கூவாகம் பிரசித்தி பெற்ற கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழாவில் ஒருபகுதியாக நடந்த திருநங்கைகள் அழகிபோட்டியில்
சென்னையை சேர்ந்த திருநங்கை சாதனா மிஸ் கூவாகமாக தேர்வு செய்யப்பட்டார். சென்னை மதுமிதா, எல்சா அடுத்தடுத்த இடங்களை பிடித்தனர்.
மகாபாரதப் போரில் வெற்றி கிடைப்பதற்காக அரவான் என்ற இளவரசன், பஞ்ச பாண்டவர்களால் களபலி கொடுக்கப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க புராணத்தை நினைவுக் கூறும் வகையில் உலகத்திலேயே திருநங்கைகளுக்கு என்றே தனியாக அமைந்துள்ள கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே கூவாகம் கிராமத்தில் உள்ள கூத்தாண்டவர் கோயிலில் ஆண்டுத்தோறும் சித்திரை மாதத்தில் திருநங்கைகள் ஒன்று கூடி விழா எடுத்து கொண்டாடி வருகின்றனர்.கொரோனா கட்டுபாடுகள் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் சித்திரை திருவிழா நடைப்பெறாமல் இருந்து வந்த நிலையில் இந்த ஆண்டு வழக்கம் போல் சித்திரை திருவிழா கடந்த 5ந் தேதி சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சாமி கண் திறத்தல் நிகழ்ச்சி நாளை செவ்வாய்க்கிழமை நடக்கிறது. இதில் திருநங்கைகள் கலந்துகொண்டு கோவில் பூசாரி கையினால் தாலி கட்டிக்கொள்வார்கள். தொடர்ந்து, நாளை மறுநாள் புதன்கிழமை தேரோட்டம் நடைபெறுகிறது.
இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக நாட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்தும், நூற்றுக்கணக்கான திருநங்கைகள் கூவாகம் கிராமத்திற்கு வந்துள்ளனர். மேலும் மிஸ் திருநங்கை மற்றும் மிஸ் கூவாகம் என்ற திருநங்கைகளுக்கான போட்டிகள் நடைபெற்றன. விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம், விழுப்புரம் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு, சென்னை திருநங்கை தலைவர்கள் நாயக்குகள் அமைப்பு மற்றும் தொண்டு நிறுவனங்கள் இணைந்து கூவாகம் திருவிழா என்ற தலைப்பில் திருநங்கைகளுக்கான பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தியது. இதற்கு முன்னிஜி நாயக் தலைமை தாங்கினார். உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, திருச்சி சிவா எம்.பி. ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினர். இதில் துரை.ரவிக்குமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் புகழேந்தி, டாக்டர் லட்சுமணன், மாநில திட்டக்குழு உறுப்பினர் நர்த்தகி நடராஜ், நடிகர் சூரி, நடிகை நளினி, விழுப்புரம் முன்னாள் நகரமன்ற தலைவர் ஜனகராஜ், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயச்சந்திரன், விழுப்புரம் நகரமன்ற தலைவர் சக்கரை தமிழ் செல்வி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
முதலில் நடனப்போட்டிகள் நடைபெற்றது. அதையடுத்து பாரம்பரிய கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடந்தது. பின்னர் மிஸ் திருநங்கை அழகிப்போட்டிக்கான தேர்வு நடந்தது. இதில் சென்னை, சேலம், ஈரோடு, மதுரை, கோவை, திருச்சி, விழுப்புரம், நாமக்கல், தஞ்சாவூர், தூத்துக்குடி, நெல்லை, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 150 திருநங்கைகள் கலந்துகொண்டு விதவிதமான உடைகளில் மேடையில் தோன்றி ஒய்யாரமாக நடந்து வந்தனர்.
போட்டியின் முதல் சுற்றில் நடை, உடை, பாவணை ஆகியவற்றின் அடிப்படையில் திறமையாக செயல்பட்ட திருநங்கைகள் 50 பேர் 2-வது சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டனர். 2-வது சுற்றுக்கான அழகிப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்ட 50 பேரும் மீண்டும் மேடையில் ஒய்யாரமாக நடந்து வந்தனர். தமிழ் கலாசாரம், நடை, உடை, பாவனை ஆகியவற்றின் அடிப்படையில் நடந்த இந்த சுற்றின் முடிவில் 5 பேர் 3-வது சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
இவர்கள் 3 பேருக்கும் எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்தும், பொது அறிவுத்திறன் குறித்தும் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. இதில் சிறந்த முறையில் பதில் அளித்த சென்னையை சேர்ந்த சாதனா மிஸ் திருநங்கையாக தேர்வு செய்யப்பட்டார். சென்னையை சேர்ந்த மதுமிதா 2-வது இடத்தையும், சென்னையை சேர்ந்த எல்சா 3-வது இடத்தையும் பிடித்தனர். இவர்களில் முதலிடம் பிடித்த சாதனாவுக்கு கிரீடம் சூட்டப்பட்டு ரூ.15 ஆயிரம் பரிசாக வழங்கப்பட்டது.
அதேபோல் 2-வது இடத்தை பிடித்த மதுமிதாவுக்கு ரூ. 10 ஆயிரமும், 3-வது இடத்தை பிடித்த எல்சாவுக்கு ரூ. 5 ஆயிரமும் வழங்கப்பட்டது. பின்னர் நடனப்போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற திருநங்கைகளுக்கும் பரிசுகள் வழங்கி பாராட்டப்பட்டனர்.
![கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழாவில் திருநங்கைகள் அழகிபோட்டி. 1 terter 1](https://dhinasari.com/wp-content/uploads/2022/04/terter-1-1024x512.jpg)