திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 9 குழந்தைகள் உள்ளிட்ட 65 நோயாளிகள்; அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் ஒருங்கிணைந்த அவசர கால தாய்சேய் சிகிச்சை பிரிவு உள்ளிட்ட வார்டுகளை அமைச்சர் பார்வையிட்டு அங்கு நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சை முறை குறித்து கேட்டறிந்தார். மருத்துவ மனை வளாகத்தில் ரூபாய் 7.15 கோடி மதிப்பில் செவிலியர் தங்கும் விடுதிக்கான கட்டிடப்பணிகளை அமைச்சர் பார்வையிட்டார். தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் காய்சலுக்கு என்று தனி சிகிச்சை பிரிவு துவங்கப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சல் முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். அமைச்சர் ஆய்வின் போது சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் கருணாகரன், தமிழ்நாடு மருத்துவ பணிகள் இயக்குநர் சந்திரநாதன், மருத்துவ கல்வி இயக்குநர் கீதாலெட்சுமி, ஆரம்ப சுகாதார நிலைய இயக்குநர் குழந்தைசாமி, மருத்துவ கல்லூரி முதல்வர் துளசிராம் உடன் இருந்தனர்.