பெண் குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தி படுகொலை செய்யும் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை ஒன்றுதான் உரிய தீர்வு என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில், கோவையில் கடந்த 2010ஆம் ஆண்டு தனியார் பள்ளியில் படித்து வந்த சிறுமி முஸ்கான், சிறுவன் ரித்திக் இரண்டு குழந்தைகளையும் கடத்தி பாலியல் வன் கொடுமை செய்து, இருவரும் படுகொலையும் செய்யப்பட்டனர். இதில் அந்த பள்ளி வாகன ஓட்டுனர் மோகன்ராஜ், மனோகரன் இருவரும் போலீசில் சிக்கினர்!
அப்பொழுது போலீசாரிடமிருந்து தப்பியோடிய மோகன்ராஜ் என்பவா் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட மனோகரன் என்பவருக்கு உச்ச நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கி இருக்கிறது!
இந்த தீர்ப்பை வழங்கிய உச்ச நீதிமன்றத்திற்கு தேமுதிக சார்பில் நன்றிகளையும், பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இனி வரும் காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவிலேயே எங்கும் நடக்காத வண்ணம் போக்சோ சட்டதிருத்த மசோதா நாடாளுமன்றத்தில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டிருப்பதையும், உச்சநீதிமன்றம் பெண்குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்பவர் களுக்கு தூக்கு தண்டனை கொடுத்திருப்பதையும் வரவேற்று, மத்திய அரசுக்கும், உச்ச நீதிமன்றத்திற்கும், நீதி அரசர்களுக்கும், தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் பெண்குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்பவர்களுக்கு தூக்கு தண்டனை ஒன்றுதான் உரிய தீர்வு… என்று அவர் கூறியுள்ளார்.