பெரம்பலுார் அருகே, ‘தெர்மாகோல்’ என்ற செயற்கை ரசாயண அட்டையால் கட்டப்பட்டு வரும் வீட்டை, பொதுமக்கள் வியப்புடன் பார்த்து செல்கின்றனர்.
பெரம்பலுார், செட்டிக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமர், 40; ஸ்டூடியோ வைத்துள்ள இவர், தெர்மாகோல் மூலம் வீடு கட்டிவருகிறார்.
தொழில் ரீதியாக, கோவையில், ஒரு வீட்டு கிரகப்பிரவேச நிகழ்ச்சிக்கு சென்றிருந்தபோது, அந்த வீட்டில் வழக்கத்துக்கு மாறாக, மின்விசிறி, ‘ஏசி’ ஏதும் இயங்காத நிலையில், வெயிலின் தாக்கம் இன்றி, குளுமையாக இருந்துள்ளது.
இது குறித்து வீட்டின் உரிமையாளரிடம் கேட்டபோது, அந்த வீடு, தெர்மாகோல் மூலமாக கட்டப்பட்டது தெரிந்தது.
ஆரம்பத்தில் இதை நம்பாதவர், இது குறித்து விசாரித்துள்ளார். அப்போது, இது சாத்தியம் தான் என தெரிந்தது.இது குறித்து, ‘ஆன்லைனில்’ தகவல்கள் தேடினார். இது போன்ற வீடுகள், வெளிநாடுகளில் அதிக அளவில் கட்டப்பட்டு வருவதை தெரிந்த ராமர், அது போன்ற ஒரு வீட்டை தானும் கட்ட முடிவு செய்தார்.
முதலில் எதிர்ப்பு தெரிவித்த குடும்பத்தினர், பின்சம்மதித்தனர்.இதையடுத்து, தரை தளத்தில் ஸ்டூடியோவும், முதல்தளத்தில் வீடும் கட்ட திட்டமிட்டு, இன்ஜினியர் ஆனந்தகீதன் என்பவர் மூலம், தெர்மாகோல் வீட்டை கட்டி வருகிறார்.
கட்டுமான பணிகள், 50 சதவீதத்துக்கும் மேல் நிறைவடைந்து விட்டன.
இன்ஜினியர் ஆனந்தகீதன் கூறியதாவது:தெர்மாகோல் தொழில்நுட்பம் மூலம், வெளிநாடுகளில் அதிகமாக வீடுகள் கட்டி வருகின்றனர்.
நாங்கள் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, ஆரம்பத்தில் தனி நபர் கழிப்பறைகள் கட்டிக் கொடுத்தோம்.தொடர்ந்து, ஒருவருக்கு, மாடியில் அறை கட்டிக்கொடுத்தோம்.படிப்படியாக, தற்போது, ‘ஆர்டர்கள்’ வருகின்றன.
இதற்காக, அளவுகள் எடுக்கப்பட்டு, தேவையான அளவுகளில், ‘வெல்ட்மெஷ்’ என்ற கம்பி வலைகளுக்கு இடையே, 3 அங்குலம் அளவுள்ள தெர்மாகோல்களை வைத்து, பேனல்களாக தயாரித்து, அதை எடுத்து வந்து, சுவர்களுக்கு பதிலாக, பொருத்தி உள்ளோம்.
அதன் மீது சிமென்ட், சிப்ஸ் ஜல்லி, ‘எம்.சாண்ட்’ கலவையால் பூச்சு வேலை செய்வோம். 50 சதவீத கால நேரமும், பொருள் விரயமும் குறையும்.
மேற்கொண்டு, செங்கல், கருங்கல், மணல் எதுவும் தேவையில்லை. இந்த தொழில்நுட்பத்திற்கு ஆட்கள் செலவும், மிக மிகக்குறைவு. தண்ணீர் செலவும் மிகக்குறைவு.மொத்த செலவில், 15 சதவீதம் குறையும்.
மேலும், வீட்டின் எடையும் மிகக்குறைவு. எளிதில் விரிசல் விழாது. சூறாவளி, கடும் மழை போன்ற அனைத்தையும் தாங்கும்.
தற்போது ஏற்பட்டுள்ள மணல் மற்றும் செங்கல் தட்டுப்பாட்டிற்கு, இந்த தொழில்நுட்பம் மிகவும் ஏற்றதாகும்.
இதற்கு முன்னதாக, ‘கஜா’ புயல் பாதித்த பகுதிகளில், ஒரு வீடு கட்டி கொடுத்திருந்தோம். கஜா புயலால் அந்த வீடு மீது, இரண்டு மரங்கள் விழுந்தபோதும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.
.ராமர் கூறுகையில், ”1,150 சதுர அடி பரப்பளவில், 10 லட்சம் ரூபாய் செலவில், தெர்மாகோல் வீடு கட்டுகிறேன்.
அஸ்திவாரம் போட்ட பின், சுற்றிலும் இரும்பு கம்பிகள் மற்றும் அதற்கு இடையில் தெர்மாகோல் வைக்கப்பட்டு, வீடு கட்டப்பட்டு வருகிறது,”என்றார்.
‘தெர்மாகோல்’ என்ற செயற்கை ரசாயண அட்டையால் கட்டப்பட்டு வரும் வீட்டை, பொதுமக்கள் வியப்புடன் பார்த்து செல்கின்றனா்