- Ads -
Home இந்தியா கொரோனா: சிகிச்சையின் போது தப்பி சென்ற கூகுள் ஊழியரின் மனைவி! இருக்கும் இடத்தை மறைத்த மாமனார்...

கொரோனா: சிகிச்சையின் போது தப்பி சென்ற கூகுள் ஊழியரின் மனைவி! இருக்கும் இடத்தை மறைத்த மாமனார் மீதும் வழக்கு பதிவு!

corono 1 3

பெங்களூருவில் கூகுள் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இளைஞருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்ட நிலையில், மருத்துவக் கண்காணிப்பில் இருந்து தப்பிச் சென்றக் குற்றத்துக்காக, அவரது மனைவி மற்றும் அவருக்கு உதவிய மாமனார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெருந்தொற்றுநோய் சட்டம் 1897ன் கீழ், கூகுள் ஊழியரின் மனைவி மற்றும் மாமனார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

மருத்துவ அவசர நிலையை கருத்தில் கொள்ளாமல், கட்டுப்பாடுகளைத் தாண்டி தப்பிச் சென்று பொதுமக்களின் உயிருக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்த முனைந்தக் குற்றத்துக்காக, அவரைக் கைது செய்து சிறைத் தண்டனை வழங்கும் வகையில் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

புதிதாகத் திருமணமான கூகுள் ஊழியர், தனது மனைவியுடன், இத்தாலி நாட்டுக்கு தேனிலவைக் கொண்டாடச் சென்றார், அங்கிருந்து இந்தியா திரும்பியதும், இருவரும் கொரோனா அறிகுறிகளுடன் இருந்ததால் தனிமைப்படுத்தப்பட்டனர்.

மருத்துவப் பரிசோதனையில் கூகுள் ஊழியருக்கு மார்ச் 12ம் தேதி கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில், அப்பெண் தீவிரக் கண்காணிப்புப் பிரிவில் இருந்து யாருக்கும் சொல்லாமல் வெளியேறி, பெங்களூருவில் இருந்து விமானம் மூலம் புது தில்லி சென்று தனது பெற்றோருடன் ரயில் மூலம் ஆக்ரா சென்றுள்ளார்.

அது மட்டுமல்ல, அவரது இருப்பிடத்தைக் கண்டுபிடித்து அவரை மருத்துவக் குழுவினர் அழைத்து வரச் சென்றபோது, அவர் குடும்ப உறுப்பினர்கள் 8 பேருடன் இருந்துள்ளார். அங்கிருந்து வர அவர் மறுத்த நிலையில், மாவட்ட நீதிபதி தலையிட்டு, காவல்துறையின் உதவியோடுதான் அப்பெண்ணை மருத்துவர்கள் சிகிச்சைக்காக அழைத்து வந்துள்ளனர்.

முன்னதாக, அப்பெண்ணின் தந்தையான ரயில்வே பொறியாளர், தனது மகள் எங்கிருக்கிறார் என்ற தகவலை அளிக்க மறுத்துவிட்டார். மருத்துவக் குழுவினர் அந்தப் பெண்ணை சோதித்ததில், அவருக்கும் கொரோனா பாதிப்பு கடந்த வாரம் வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில், கூகுள் ஊழியரின் மனைவி மற்றும் மாமனார் மீது இந்திய அரசியலமைப்புச் சட்டம் 269 (கவனக்குறைவாக செயல்பட்டு, தொற்று நோயைப் பரப்பி, உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துதல்), 270 (தனது மோசமான நடவடிக்கையால் தொற்றுநோயைப் பரப்பி உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துதல்) போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version