ராஜபாளையம் சிவகாசி கொலைவழக்கில் முக்கிய நபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜபாளையத்தில் பெயிண்டர் கொலையில் தந்தை-மகன்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ராஜபாளையம் விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே காக்கிவாடன் பட்டியை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரது மகன் பாலமுருகன் ( 37). பெயிண்டர். இவர் நேற்று முன் தினம் ராஜபாளையம் அருகே காளவாசலில் உள்ள உறவினர் வீட்டின் துக்க நிகழ்ச்சிக்கு சென்றார். அவர் வழிநெடுக பூக்களை தூவி சென்றார். அப்போது அவருக்கும், சிவகாசி பாலையா புரத்தை சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து முத்துகிருஷ்ணன் அவரது தந்தை சுந்தர்ராஜன், தம்பி முத்துசெல்வம் ஆகிய 3 பேரும் பாலமுருகனை உருட்டுக்கட்டையால் அடித்து கொலை செய்தனர். இது தொடர்பாக பாலமுருகனின் மனைவி முத்துலட்சுமி கீழராஜகுலராமன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப்பதிவு செய்து கொலையாளிகள் சுந்தர்ராஜன், அவரது மகன்கள் முத்துகிருஷ்ணன், முத்துசெல்வம் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
சிவகாசியில் சொத்து தகராறில் தம்பிையை கொலை செய்த அண்ணனை போலீசார் இன்று கைது செய்தனர். மேலும் இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.
![ராஜபாளையம் சிவகாசி கொலை சம்பவத்தில் முக்கிய நபர்கள் கைது .. 1 830563 murter 1](https://dhinasari.com/wp-content/uploads/2022/08/830563-murter-1.jpg)
சிவகாசி அருகே உள்ள ஈஞ்சார் கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து. இவருக்கு முத்தீஸ்வரன் (52), முருகன் (32), மணிகண்டன் (29), விநாயகமூர்த்தி (22) என்ற மகன்களும், ராஜேஸ்வரி (24), முருகேஸ்வரி (48) என்ற மகள்களும் உள்ளனர். இவர்களுக்கிடையே பல வருடங்களாக குடும்ப சொத்துக்களை பிரிப்பதில் பிரச்சினை நிலவி வந்துள்ளது.
இந்நிலையில் சொத்து பிரச்சினை குறித்து பேசி முடிவு எடுக்க முத்தீஸ்வரன் அனைவரையும் தனது வீட்டிற்கு அழைத்துள்ளார். அதன் பேரில் அனைவரும் நேற்று மாலை சிவகாசி அருகே உள்ள ஈஞ்சார் கிராமத்தில் உள்ள முத்தீஸ்வரன் வீட்டில் ஒன்றுகூடி பேசியுள்ளனர். இந்த பேச்சுவார்த்தையின்போது ஒருவருக்கு ஒருவர் வாக்கு வாதம் ஏற்பட்டு ள்ளது. இதில் பயங்கர ஆயுதங்க ளுடன் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இதில் கழுத்து அறுக்கப்ப ட்டு படுகாயம் அடைந்த முருகன், சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவர் செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார்.
மேலும் இந்த சம்பவத்தில் முருகன் மனைவி இந்திராதேவி, அவரது தாயார் பெரியதாய், மணிகண்டன் ஆகியோர் படுகாயமடைந்தனர். இவர்கள் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தலையில் பலத்த காயமடைந்த மணிகண்டன் மேல்சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த கொலைவழக்கு சம்பந்தமாக முத்தீஸ்வரனை போலீசார் கைது செய்தனர். விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.