அத்திவரதர் வைபவத்தின்போது காவல் ஆய்வாளரைத் திட்டியது பற்றி பதிலளிக்க ஆட்சியருக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், ஆட்சியர் மீதான நடவடிக்கை குறித்து தலைமைச்செயலர் பதிலளிக்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
காஞ்சிபுரம் அத்திவரதர் உத்ஸவத்தில், வி.ஐ.பி.,க்கள் டோனர் பாஸ் மூலம் செல்பவர்கள் செல்லும் பகுதியில் பொது மக்களை அனுமதித்ததாக கடந்த வாரம் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர், அங்கே காவல் பணியில் இருந்த காவல் ஆய்வாளரை ஒருமையிலும் தரக்குறைவாகவும் திட்டித்தீர்த்தார்.
பொதுமக்கள் முன்னிலையில், காவல் அதிகாரிகள் முறைகேடாக பொதுமக்களை விஐபி வரிசையில் விடுவதாகக் கூறி, மோசமாகத் திட்டியதை அங்கிருந்த பலரும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பான வீடியோ ஒன்று சமூகத் தளங்களில் வைரலானது.
ஒரு காவல் அதிகாரியை, மாவட்ட ஆட்சியர் அந்த அளவுக்கு பொதுமக்கள் முன்னிலையில் தரக்குறைவாகப் பேசலாமா என்றும், நடவடிக்கை எடுப்பதாக இருந்தால், தனியே தன் அலுவலகம் சென்றோ, அல்லது வேறு தனி இடத்திலோ சென்று நடவடிக்கை எடுத்திருக்க பரிந்துரைத்திருக்க வேண்டும் என்றும் பலரும் கூறினர்.
காவல் ஆய்வாளருக்கு ஆதரவாக சுவரொட்டிகள் ஒட்டப் பட்டனர். இந்நிலையில், மாநில மனித உரிமை ஆணையம் ஆட்சியருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுபியுள்ளது.
அத்திவரதர் வைபவத்தில் காவல் ஆய்வாளரை மிரட்டிய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று மாநில மனித உரிமை ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், தலைமை செயலாளர் 2 வாரத்தில் பதிலளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.
செய்தி அடிப்படையில், தாமாக முன் வந்து வழக்கு விசாரணைக்கு எடுத்து ஆணைய நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதனிடையே காஞ்சி ஆட்சியரை சஸ்பெண்ட் செய்யக்கோரி விழுப்புரத்தில் ஓய்வு பெற்ற போலிசார் ஆர்பாட்டம் நடத்தினர்.