லாக்டவுனில் மளிகை சாமான் வாங்க போன இளைஞர், பெண்ணுடன் வீட்டுக்கு திரும்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது சம்பந்தமான வீடியோவும் வெளியாகி வைரலாகி வருகிறது.
நாடு முழுவதும் 2-ம் கட்டத்தில் லாக்டவுன் உள்ளது அதனால் மக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர். அத்தியாவசிய பொருட்களை வாங்க வேண்டும் என்றால் மட்டும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படியே மக்களும் தேவையின்றி வெளியே வருவதில்லை அப்படியே வெளியே வந்தாலும் போலீஸ் அவர்களை விடுவதில்லை. அறிவுறுத்தி வீட்டுக்கே திருப்பி அனுப்பி வருகின்றனர்.
இந்நிலையில், உத்தரப்பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் தன்னுடைய அம்மாவிடம், கடைக்கு போய் காய்கறிகள் வாங்கி வரட்டுமா? என கேட்டார். அப்படியே கொஞ்சம் மளிகை பொருட்களையும் வாங்கி வருவதாக சொன்னார். அதற்கு அவரது அம்மாவும் சரியென்று சொல்லவும் இளைஞரும் கடைக்கு போனார்.
ஆனால் திரும்பி வந்தவர் காய்கறி, மளிகையுடன் ஒரு பெண்ணையும் உடன் அழைத்து வந்தார். இதை பார்த்ததும் அவரது அம்மா பதறிவிட்டார். அந்த பெண் யார் என்று கேட்கவும், அவள்தான் என் பொண்டாட்டி, கல்யாணம் செய்து கொண்டு கூட்டிட்டு வந்தேன், நாங்க இப்போ புதுமண தம்பதி என்றார்.
இதை கேட்டு அம்மா மேலும் அதிர்ச்சி அடைந்தார். அவரால் இதை நம்பவே முடியவில்லை.. ஆத்திரமும் தாங்கவில்லை. அதனால் நேரடியாக போலீசுக்கு போய் விட்டார். கடைக்கு போறேன்னு சொல்லிட்டு, இப்போ ஒரு பெண்ணோட வந்திருப்பதாகவும், ஊரடங்கு நேரத்தில் தன்னை ஸ்டேஷன் வரை வரவழைத்து விட்டதாகவும் மகன் மீது புகார் செய்தார்.
இதையடுத்து போலீசார் மணமக்களிடம் கல்யாணம் எங்கே செய்தீங்க? ஆதாரம் எங்கே? என்று கேட்டனர். அதற்கு மணமக்களோ, “எங்களுக்கு ஒரு புரோகிதர்தான் கல்யாணம் செய்து வைத்தார். நாங்க சர்டிபிகேட் கேட்டோம், ஆனால், லாக்டவுன் முடிந்தபிறகுதான் அதை தர முடியும் என்று சொல்லி விட்டார்” என்றார்கள். இதை பற்றின விசாரணை இன்னமும் நடந்து வருகிறது. காய்கறி வாங்கி வருவதாக சொல்லவிட்டு, கடைக்கு போனவர் பெண்ணுடன் வீட்டுக்கு திரும்பிய சம்பவம் உத்திரபிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.