நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருடன் தோனி ஓய்வு பெறவுள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. உலகக் கோப்பையில் இந்திய அணி பங்கேற்கும் கடைசி போட்டியுடன் தோனி ஓய்வு பெறுவார் என செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக திறம்பட செயலாற்றியவர் மகேந்திர சிங் தோனி. களத்தில் வெற்றிக்கான சூத்திரத்தைச் சொல்லிக் கொடுக்கும் குரு என்று சக இளம் வீரர்களால் மதிக்கப் படுபவர். தற்போது 38 வயதாகும் தோனி, அணியில் மூத்த வீரர். இருந்தாலும் இளம் வீரர்களுக்குச் சமமாக துடிப்புடன் விளையாடி வருபவர். பல்வேறு சாதனைகள் தோனியின் வசம் உள்ளது.
இந்நிலையில், இந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி விளையாடும் கடைசிப் போட்டிதான் தோனி இந்திய அணிக்காக விளையாடும் கடைசி சர்வதேச போட்டியாக இருக்கும் என்று கூறப் படுகிறது.
தற்போது அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ள இந்திய அணி, இந்த முறை ஜூலை 14ம் தேதி நடக்கும் இறுதிப் போட்டியில் பங்கேற்று, உலகக் கோப்பையை வென்றால், அதுவே தோனி என்ற திறமைசாலிக்கு இந்திய அணி வீரர்கள் அர்ப்பணிப்புடன் செய்யும் கைமாறு என்று வர்ணிக்கப் படுகிறது. கோப்பையுடன் தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடை பெறுவது அவருக்கு சிறந்த புகழை அளிக்கும் என்கிறார்கள்.
இருப்பினும் பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறிய போது, தோனி எப்போது அவ்வாறு விடை பெறுவார் என்பது நமக்குத் தெரியாது. உலகக் கோப்பைப் போட்டிகளுக்குப் பிறகும் அவர் இந்திய அணிக்காக விளையாடலாம்! ஆனால் அவரது முடிவுகள் எல்லாமே திடீர் திடீரென இருக்கும். ஒருநாள், டெஸ்ட், டி20 என கிரிக்கெட்டின் மூன்று வகையில் இருந்தும் திடீரென தனது கேப்டன் பொறுப்பில் இருந்து வெளியேறினார். அதை யாரும் எதிர்பார்க்கவில்லை. எனவே தோனியின் முடிவை யாரும் கணிக்க முடியாது என்றார்.
அடுத்த வருடம் டி 20 உலகக்கோப்பை போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது. அதற்கு முன்னதாக இந்த வருடம் அக்டோபர் மாதம் வரை இந்திய அணியின் தேர்வுக்குழு இருக்கும். அதன்பின்னரே தேர்வுக்குழு மாறும். இருப்பினும், டி20 உலகக்கோப்பை போட்டிகள் வரையில் தோனி அணியை வழிநடத்த வாய்ப்பு உண்டு என்று கூறப் படுகிறது.