கஜா புயல் சென்னைக்கு கிழக்கே 520 கி.மீ. மற்றும் நாகைக்கு வடகிழக்கே 620 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது என்று கூறியுள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், நாளை மாலை கடலூருக்கும், பாம்பனுக்கும் இடையே புயல் கரையை கடக்கும் என்று கூறியுள்ளது.
கஜா புயல் மணிக்கு 7 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது என்றும், கடலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்றும் கூறியுள்ளது இந்திய வானிலை மையம்.
நாகையில் பாதிக்கப்படக் கூடிய 38 கிராமங்களில் இருந்து 86 ஆயிரத்து 964 மக்களை பாதுகாப்பாக வெளியேற்ற மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாக ஆட்சியர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில், கஜா புயல் மற்றும் மழையின் தாக்கத்திற்கு ஏற்றவாறு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறினார்.
திருவாரூர், ராமநாதபுரம் மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை விடப்பட்டுள்ளது. கஜா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விடுமுறை விடப் பட்டுள்ளது. ஏற்கெனவே கடலூர், நாகை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது.
கடலூர், நாகை, திருவாரூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் காரைக்கால் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என்று அந்த அந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.
இதனிடையே, நாளை நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைப்பு என வேலூரில் உள்ள திருவள்ளுவர் பல்கலை. அறிவித்துள்ளது. கஜா புயல் காரணமாக நாளை ஒத்திவைக்கப்படும் தேர்வுகள் டிச.15ல் நடைபெறும் என்று அது தெரிவித்துள்ளது.