பல்வேறு சிக்கல்களைக் கடந்து இன்று ரிலீஸானது விஷாலின் அயோக்யா படம்!
அறிமுக இயக்குனர் வெங்கட் மோகன் இயக்கத்தில் விஷால் மற்றும் ராஷி கண்ணா ஆகியோர் நடித்துள்ள படம் அயோக்யா. பெண்களுக்கு சமூகத்தில் நடக்கும் அவலங்களை மையப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
பெண்களை கடத்தி பாலியல் துன்புறுத்தல் செய்யும் ஆண்களுக்கு உடனடியாக தண்டனை விதிக்கப்படுமா என்ற கேள்வியுடன் இந்தப் படத்தில் காட்சிகள் உள்ளன. உடனடி தண்டனை குறித்து சட்டத்தில் இடம் உள்ளதா? இல்லை புதிய சட்டம் இயற்றப்படுமா? என பல கேள்விகளுக்கு விடை அளிக்கும் விதமாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
விஷாலுடன் கே.எஸ்.ரவிக்குமார், பார்த்திபன், சனா கான், யோகி பாபு, ராகுல் தாத்தா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
பல்வேறு சிக்கல்கள், தடைகளைத் தாண்டி இன்று அயோக்யா திரையிடப் பட்டுள்ளது. தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட நிதி பிரச்னை காரணமாக அயோக்யா படம் நேற்று வெளியாகவில்லை என்றும், இதனால், விஷாலே தயாரிப்பாளருக்கு ரூ.1 கோடி பணத்தை கொடுத்ததாகவும் கூறப் படுகிறது.
இதற்கு முன், விஷாலின் இரும்புத்திரை படம் மே 11, 2018ம் ஆண்டு வெளியானது. அதே போன்று தற்போது அயோக்யா படமும் வெளியாகியுள்ளது.
தயாரிப்பாளர்களுக்கு ஏற்பட்ட நிதிப் பிரச்னை காரணமாக விஷாலின் அயோக்யா, அதர்வாவின் 100 ஆகிய இரண்டு படங்களும் நேற்று வெளியாகவில்லை. இந்நிலையில் இந்த இரண்டு படங்களுமே இன்று காலை காட்சியில் திரையிடப் பட்டுள்ளன.