கோவை: த.மா.கா., மீண்டும் காங்கிரஸுடன் இணைய வேண்டும், ப.சிதம்பரத்தின் தலைமை இல்லாமல், தமிழக காங்கிரஸ் கமிட்டி மக்கள் இயக்கமாகவோ, மக்கள் கவனத்தை ஈர்க்கும் இயக்கமாகவோ பரிணமிக்காது,” என கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார். இதனால் சிதம்பரம்- இளங்கோவன் இடையே மீண்டும் மோதல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய கமிட்டி உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், கோவையில் புதன் அன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கோவையில் கட்சி உறுப்பினர்கள் 6 பேரை நீக்கி மாவட்டத் தலைவர் அறிவிக்கை செய்தார். அது சட்டத்துக்கு மாறானது என்பதை நானும், எனது தந்தை ப.சிதம்பரமும் தெரிவித்தோம். இதையடுத்து, அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அறிவித்ததால், கோவை மாவட்ட காங்கிரஸ் அந்த உத்தரவை ரத்து செய்திருக்கிறது. சட்டத்துக்கு மாறாக, தவறான நடவடிக்கை எடுத்த கோவை மாவட்ட காங்கிரஸ் தலைவர் தவறுக்கு தார்மீக பொறுப்பேற்று மன்னிப்பு கேட்பதோடு, பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். முன்னாள் நிதியமைச்சர், உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் தலைமை, பரிந்துரை, அறிவுரை, ஒத்துழைப்பு இல்லாமல், தமிழக காங்கிரஸ் கமிட்டி மக்கள் இயக்கமாகவோ, மக்கள் கவனத்தை ஈர்க்கும் இயக்கமாகவோ நிச்சயம் பரிணமிக்காது. கூட்டுத்தலைமையின் மூலமாக எல்லோருடைய பரிந்துரையை கேட்கும் பக்குவத்தோடு கட்சி செயல்பட வேண்டும். தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு காங்கிரஸ் தயாராக வேண்டும். சிவகங்கையில் ஆரம்பத்தை துவக்கியிருக்கிறோம். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிட்டேன். அங்கு அனைத்து பிரதிநிதிகளை கூட்டி மாநாடு நடத்தினேன். அதேபோல் தமிழகம் முழுவதும் காங்கிரசார் மாநாடு நடத்த வேண்டும் த.மா.கா. தனியாக கட்சி நடத்த எந்த அரசியல் காரணமும் இல்லை. எனவே த.மா.கா. மீண்டும் காங்கிரசுடன் இணைய வேண்டும். இலங்கைக்கு காங்கிரஸ் சார்பில் சென்ற பிரதிநிதிகளை கண்டித்த திராவிடக் கட்சிகள், மோடி செல்வதை வாய் மூடி பார்த்திருப்பது ஏன்? அதேபோல் தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சிகளும் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசின் இலங்கை அணுகுமுறை பற்றிய வெள்ளை அறிக்கை தர வேண்டும்,” என்றார். 2016 சட்டமன்ற தேர்தலில் நீங்கள் முதல்வர் வேட்பாளராக போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த கார்த்தி சிதம்பரம், நான் முதல்வராக வாய்ப்பே கிடையாது என்றார். “தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் மாஜிஸ்திரேட் கார் மீது தாக்குதல் நடத்த முயற்சி நடக்கிறது. தமிழக முதல்வர், அமைச்சர்கள் பால்குடம், மண் சோறு, காவடி தூக்குவது போன்ற வேலைகளை செய்கிறார்களே தவிர அரசு நிர்வாகத்தை கவனிப்பதில்லை” என்றார் அவர்.