![வின் டிவி நிருபர் மீதான தாக்குதல்: இந்து முன்னணி கண்டனம்! 1 muslims richiestreet](https://dhinasari.com/wp-content/uploads/2020/01/muslims-richiestreet.jpg)
தமிழகத்தில் பெருகி வரும் பயங்கரவாதம்! விண் டி.வி. வாகனத்தின் மீதான தாக்குதலைக் கண்டிக்கின்றோம்! – என்று இந்து முன்னணியின் சார்பில் அதன் சென்னை மாநகரத் தலைவர் ஏ.டி.இளங்கோவன் அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருக்கிறார்.
அவரது அறிக்கையில்… தமிழகம் முழுவதும், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு என்ற பெயரில் தொடர்ந்து சட்டம் ஒழுங்கை சீர்குலைத்து, வன்முறையை தூண்டி, தாக்குதல் நடந்து வருகிறது.
நேற்று, சென்னை புளியந்தோப்பு பகுதியில் வேறு ஒரு நிகழ்ச்சிக்கு ஒளிப்பதிவிற்காகச் சென்ற விண் தொலைக்காட்சி நிருபரை, அங்கு சட்டவிரோதமாக ஆர்ப்பாட்டம் நடத்தி வரும் இஸ்லாமியர்கள் மிரட்டியுள்ளதும், ஊடகத்தினர் வந்த வாகனத்தை கல்வீசி சேதப்படுத்தியுள்ளனர். ஊடகத்தினர் மீதான தாக்குதலை பத்திரிகையாளர்கள் கண்டித்து, நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டம் நடத்தியிருக்க வேண்டும். ஆனால், தமிழகத்தில் யார் செய்கிறார்கள் என்று பார்த்தே ஊடகவியார்கள் செயல்படுவது வெட்கக் கேடானது.
இந்த தாக்குதல் மூலம் குடியுரிமை திருத்த சட்டத்தின் அவசியத்தை வலியுறுத்தி வரும் இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக தலைவர் திரு. தேவநாதன் யாதவ் அவர்களை அச்சுறுத்துவதற்காகவே நடத்து இருப்பதாக புரிந்து கொள்ள முடிகிறது. ஜனநாயகத்தின் குரல்வளையை பயங்கரவாதத்தால் முடக்க முடியாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
சென்னையில் அதீத பாதுகாப்பு இடமாகக் கருதப்படும் அண்ணாசாலை அமெரிக்க தூதரகம் இருக்கும் ஜெமினி மேம்பாலம் மீது வந்த இருவர் நாட்டு வெடிகுண்டை வீசிவிட்டு தப்பியிருக்கின்றனர். துப்பாக்கியால் சுட்டும் இருப்பதாக புகார் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
தொடர்ந்து பல இடங்களில் எந்தவிதமான முன்னறிவிப்பும் இன்றி ஆர்ப்பாட்டம், போராட்டம் என தொடர்ந்து சாலைகளை மறித்தும், போக்குவரத்து இடையூறு செய்தும் வருவதை பார்க்கும் போது, இது ஜனநாயக விரோத போராட்டமாகத் தான் இருந்து வருகிறது. ராயபுரத்தில் வன்முறை வெறியாட்டம் நடந்தபோது, காவல்துறை அதிகாரிகள் தாக்கப்பட்டனர்.
இவை ஏதோ ஏதேச்சையாக நடந்துவிடவில்லை. திட்டமிட்டு, சதி செய்து நடைபெறும் சம்பவங்களாக இருந்து வருகின்றன. இதனை ஒடுக்காவிட்டால், வருங்காலத்தில், சென்னை மாநகரத்தின் முக்கியத்துவம் உலக அளவில் மறைந்துபோகும். சென்னை, பிரச்சனையான இடம், அமைதியில்லாத மாநகரம் என்று தொழிற் துவங்கவும், வியாபாரம் செய்யவும் அச்சப்படுகின்ற நிலை ஏற்பட்டுவிடும். சென்னை மாநகரத்தின் பொருளாதாரம் சீரழிந்துவிடும் என்பதை அரசு கவனத்தில் கொண்டு, இதுபோன்ற செயல்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.
தென் தமிழகத்தில் இதுபோன்ற வன்முறை, போராட்டத்திற்குப் பிறகு பல தொழிற் நிறுவனங்கள் அங்கிருந்து வெளியேறியதையும், புதிதாக எந்த தொழிலும் அங்கு நிறுவப்பட தயக்கம் காட்டும் நிலை இருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இதற்குக் காரணம், சில நூறு வன்முறையாளர்களை ஒடுக்க பயந்து, மென்மையான போக்கை தமிழக அரசு கடைப்பிடித்ததான்.
சென்னை மாநகரமும் அதுபோல் ஆகிவிடாமல் இருக்க, தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊடகத்தினர் களுக்குத் தகுந்த பாதுகாப்புக் கொடுக்க வேண்டும். ஜனநாயகத்தின் முக்கியமான அங்கம் ஊடகம். அதில் சில ஊடகங்களின் செயல்பாட்டில் நமக்கு அதிருப்தி இருக்கலாம், அதற்காக பொதுவீதியில் வன்முறை, மிரட்டல் என்பது அநாகரிகமான செயல். இதனை முளையிலேயே அரசும், காவல்துறையும் ஒடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக் கொள்கிறது… – என்று குறிப்பிட்டிருக்கிறார்.