யுடிஎஸ்., மொபைல் ஆப்ஸ் மூலம் முன்பதிவில்லா ரயில் டிக்கெட் எடுக்கும் முறை நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது.
யுடிஎஸ் எனப்படும் மொபைல் ஆப்சை ரயில்வே கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகம் செய்தது. முதலில், உள்ளூர் ரயில்களை அதிகம் பயன்படுத்தும் பயணிகளை கொண்ட மும்பையில் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது.
இந்நிலையில் நவம்பர் 1ம் தேதி முதல் நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் மொபைல் ஆப் மூலமாக முன்பதிவில்லா டிக்கெட்களை பெறுவதற்கான வசதியை ரயில்வே துறை அறிமுகம் செய்வதாக கடந்த மாத இறுதியில் அறிவித்தது.
இதுபோல், நீண்ட தூரம் பயணம் செய்ய விரும்பும் பயணிகளும் இந்த மொபைல் ஆப் வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம் என தெரிவித்தது. இதன்படி இந்த மொபைல் ஆப்ஸ் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த ஆப்சை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. பயணிகள் இந்த ஆப்சை மொபைலில் பதிவிறக்கம் செய்து தங்கள் விவரங்களை உள்ளீடு செய்ய வேண்டும்.
இதில் முன்பதிவில்லா டிக்கெட் மட்டுமின்றி, பிளாட்பாரம் டிக்கெட், மாதாந்திர சீசன் ஆகியவற்றையும் எடுக்கலாம். யுடிஎஸ் ஆன் மொபைல் எனப்படும் இந்த ஆப்ஸ் ஆண்டிராய்டு, விண்டோஸ் மற்றும் ஆப்பிள் போன்களுக்கு உருவாக்கப்பட்டு உள்ளது.