இதையடுத்து, புலிகள் காப்பக அம்பாசமுத்திரம் துணை இயக்குநர் ஓம் காரம் கொம்மு அறிவுறுத்தலின்பேரில், வனச்சரக அலுவலர் கார்த்திகேயன், வனவர் முருகேசன் மற்றும் கிராம வனக் குழுத் தலைவர் ஆகியோர் முன்னிலையில் வனத் துறை கால்நடை மருத்துவர் சுகுமாரன் சிறுத்தையின் உடலை பிரேத பரிசோதனை செய்தார். பின்னர் வன கால்நடை மருத்துவர், வனச்சரக அலுவலர், வனவர், வனப்பணியாளர்கள், கிராம வனக் குழு தலைவர் ஆகியோர் முன்னிலையில் எரியூட்டப்பட்டது. கடந்த ஒரு மாதத்தில் முண்டன்துறை வனப் பகுதியில் ஒரு யானை, இரண்டு சிறுத்தைகள் மர்மமான வகையில் உயிரிழந்துள்ளன. வனப் பகுதியில் கடும் வறட்சி நிலவி வருவதால் வன விலங்குகளுக்கு உணவு, நீர் கிடைக்காத நிலை உள்ளது. மேலும், வனப் பகுதியில் நிலவும் கடுமையான வெப்பத்தைத் தாங்க முடியாமலும் விலங்குகள் உயிரிழந்திருக்கலாம் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்தனர்.