![பாரதமாதாவுக்கு மகாஹாரதி: தொடங்கி வைத்த ஆளுநர் தமிழிசை! 1 tamilisai hyderabad](https://dhinasari.com/wp-content/uploads/2020/01/tamilisai-hyderabad.jpeg)
ஹைதராபாதில் பாரதமாதாவுக்கு மகா ஹாரதி… விளக்கேற்றி தொடங்கி வைத்தார் தெலங்காணா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன்.
மேடையில் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி, லக்ஷ்மண், கரிகிபாடி நரசிம்மராவு மேலும் பலர் பங்கேற்றனர். இதில்,
3000 மாணவிகள் பாரதமாதா வேடத்தில் ஹாரதி செய்தனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன், நம் கலாச்சாரத்தை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்றார்.
பாரத் மாதா கீ ஜே… வந்தே மாதரம்… மா தேஜே சலாம்… என்ற முழக்கங்களோடு பாரதமாதாவுக்கு மகா ஹாரதி அளித்த நிகழ்ச்சி திசை எங்கும் எதிரொலித்தது.
ஒரே மேடை மீது 3 ஆயிரம் மாணவிகள் பாரதமாதா வேடத்தில் மூவர்ணக் கொடியை கையில் ஏந்தி பாரத மாதாவுக்கு கற்பூர ஹாரதி அளித்த நிகழ்ச்சி முழுமையான தேச பக்திக்கு எடுத்துக்காட்டாக விளங்கிற்று.
ஞாயிறு மாலை ஐமாக்ஸ் எதிரில் உள்ள ஹெச்எம்டிஏ மைதானத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் கவர்னர் தமிழிசை முக்கிய விருந்தினராக பங்குகொண்டு விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
நம் பண்பாட்டை விளக்கும் இந்த நிகழ்ச்சியை நடத்துவது மகிழ்ச்சியாக உள்ளது என்று கவர்னர் கூறினார். நாட்டுக்காக தேச முன்னேற்றத்திற்காக பிரதமர் நரேந்திர மோடி எடுத்து வரும் செயல்கள் இந்தியனை தலை நிமிர்ந்து நிற்கும்படி செய்கின்றன என்று கூறினார்.
என் கழுத்தில் கத்தியை வைத்தாலும் பாரத மாதாவுக்கு ஜே என்று கூறமாட்டேன் என்பவர்களை கூட பாரத மாதாவுக்கு ஜே என்று கூற வைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடுதான் இரண்டு ஆண்டுகள் முன்பு இந்த நிகழ்ச்சியை ஆரம்பித்ததாக இந்த ஃபவுண்டேஷன் சேர்மன் மத்திய உள்துறை உதவி அமைச்சர் கிஷன்ரெட்டி தெரிவித்தார்.
நம் தேகத்தின் மீது உள்ள பாசத்தை தேசத்தின் மீது பாசமாக மாற்றவேண்டும் என்ற சங்கல்பத்தோடு தான் கிஷன் ரெட்டி இந்த நிகழ்ச்சியை தொடங்கி உள்ளார் என்று சஹஸ்ர அவதானி கரிகிபாடி நரசிம்ஹாராவு குறிப்பிட்டார்.
இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த ஜனசேனா கட்சி தலைவரும் நடிகருமான பவன் கல்யாண் பேசுகையில் அரசியலுக்கு பதவி மோகத்தால் வரவில்லை என்றும் பாரதத்தாயின் அழைப்பின் பேரில் அரசியலில் நுழைந்ததாகவும் குறிப்பிட்டார்.
நிகழ்ச்சியில் பிஜேபி மாநில தலைவர் லக்ஷ்மண், எம்எல்சி ராம்சந்தர், தேசிய எஸ்ஸி கமிஷன் அங்கத்தினர் ராமுலு, குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவின் புதல்வர் ஹர்ஷா மற்றும் பலர் பங்கு கொண்டனர்.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மா தேஜே சலாம், வந்தே மாதரம் என்று செய்த நடனங்கள், மராட்டி வாரியர் டான்ஸ் போன்றவை பார்வையாளர்களை கவர்ந்தன.