![குற்றாலத்தில் குரங்குகள் மர்மமான முறையில் உயிரிழப்பு! 1 monkeys in courtallam](https://dhinasari.com/wp-content/uploads/2020/03/monkeys-in-courtallam.jpg)
குரங்குகள் அதிகம் வசிக்கும் குற்றால மலைப்பகுதியில், குரங்குகள் அண்மைக் காலமாக மர்மமான முறையில் உயிரிழந்து வருகின்றன. இதனை நெல்லை சரக, தென்காசி / செங்கோட்டை வனத்துறையினர் கவனத்தில் கொள்ள வேண்டும்.
குற்றாலம் பராசக்தி கல்லூரி வளாகத்துக்குள் கடந்த மூன்று நாட்களில் குரங்குகள் இயல்புக்கு மாறான வகையில் உயிரிழந்து வருகின்றன என்று தெரிகிறது.
மரத்தில் இருந்து இறங்க இயலாமல் குற்றுயிரும் குலையுயிருமாக இறங்கி வந்து, தவழ்ந்து சென்று… சற்று நேரத்தில் மயங்கி விழுந்து இறந்துவிடுவதாக மாணவிகளும் பேராசிரியர்களும் தெரிவிக்கின்றனர்.
கல்லூரி வளாகத்துக்குள் இருக்கும் குரங்குகள் பெரும்பாலும் வளாகத்தை விட்டு வெளியே செல்லாதவை. அங்கேயே இருப்பவை. பொதுவாக இயல்புக்கு மாறான வகையில் குரங்குகள் இறப்பதை கடந்த கால் நூற்றாண்டில் தாங்கள் இவ்வாறு கல்லூரி வளாகத்தில் பார்த்ததில்லை என்கின்றனர். மின்கம்பியில் அடிபட்டு அல்லது வாகனங்களில் அடிபட்டு இறப்பதைத் தவிர…
இது பற்றி பேசிக் கொண்டிருந்த போது, மெயின் அருவியின் அருகிலும், ஆற்றுப் பாலம் அருகிலும் இது போன்று நான்கைந்து குரங்குகள் உயிரிழந்திருப்பதாக ஒரு டீக்கடைக்காரர் தகவல் சொன்னார்.
எனவே வனத்துறையினர் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனோ வைரஸ் பரவி வருகின்ற சூழலில், விலங்குகளுக்கு இந்த வைரஸ் தொற்று அதிகம் பரவாது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது என்றாலும், முன்னெச்சரிக்கையாக இதனை எடுத்துக் கொண்டு ஆய்வு செய்வது நல்லது.