கரூர்: தமிழகத்திலேயே மைய மாவட்டமாக திகழும் கரூர் மாவட்டத்தின் மைய பகுதியில் அமைந்துள்ள காந்திகிராமம் லார்ட்ஸ் பார்க் பள்ளியில் பயில்பவர் சு.ர.திவ்யங்கா. இப்பள்ளியில் 9 ம் வகுப்பு படிக்கும் திவ்யங்காவின் தகப்பனார் வி.எஸ்.ரவிச்சந்திரன், இவரது மனைவி கவிதா. இவர்களின் செல்லமகளான திவ்யங்கா உலகப் பொதுமறையாம் திருக்குறளை முழுமையாக படித்து 1330 குறளையும் எப்படி கேட்டாலும், சொல்லுகிற ஆற்றல் பெற்றுள்ளார். , கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் இப்பள்ளியின் முதல்வரான, தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற முனைவர் அ.கோவிந்தராஜூ தங்களது பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளில் யார் 1330 திருக்குறளையும் யார் சொல்லுகிறார்களோ ? அவர்களுக்கு தனது சொந்த நிதியிலிருந்து ஒரு திருக்குறளுக்கு ரூ 10 வீதம் 1330 குறளுக்கு ரூ 13 ஆயிரத்து 300 ரூபாய் பரிசு வழங்குவதாக அறிவித்திருந்தார். அந்த அறிவிப்பின் படி முதன் முதலில் இத்திட்டத்தில் வெற்றி பெற்ற சு.ர.திவ்யங்காவிற்கு ரூ 13 ஆயிரத்து 300 பணத்தை பொற்கிழி வழங்கியும் பாராட்டு விழாவும் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி முதல்வர் முனைவர்.அ.கோவிந்தராஜூ தலைமை தாங்கினார். ஆசிரியர் க.தங்கமணி அனைவரையும் வரவேற்றார். விழாவில் ரூ 13 ஆயிரத்து 300 ஐ முனைவர் அ.கோவிந்தராஜூ திருக்குறள் செல்வி திவ்யங்காவிற்கு வழங்கினார். கரூர் திருக்குறள் பேரவை சார்பில் செயலாளர் மேலை.பழநியப்பன் பரிசு வழங்கிய முதல்வர் அ.கோவிந்தராஜி, பரிசு பெற்ற திவ்யங்கா மற்றும் திவ்யங்காவின் பெற்றோர்களுக்கு நூலாடை அணிவித்து பாராட்டி பேசிய போது., அரங்கநாதனாக சிதம்பரத்தில் வாழ்வை துவங்கிய உலகத்திருக்குறள் பேரவையின் தலைவர் குன்றக்குடி அடிகளாரை தங்கள் வீட்டிற்கு பால் ஊற்ற வந்த போது ஒரு திருக்குறள் சொன்னால் காலன்னா பரிசு கொடுத்து திருக்குறள் ஆர்வத்தை வளர்த்த பேராசிரியர்கள் காரணமாக அமைந்தார்கள். அதை போல திவ்யங்காவின் திருக்குறள் ஆர்வத்தை வளர்த்த பெருமை, முதல்வர் கோவிந்தராஜூ, பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்களே சாரும் என்றார். மேலும் குருவை சாகுபடி மதித்து பணிந்து கல்வி கற்றால் ஒவ்வொருவரும் வாழ்க்கையில் உயரலாம் என்றார். பாராட்டுரை வழங்கிய பாவலர் எழில்வாணன், சிறந்த கவிஞரும், திருக்குறளை வாழ்வியலாக கொண்டவருமான முனைவர் அ.கோவிந்தரஜூம், அவரால் அடையாளம் காட்டப்பட்டுள்ள திவ்யங்காவும், பாராட்டுக்குரியவர் என்றார். தொடர்ந்து பாராட்டு உரை வழங்கிய திருக்குறள் பயிலரங்குகள் நடத்துகிற ஈரோடு கைலாசம், பாராட்டுரை வழங்கிய போது 25 ஆண்டுகளாக தான் முதல்வராக பணியாற்றுகிற பள்ளிகளில் பயிலரங்குகளுக்கு வாய்ப்பளித்து பயிற்று விப்பாளராகவும் துணை நிற்பவர் முனைவர் அ.கோவிந்தராஜூ என்றும் திவ்யங்கா, தொடர்ந்து திருக்குறளை கற்றும் ஆய்வு செய்தும் பெருமை சேர்க்க வேண்டும் என்றார். மேலும் இந்நிகழ்ச்சியில் பொதுநல ஆர்வலருமான க.ந.சதாசிவம் திவ்யங்காவிற்கு நினைவு பரிசுகள் வழங்கினார். இவ்விழாவில் முனைவர் அ.கோவிந்தராஜூ எழுதிய திவ்யங்காவை பாராட்டும் வானமும் கூட கைக்கெட்டும் என்ற விசைப்பாடலை மாணவிகள் பாடினர். தமிழாசிரியை சு.ஜெயா நன்றியுரையாற்றினார். மேலும் பரிசு பெற்ற மாணவி சு.ர.திவ்யங்கா தனது எதிர்கால கனவு ஐ.ஏ.எஸ் படித்து திருக்குறள் வழியில் ஆட்சி நடத்துவதே எனது லட்சியம் என்றார்.