சென்னை கடற்கரை, சென்ட்ரலில் இருந்து புறப்படும் மின்சார ரெயில்களில் பயணம் செய்வதற்கு வசதியாக மாதாந்திர பயண அட்டை பயணிகளுக்கு வழங்கப்படுகிறது.
இதே போல் மற்ற ரெயில்களில் தொலை தூரங்களில் இருந்து வருபவர்களுக்காக ‘சீசன் பாஸ்’ உள்ளது.
இந்த பயண அட்டை அதிக பட்சம் 150 கி.மீ. தூரம் வரை பயணம் செய்யும் வகையில் வழங்கப்படுகிறது.
அதன்படி எழும்பூரில் இருந்து திண்டிவனம் வரை செல்ல ‘பாஸ்’ உள்ளது. இந்த பயண தூரம் 122 கி.மீ. ஆகும்.
ஆனால் சில பயணிகள் விழுப்புரத்தில் இருந்தும் சென்னைக்கு பணி நிமித்தமாக வந்து செல்கிறார்கள்.
இவர்கள் திண்டிவனம் வரை மட்டுமே சீசன் அட்டையை பயன்படுத்த முடியும் என்பதால் அதன் பிறகு பஸ் ஏறி விழுப்புரத்துக்கு செல்கிறார்கள்.
இதனால் விழுப்புரம் வரை சீசன் அட்டையை நீட்டிக்க வேண்டும் என்று தென்னக ரெயில்வேக்கு ஏராளமான கோரிக்கை மனு சென்றுள்ளது.
சமீபத்தில் மும்பையில் சீசன் அட்டை பயண தூரத்தை 150 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து 160 கிலோ மீட்டர் வரை நீட்டித்து அனுமதி வழங்கினார்கள்.
இதை மேற்கொள் காட்டி பயணிகள் ரெயில்வே அதிகாரிகளுக்கு கடிதம் எழுதி உள்ளனர்.
அதன் அடிப்படையில் சென்னையில் இருந்தும் 160 கிலோ மீட்டர் தூரம் வரை சீசன் டிக்கெட்டை பயன்படுத்தி பயணம் செய்ய இப்போது வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதன்படி சென்னை சென்ட்ரலில் இருந்து அரக்கோணம் காட்பாடி வழியாக மேல்ஆளத்தூர் வரை (158.81 கி.மீ.) ரெயிலில் பயணம் செய்ய சீசன் டிக்கெட் வழங்கப்படுகிறது.
எழும்பூரில் இருந்து புறப்பட்டு பூங்கா நகர், சென்ட்ரல், அரக்கோணம், காட்பாடி வழியாக குடியாத்தம் செல்லவும் (155.36 கி.மீ.) சீசன் டிக்கெட் வாங்கலாம்.
மற்றொரு வழித்டமான எழும்பூரில் இருந்து பூங்கா நகர், கடற்கரை, வண்ணாரப்பேட்டை, அரக்கோணம் வழியாக (159.91 கி.மீ.) குடியாத்தம் செல்லும் ரெயிலிலும் சீசன் டிக்கெட் மூலம் பயணம் செய்யலாம்.
இந்த 3 வழித்தடங்களுக்கு மட்டுமே 10 கி.மீ. தூரத்தை அதிகப்படுத்தி சீசன் டிக்கெட் வழங்கப்படுகிறது. இதன் மூலம் வெளியூர் செல்லும் பயணிகள் பலன் அடைவார்கள்.
திண்டிவனம் மார்க்கத்தில் விழுப்புரம் வரை நீட்டிக்க சீசன் டிக்கெட் இன்னும் நடைமுறைக்கு கொண்டு வராமல் உள்ளதை விரைவில் நடைமுறைக்கு கொண்டு வரவேண்டும் என்று பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.