எனது கருத்தை பாமர மக்களும் பேசுகின்ற, சிந்திக்கின்ற வகையில் கொண்டு சேர்த்ததற்கு நன்றி என்று நடிகர். ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
இரு தினங்களுக்கு முன்னர் நடிகர் ரஜினி தனது அரசியல் நிலைப்பாடு குறித்து அறிவிப்பதாகக் கூறியிருந்தார். செய்தியாளர்கள் பலரும் நொடிக்கு நொடி அப்டேட் செய்து, பெரும் எதிர்பார்ப்பில் ரஜினியின் பேட்டிக்காகச் சென்றனர். ஆனால் ரஜினியோ, மக்கள் எழுச்சி வரட்டும், நான் முதலமைச்சர் வேட்பாளர் இல்லை, நேர்மையான அரசியல், இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும், ஆட்சி வேறு கட்சி வேறு, ஆட்சியில் கட்சி தலையிடக் கூடாது என்றெல்லாம் தனது கனவுகளைச் சொல்லிவிட்டு கூட்டத்தை நிறைவு செய்து விட்டார்.
ரஜினி வருவார் மாற்று அரசியல் செய்வார் என்றெல்லாம் எதிர்பார்த்திருந்தவர்களுக்கு பெரும் ஏமாற்றம். இதனால் பலரும் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்து வந்தனர். சமூக வலைத்தளங்களில் கருத்துகள் களை கட்டின.
இந்நிலையில், ரஜினிகாந்த் தனது டிவிட்டர் பதிவில் அவர் வெளியிட்டுள்ள செய்தியில், அரசியல் மாற்றம்… ஆட்சி மாற்றம் இப்ப இல்லைன்னா எப்பவுமே இல்லை என்கிற கருத்தை பாமர மக்களும் பேசுகின்ற,சிந்திக்கின்ற வகையில் கொண்டு போய் சேர்த்த ஊடகங்களுக்கும், பத்திரிகைகளுக்கும், சமூக வலைதளங்களுக்கும், மன்ற உறுப்பினர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி… என்று குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் மாற்றம், ஆட்சி மாற்றம் இப்ப இல்லைனா எப்பவும் இல்ல. #தலைவர்ரஜினியின்அரசியல்புரட்சி
அரசியல் ஆட்சி மாற்றத்திற்கான எழுச்சி மக்களிடையே தெரிந்தால் நான் கட்சிதொடங்குவேன் என்று ரஜினி அறிவித்திருந்த நிலையில், #தலைவர்ரஜினியின்அரசியல்புரட்சி என்ற ஹேஷ் டேக்கை தேசிய அளவில் டிரெண்ட் செய்து வருகின்றனர் ரஜினியின் ஆதரவாளர்கள்.