திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே கார்-பால்டேங்கர் லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் புதிய ஹோட்டல் துவக்க விழாவிற்கு துவா செய்து திரும்பிய ஹஜ்ரத்கள் உட்பட 9 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியைச் சேர்ந்தவர்கள் தமீமுல் அன்சாரி அலி, சையது இப்ராஹிம், சேலத்தைச் சேர்ந்தவர் கலீல் ரஹ்மான், பொள்ளாச்சியைச் சேர்ந்த அப்துல் சாலி உட்பட 10 பேர் நேற்று கொடைக்கானலில் ஒரு புதிய ஹோட்டல் திறந்து வைத்து துவா செய்வதற்கு காரில் புறப்பட்டுச் சென்றுள்ளனர். காரை அரவக்குறிச்சி அருகே உள்ள குமராண்டவலசு பகுதியைச் சேர்நத டிரைவர் மோகன் ஓட்டியுள்ளார்;. ஓட்டல் திறந்து வைத்து முடித்து நேற்று இரவு கொடைக்கானலில் இருந்து பள்ளப்பட்டி செல்வதற்காக காரிலேயே திரும்பியுள்ளனர். செம்பட்டி அருகேயுள்ள பாளையங்கோட்டை பிரிவு வளைவில் இவர்கள் சென்ற கார் திரும்பிய போது, எதிரே வத்தலக்குண்டு சென்று கொண்டிருந்த பால் டேங்கர் லாரியும் நேருக்கு நேர் மோதியது. இதில் காரில் பயணம் செய்த 9 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாயினர். தலையில் பலத்த காயம் அடைந்த ஒருவர் மதுரைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். பலியான 9 பேரின் உடல்களை கைப்பற்றி திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்குக் கொண்டு சென்றனர். விபத்து குறித்து செம்பட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.