வேலூர் ஆர்யாஸ் மோர்க்குழம்பு
நன்றி-
செய்முறை!
தேங்காயத் துருவல், ஒரே ஒரு பச்சை மிளகாய், சீரகம் ஒரு ஸ்பூன், வாசனைக்கு நாலு மிளகு, நாலு தனியா, மறக்காமல் ஒரு பெரிய பட்டை இரண்டு கிராம்பு, ஒரு பிஞ்ச் வெந்தயம், இரண்டு ஸ்பூன் வறுத்த கடலை (பொட்டுக்கடலை), கொஞ்சம் மஞ்சள் தூள்….
நீர் விட்டு மிக்சியில் எதையும் வறுக்காமல் அரைக்கவும். துவையல் பதத்திற்கு அரைக்கவும்….
பின்னர் ஒரு பெரிய வெங்காயம், நாலு குறுக்கே வெட்டின பச்சை மிளகாய், (இஞ்சி சேர்க்கலாம்…. இல்லைன்னாலும் பரவாயில்லை), ஒரு எண்ணிக்கை பூண்டை நறுக்காமல், நசுக்கி, தோலை பிரித்தெடுக்கவும்… நறுக்கின பூண்டை விட, நசுக்கிய பூண்டில் எஃப்பெக்ட் அதிகம்.
வாணலியில் கடுகு, கொஞ்சமாக பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து அதன் மேல் முதலில் 30 செகண்ட் பூண்டு, மிளகாயை வதக்கி அதன் பின் வெங்காயம் போட்டு கண்ணாடி பதத்திற்கு வதக்கவும்….
மோர்க்குழம்பில் இரண்டு விதமான மோரை உபயோகிக்கலாம். ஒன்று புளித்த மோர்….. புளிப்பு சுவையைத் தானாகவே கொடுக்கும். (பெரும்பாலும் வீடுகளில் மீந்து போன புளித்த மோரை, வெடி மோராகவோ, மோர்க்குழம்பாகவோ செய்வதே வழக்கம்…. சிக்கனம் கருதி). ஆனால் புதியதாக தயிரை சிலுப்பி செய்யும் மார்க் குழம்பே சாலச் சிறந்தது…. தயிரை நன்றாக சிலுப்பி கட்டிகள் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும்…. தேவையான தண்ணீரை இங்கே சேர்க்கவும். சமையல் செய்த பின் சேர்க்காதீர்கள்….
மிக்சியில் அரைத்த கலவையை மோரில் கரைத்து, பின்னர் வாணலியில் வெங்காய வதக்கலோடு விட்டு, சிம்மரில் லேசாக கொதி வரும் வரை வதக்கவும்….
கடைசியாக, சிறிது கடுகு, பொருங்காயம் கறிவேப்பிலையை தேங்காய் எண்ணெயில் தாளிக்கவும்…. கவனிக்க …. தேங்காய் எண்ணெய்….
என்னது? உப்பு போட மறந்துட்டேனா? கையில் ஒரு ஸ்பூன் டேஸ்ட்டுக்கு ஏற்ப உப்பைச் சேருங்கள்… உப்பு ஒரு ஸ்டெப் கம்மியாக இருப்பதே மோர்க்குழம்பிற்கு அழகு!
ஆர்யாஸ் மோர்க்குழம்பின்
ஆஸ்தான இரசிகன்….
டிமிட்த் பெட்கோவ்ஸ்கி!