பண்ருட்டி: குடும்பப் பிரச்னை காரணமாக மனைவியின் கழுத்தை அறுத்துக் கொன்றார் கணவர். இந்தச் சம்பவம் பண்ருட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பண்ருட்டி வட்டம் பணப்பாக்கம் காலனியைச் சேர்ந்த விவசாய கூலித் தொழிலாளி வீரமணி. இவருக்கும், உமா (28) என்பவருக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகனும், இரண்டரை வயதில் ஒரு மகளும் உள்ளனர். கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்படுவதுண்டாம். இந்நிலையில் இன்று காலை 11 மணி அளவில் குடும்பப் பிரச்னை காரணமாக கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, ஆத்திரத்தில் வீரமணி, தன் கையில் வைத்திருந்த பிளேடால் மனைவி உமாவின் கழுத்தை அறுத்தார். ரத்தம் அதிகம் வெளியேறியதால், உமா துடிதுடித்து உயிரிழந்தார். தகவல் அறிந்த புதுப்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று முதல் கட்ட விசாரணையைத் துவக்கினர். மேலும், உமாவின் உடலைக் கைப்பற்றி பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்தக் கொலை குறித்து புதுப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.