.. சுற்றுச்சூழலுக்காக.. செய்ய முடியவில்லை என்றால், நாம் அரசையோ அரசியல்வாதிகளையோ குறை சொல்ல அருகதை அற்றவர்கள்.