தமிழகத்தை நோக்கி வரும் கஜா புயல் கடலூர், புதுச்சேரி மற்றும், நாகை முதல் வேதாரண்யம் இடையே நாளை மாலை முதல் இரவுக்குள் கரையைக் கடக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான், தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு வெதர்மேன் என்ற பெயரில் எழுதிவரும் பிரதீப் ஜான் இன்று தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கும் தகவலில்,
கஜா புயல் மேகக் கூட்டங்களுடன் மிக அழகாக, மேற்கு தென் மேற்காக நகர்ந்து வருகிறது. கஜா புயல் இன்று இன்னும் தீவிரமாகி நாளை தீவிரப்புயலாக மாறும். ஆனால், தமிழகக் கரையைக் கடக்கும் முன் அதாவது கடலூர் முதல் வேதாரண்யத்துக்கு இடையே கடக்கும் முன் கஜா புயல் வலுவிழக்கக்கூடும்.
நாளை கடலூர் மற்றும் வேதாரண்யம் இடையே கஜா புயல் கரையைக் கடக்கும் போது மணிக்கு 70 முதல் 80 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும், சில நேரங்களில் காற்று 90 கி.மீ வேகத்தில் கூட வீச வாய்ப்புண்டு. கஜா புயல் சென்னையை நோக்கி நகர்வதற்கு வாய்ப்பு இல்லை.
கஜா புயலால் நாளை முதல் சென்னையில் மழை பெய்யும்.
சென்னையில் கஜாபுயலின் மேகக் கூட்டம் சென்னை நகர் மீது படரத் தொடங்கிய உடன் நாளை (15 ஆம் தேதி) காலை முதல் மழை பெய்யத் தொடங்கும். சென்னையில் நாளை நல்ல மழை பெய்யும் என்பதில் சந்தேகமில்லை.
அதன் பின் அரபிக்கடலுக்குள் கஜா புயல் செல்லும் போது, கிழக்குக் காற்றை அதிகமாக இழுக்கும் புல் எஃபெக்ட் விளைவு காரணமாக, 16 மற்றும் 17ஆம் தேதிகளிலும் சென்னைக்கு மழை இருக்கும்.
எனவே, அடுத்த 3 நாட்களில் சென்னையில் 150 மி.மீ. வரை மழை பெய்தால் மகிழ்ச்சி அடைவேன். கஜா புயல் சென்னைக்குக் குறைந்த பட்சமே மழையைக் கொடுக்கும்.
கனமழை பெய்யும் மாவட்டங்கள்:
கஜா புயல் தற்போது மேற்கு தென்மேற்காக நகரத் தொடங்கி இருக்கிறது. இதனால் அடர்ந்த மேகக்கூட்டம் தெற்குப் பகுதியை நோக்கி நகர்கிறது. எனவே நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சை, திருச்சி, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், தேனி மற்றும் ராமநாதபுரம், மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களான கோவை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் கனமழை இருக்கும்.
டெல்டா மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்திருக்கும் மாவட்டங்கள், தெற்கு உள் மாவட்டங்கள் ஆகியவற்றுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் 205 மி.மீ. மழை பெய்யக்கூடும்.
மற்ற மாவட்டங்களான கடலூர், புதுச்சேரி, நெல்லை மற்றும் வடக்கு உள் மாவட்டங்கள் மற்றும் கடலோரப் பகுதிகளிலும் நல்லமழை இருக்கும்.
இவை அனைத்தும் என்னுடைய தனிப்பட்ட கருத்துக்களே. நிர்வாக ரீதியான தகவல்களுக்கு அரசின் அதிகார பூர்வ மையத்தை பின்பற்றுங்கள் என்று கூறியுள்ளார் பிரதீப் ஜான்.