இந்தியாவின் ஹீரோ ஆகிவிட்ட அபிநந்தனுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர் பாகிஸ்தான் ரேஞ்சர்கள்!
இந்திய அதிகாரிகளிடம் விங் கமாண்டர் அபிநந்தன் ஒப்படைக்கப்படும் முன்பாக, பாகிஸ்தான் ரேஞ்சர்கள் அவருடன் செல்ஃபி எடுத்துள்ளனர். விங் கமாண்டர் அபிநந்தன் லாகூரிலிருந்து கார் மூலமாக வாகா எல்லைக்கு அழைத்து வரப்பட்டார். அங்கு மாலை 5.20 மணியளவில் இந்திய எல்லை பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இந்திய எல்லைப் பாதுகாப்பு படையினரிடம் அபிநந்தன் ஒப்படைக்கப்படும் முன்பாக, அவரை அழைத்து வந்த பாகிஸ்தான் ரேஞ்சர்கள் அவருக்கு டீ கொடுத்தனர். பின்னர் அபிநந்தனுடன் செஃல்பி எடுத்துக் கொண்டனர்.
அபிநந்தனும் அவர்களுடன் புன்னகை ததும்ப செல்ஃபி எடுத்துக் கொண்டாராம். மேலும், பாரசூட்டிலிருந்து அபிநந்தன் கீழே குதித்தபோது, அவருடன், சர்வீஸ் பிஸ்டலும் வைத்திருந்தார். இவை அனைத்தையும் அபிநந்தனிடம் பாகிஸ்தான் ராணுவம் திரும்ப வழங்கியுள்ளது.
ஜெனிவா ஒப்பந்தத்தின்படி இவ்வாறு ஆயுதங்களை திரும்ப ஒப்படைப்பது ராணுவ நடைமுறை. ரேஞ்சர்கள் திரும்ப ஒப்படைத்த தனது உடமைகள் அனைத்தையும், அபிநந்தன் சோதித்துப் பார்த்து பின்னர் அங்கிருந்து புறப்பட்டாராம்.
இதனிடையே, அபிநந்தன் குறித்த ஹாஷ்டேக் உலக அளவில் முதலிடம் பிடித்தது. பலர் பட்டாசு வெடித்துக் கொண்டாட்டினர்.
இந்திய விமானப் படை விங் கமாண்டர் அபிநந்தனை வரவேற்கும் விதமாக #WelcomeHomeAbhinandan என்ற ஹேஷ்டேக் உலக அளவில் முதலிடம் பெற்றது.
பிப்.27ஆம் தேதி இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற பாகிஸ்தான் விமானத்தை துரத்திச் சென்று சுட்டு, தனது விமானம் கோளாறு அடைந்த நேரத்தில் அதில் இருந்து பாராசூட் மூலம் குதித்த போது, பாகிஸ்தான் எல்லையில் துரதிஷ்டவசமாக இறங்கினார்.
பின்னர் பாகிஸ்தான் ராணுவத்தினரால் பிடிக்கப் பட்ட அபிநந்தன், பாகிஸ்தான் மேஜரின் கேள்விக்கு வீரமாகவும் விவேகமாகவும் பதிலளித்தார்.
விமானி அபிநந்தன் பாகிஸ்தானிடம் சிக்கிய சம்பவம் உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்தது. இதை அடுத்து இந்தியா உலக நாடுகள் வழியே கொடுத்த அழுத்தத்தை தொடர்ந்து விமானி அபிநந்தனை விடுவிக்க அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து, சாலை மார்க்கமாக அழைத்துவரப்பட்ட அபிநந்தனை வரவேற்க வாகா – அட்டாரி எல்லையில் ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். மேள தாளங்கள் முழங்க பட்டாசுகள் வெடித்து ஆரவாரமாக அபிநந்தனை தாயகம் வரவேற்றனர்.
முன்னதாக, இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப்படும் இந்தியா விமானப்படை விமானி அபிநந்தனை விமானத்தில் அனுப்பும்படி இந்தியா கேட்டதாகவும், அந்த கோரிக்கையை ஏற்க பாகிஸ்தான் மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
வாகா எல்லை வழியாக மட்டுமே அவரை திருப்பி அனுப்புவோம் என்று பாகிஸ்தான் கூறியதாம். இதன் காரணமாக இன்று வாகா எல்லையில் கொடி இறக்கும் நிகழ்வு ரத்து
செய்யப்பட்டது. வாகா எல்லையில் மீடியாக்களும், பொது மக்களும் அதிக அளவில் குவிய வாய்ப்புள்ளதால் விமானம் மூலம் அபிநந்தனை அனுப்பி வைக்கவே இந்தியா விரும்பியுள்ளது. அபிநந்தன் விமானி என்பதால் தனி விமானம் மூலம் அனுப்பி வைக்க இந்தியா கேட்டுள்ளது.
அத்துடன் அபிநந்தனை விமானம் மூலம் நேரடியாக தில்லி வரவைத்து, அங்கு
அவருக்கு விரிவான மருத்துவ சோதனைகளை நடத்த இந்தியா விரும்பியது. ஆனால் அதனை பாக்.,நிராகரித்துவிட்டது.
இந்தத் தகவல் பரவியதும் அதிகாலை முதலே வாகா எல்லையில், அபிநந்தனை வரவேற்க பொது மக்கள் அதிக அளவில் திரண்டனர்.