― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்சதுர்த்தி ஸ்பெஷல்: அஷ்ட விநாயகர் ஆலயங்கள் தரிசனம் (மகாராஷ்டிரா)

சதுர்த்தி ஸ்பெஷல்: அஷ்ட விநாயகர் ஆலயங்கள் தரிசனம் (மகாராஷ்டிரா)

- Advertisement -

அஷ்ட விநாயகர் ஆலயங்கள், மகாராஷ்டிரா.

கணபதிக்கு உரித்தான எட்டு புகழ்பெற்ற ஆலயங்கள் மகாராட்டிரா மாநிலத்தில் அமைந்துள்ளன. கணேஷ புராணத்தில் இத்தலங்களின் சிறப்பு பற்றி விளக்கப்பட்டுள்ளது. விநாயகரின் சக்தி பீடங்களாக இவை போற்றப்படுகின்றன.

பல வேறு உருவ அமைப்புகளைக் கொண்ட இவ்விநாயகர்கள் மயூரேஷ்வர், சித்தி விநாயகர், பல்லாலேஷ்வர், வரத விநாயகர், சிந்தாமணி விநாயகர், கிரிஜாத்மஜர், விக்னேஷ்வரர், மகா கணபதி என்று அழைக்கப்படுகிறார்.

ஒரு வட்டத்தை வரைய வேண்டுமென்றால் எங்கே ஆரம்பித்தோமோ அங்கே வந்து முடிக்க வேண்டும். தல யாத்திரை, தீர்த்த யாத்திரை கூட அவ்விதம் முடித்தால்தான் பலனளிக்கும் என்று கூறப்படுகிறது.

துவாதச ஜோதிர் லிங்கங்கள், அஷ்டாதச சக்தி பீடங்கள், காசீ ராமேஸ்வர யாத்திரை போன்றே மஹாராஷ்டிராவிலுள்ள சுயம்பு மூர்த்திகளான அஷ்ட விநாயகத் தலங்களை தரிசிக்கும்போது முதலில் மயூர கணபதியை தரிசித்து, பின் மற்ற கணபதிகளையும் தரிசித்து விட்டு மீண்டும் மயூர கணபதியை தரிசிக்க வேண்டும். அப்போது தான் தரிசன பலன் கிடைக்கும், கஷ்டங்கள் நீங்கி சகல சுபங்களும் நிகழும் என்பது பக்தர்களின் ஆழ்ந்த நம்பிக்கை.

  1. ஸ்ரீமயூர கணபதி ;-
    ‘மோர்காவ்’ என்றழைக்கப்படும் இந்த புனித தலம் புனாவிலிருந்து 55 கி.மீ. தொலைவில் ‘பாராமதி’ தாலுக்காவில் ‘கர்ஹா’ நதிக் கரையில் அமைந்துள்ளது. ஜடபரதர் இங்கு தவம் செய்ததாகக் கூறப்படுகிறது.

சிந்துராசுரன் என்பவனை அழிக்க கணபதி, மயிலை வாகனமாக்கி கொண்டு யுத்தம் செய்ததால் மோரேஷ்வர் அல்லது மயூரேஷ்வர் என்று துதிக்கப்படுகிறார்.

இடஞ்சுழி பிள்ளையாராக மயூர வாகனத்தின் மீதமர்ந்து இத்தலத்தில் கணபதி சித்தி, புத்தி சமேதராக தரிசனமளிக்கிறார். கணேஷரின் தலை மீது நாகம் படமெடுத்து நிற்கிறது. கணபதிக்கு உடல் முழுவதும் காவிச் சாந்து பூசப்பட்டுள்ளது.

கணபதியின் எதிரில் கர்பாலயத்தைப் பார்த்தபடி நந்தியும் மூஞ்சூறும் அமர்ந்துள்ளன. வேறு ஒரு சிவாலயத்திற்காக நந்தி வாகனம் எடுத்துச் செல்லப்பட்டபோது இக்கோயிலருகே வண்டி நின்று விட்டதாகவும், நந்தி அங்கிருந்து நகர மறுத்து விட்டதால் அதனை அங்கேயே பிரதிஷ்டை செய்ததாகவும் வரலாறு.

பாண்டவர்கள் வனவாசத்தின் போது இந்த கணபதியை தரிசித்து பூஜித்தார்கள் என்றும் அந்த விக்கிரகம் தற்போதுள்ள விக்கிரகத்திற்குப் பின் புறம் உள்ளதென்றும் இங்குள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த ஆலயம் பார்ப்பதற்கு நான்கு புறமும் மினார்கள் எனப்படும் தூண்களோடு காட்சியளிக்கிறது. முகமதிய அரசர்களின் படையெடுப்பிலிருந்து ஆலயத்தைக் காப்பதற்காக இவ்விதம் அமைத்தார்கள் என்றும் பாமினி சுல்தான்கள் காலத்தில் இவ்வாலயம் கட்டப்பட்டதென்றும் கூறப்படுகிறது. இவ்வாலயத்தைச் சுற்றி கோட்டை போல் 50 அடி உயரச் சுவர் உள்ளது.

ஆலயத்திற்கு நான்கு பிரதான வாயில்கள் உள்ளன. ஆலயத்தின் எட்டு மூலைகளில் ஏகதந்தர், மகோதரர், கஜானனர், லம்போதரர், விகடர், விக்னராஜர், தூம்ரவர்ணர், வக்ர துண்டர் ஆகிய எட்டு விநாயக மூர்த்திகள் உள்ளனர்.

குழந்தை பாக்கியம் வேண்டி பக்தர்கள் இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.

இந்த கிராமத்தில் ஒரு காலத்தில் மயில்கள் நிரம்பியிருந்ததாகவும், கிராமமே மயில் வடிவத்தில் அமைந்துள்ளதாகவும் அதனால் ‘மோர்காவ்’ என்றழைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

2.ஸ்ரீசித்தி விநாயகர்:-
ஸ்ரீ சித்தி விநாயகர் கோவில் புனேயிலிருந்து 110 கி.மீ. தொலைவில் புனே – ஷோலாப்பூர் நெடுஞ்சாலையில் உள்ளது. அஹமதாபாத் மாவட்டத்தில் பீமா நதிக்கரையில் உள்ள கர்ஜத் தாலுக்காவில் ‘ஸ்ரீகொண்ட’ என்ற நகரிலிருந்து 48 கி.மீ. தொலைவில் சிறிய மலை மீது அமைந்துள்ளது.

வலஞ்சுழி பிள்ளையாராக சித்தியும் புத்தியும் தொடைமீது அமர்ந்திருக்க பெரும்புகழோடு விளங்குகிறார் ஸ்ரீசித்தி விநாயகர்.

முன்பு மது கைடபர்களை வதைப்பதற்கு ஸ்ரீமகாவிஷ்ணு விநாயகரின் உதவி கோரினார் என்றும் அதற்கு நன்றியாக இங்கு ஆலயம் கட்டி லம்போதரரை பிரதிஷ்டை செய்தார் என்றும் தல புராணம் தெரிவிக்கிறது.

இக்கோவிலை ஒரு முறை பிரதக்ஷிணம் செய்ய வேண்டுமானால் மலையைச் சுற்றி அரை மணி நேரம் வலம் வர வேண்டும். ஆயினும் கோரின வரமளிக்கும் வரசித்தி விநாயகரானதால் பக்தர்கள் சிரத்தையுடன் கிரி பிரதக்ஷிணம் செய்கின்றனர்.

இங்கு மூன்றடி உயரமும் இரண்டரை அடி அகலமும் உள்ள விநாயக மூர்த்தி கவசம் அணிந்து வடக்கு பார்த்து அமர்ந்து ஜய, விஜயர்கள் காவலிருக்கக் காட்சி தருகிறார்.

இத்தலம் அமைதிக்குப் பெயர் போனதாக விளங்குகிறது. பீமா நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டால் கூட இந்த ஆலயத்தின் அருகில் சப்தம் செய்யாமல் அமைதி காக்கும் என்பது நியதி.

பேஷ்வாவிடம் பணியாற்றி வந்த ‘ஹரிபந்த் படாகே’ என்பவர் சேனாதிபதி பதவியை இழந்த பின் இந்த ஆலயத்தைச் சுற்றி 21 பிரதக்ஷிணங்கள் செய்து வந்தார். 21ஆம் நாள் பேஷ்வாவிடமிருந்து இவருக்கு கௌரவ மரியாதையோடு அழைப்பு வந்து இழந்த பதவி திரும்பக் கிடைத்தது. அப்போது அவர் விநாயகரிடம் தான் முதன் முதலில் வெல்லும் கோட்டையின் கற்களை எடுத்து வந்து கோயிலுக்குப் பாதை அமைப்பதாக பிரதிக்ஞை செய்தார். அதன்படி ஆலயத்திற்குச் செல்லும் பிரதான சாலையை பேஷ்வாவின் சேனாதிபதியான ஹரி பந்த் படாகே கட்டியுள்ளார்.

அகல்யாபாய் ஹோல்கர் கர்பாலயத்தை 15 அடி உயரம், 10 அடி அகலத்திற்கு உயர்த்திக் கட்டியுள்ளார்.

3. ஸ்ரீ பல்லாலேஷ்வர்:-

மும்பை, புனா நெடுஞ்சாலையில் ‘பாலி’ என்ற நகரத்திலுள்ள ஸ்ரீபல்லாலேஷ்வர் ஆலயம் புனேவிலிருந்து 111 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

காலையில் சூரியன் உதிக்கையில் சூரிய கிரணங்கள் விக்கிரகத்தின் மேல் நேரடியாக விழுகின்றன. அதனைப் பார்த்து பக்தர்கள் கூட்டம் பரவசமடைகின்றது.

பஞ்ச லோக ஆலயமணி இங்குள்ள சிறப்புகளும் ஒன்று. இந்த ஐரோப்பிய மணியை ‘வாசாய்’ போரில் வென்று பேஷ்வா எடுத்து வந்ததாகத் தெரிகிறது.

விநாயக பக்தனான ‘பல்லாலன்’ என்ற சிறுவனை அவன் தந்தையும் கிராமத்தாரும் அடித்துத் துன்புறுத்தியபோது காத்து ரட்சித்ததால் இவர் ‘பல்லாலேஷ்வர்’ என்று துதிக்கப்படுகிறார்.

மரத்தாலான இக்கோயிலை 1760ல் நானா பட்நாவிஸ் கருங்கல் கட்டடமாக மாற்றியமைத்தார். உருக்கிய ஈயத்தால் கற்களை இணைத்துக் கட்டிய கோவில் இது. கோவிலின் இருபுறமும் இரண்டு திருக்குளங்கள் உள்ளன.

கிழக்கு பார்த்த இந்த ஆலயத்தின் கார்பாலயத்தில் பல்லாலேஷ்வர் இடஞ்சுழி விநாயகராக மற்ற விநாயகர்களைப் போலவே கண்களிலும் நாபியிலும் வைரக்கற்கள் பதிக்கப்பட்டு, கையில் கொழுக்கட்டையை பிடித்திருக்கும் மூஷிகரோடு கொலுவீற்றுள்ளார். ஆலயத்தின் பின் புறம் உள்ள மலையைப் போன்றே விநாயகரும் தோற்றமளிப்பது இதன் சிறப்பு.

இக்கோவிலில் அழகிய வேலைப்பாடமைந்த எட்டு தூண்களால் தாங்கப்படும் அழகிய முக மண்டபம் உள்ளது. கர்பாலயம் 15 அடி உயரம் கொண்டது.

கணேஷ புராணத்தில் பல்லாலேஷ்வரின் கதை விஸ்தாரமாக கூறப்பட்டுள்ளது. ‘பல்லிபூர்’ என்ற ஊரில் ‘கல்யாண் சேத்’ என்ற வியாபாரிக்கும் இந்துமதிக்கும் பல்லாலன் மகனாகப் பிறந்தான். பிறவியிலேயே தெய்வ பக்தி நிரம்பியிருந்த இச்சிறுவன் கணபதியை சிறப்பாக வழிபட்டு வந்தான். காட்டில் நண்பர்களோடு விநாயகர் வழிபாட்டில் ஈடுபட்டதால் வீட்டிற்கு வருவதற்கு தினமும் நேரமாகியது. அதனால் நண்பர்களின் பெற்றோர் கல்யாண் சேத்திடன் தம் பிள்ளைகள் பல்லாலனுடன் சேர்நது கெட்டுப் போவதாகக் குற்றம் சாட்டினார். படிப்பில் கவனம் செலுத்தாமல் தெய்வ வழிபாட்டில் ஈடுபடும் பல்லாலன் மேல் கோபம் கொண்ட கல்யாண் சேத், காட்டில் பல்லாலனும் நண்பர்களும் வழிபாடு நடத்தும் இடத்திற்குச் சென்று அனைத்தையும் கலைத்து பந்தலைப் பிரித்து, கடவுள் சிலையை தூர வீசி எறிந்தான். மற்ற சிறுவர்கள் பயந்து நடுங்குகையில், பூஜையில் தன்னை மறந்து ஈடுபட்டிருந்த பல்லாலன் இவை ஏதுமறியாதிருந்தான். ஆனால் தந்தை கல்யாண் சேத் பல்லாலனைத் தீவீரமாக நையப் புடைத்து மரத்தோடு சேர்த்துக் கட்டி விட்டு, ‘அந்த கணேசன் வந்து உன்னைக் காப்பாற்றட்டும் ‘ என்று கூறிச் சென்று விட்டான்.

வலியோடு தனிமையில் காட்டு மரத்தில் கட்டப்பட்டிருந்த பல்லாலன் தன் இஷ்ட தெய்வமான கணேசரைக் கூவி அழைத்தான். கணேசர் தரிசனமளித்து கட்டைப் பிரித்து சிறுவனை அணைத்து தீர்காயுளை ஆசியாக வழங்கினார். சிறுவனின் வேண்டுகோள்படி ‘பாலி’ நகரிலேயே பல்லாலேஷ்வரராக ஒரு பெரிய கல்லில் நிலைத்து விட்டார்.

காட்டில் பல்லாலனால் வழிபடப்பட்டு கல்யாண் சேத்தினால் வீசி எறிய பட்ட விநாயகர் சிலை ‘துண்டி விநாயகர்’ என்ற பெயரில் பல்லாலேஷ்வர் ஆலயத்தின் பின் புறம் சந்நிதி கொண்டுள்ளார்.

மேற்கு பார்த்து அமர்ந்துள்ள துண்டி விநாயகரை முதலில் தரிசித்து விட்டே பல்லாலேஷ்வர் ஆலயம் செல்ல வேண்டுமென்பது பல காலமாக இங்கு கடைபிடிக்கப்படும் நியதி.

4. ஸ்ரீ வரத விநாயகர்:-
புனாவிலிருந்து 80 கி.மீ. தொலைவில் ராய்காட் மாவட்டத்தில் ‘மஹத்’ கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வரத விநாயகர் ஆலயத்தில் 1892 முதல் நந்தா தீபம் அகண்டமாக ஒளிவிட்டு பிரகாசித்து வருகிறது. இங்கு இடஞ்சுழி விநாயகரான சுவாமியை பக்தர்கள் தொட்டு வழிபட முடியும். சந்நிதி கிழக்கு பார்த்துள்ளது.

ஆலயத்தின் நான்கு புறங்களிலும் நான்கு யானை சிலைகள் உள்ளன. முக மண்டபம் எட்டடிக்கு எட்டடி கொண்டது. விமானம் நாகத்தின் வடிவில் 25 அடி உயரத்தில் தங்க கலசத்தோடு ஒளிர்கிறது.

‘க்ருத் சமதன்’ என்ற பக்தனின் வேண்டுகோளுக்கிணங்க விநாயகர் இந்த பூங்காவனத்தில் கோயில் கொண்டு பக்தர்களின் கவலைகளைத் தீர்த்து அருள் பாலிக்கிறார். இங்கு நீராடி தான, தர்மம் செய்வோரின் கோரிக்கைகள் நிறைவேறுகின்றன என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஆலயம் வெளியிலிருந்து பார்த்தால் ஒரு வீடு போல்தான் காணப்படுகிறது. ஆனால் உள்ளே கலைக் கோயிலாக விரிகிறது. இங்கு இரண்டு விநாயக மூர்த்திகள் உள்ளனர். ஒன்று சலவைக் கல்லாலானது. இன்னொன்று சிம்மாசனத்தில் அமர்ந்து சிந்தூரம் பூசிய ஸ்ரீவரத விநாயகர். சங்கட ஹர சதுர்த்தியின் போது விசேஷ அலங்காரங்களோடு உற்சவம் நிகழ்கிறது.

ஸ்ரீ வரதவிநாயகர் 1690ல் கோயிலை ஒட்டி பின்புறம் உள்ள ஏரியிலிருந்து கண்டெடுக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். 1725ல் ராம்ஜி மகாதேவ் பிவால்கர் என்ற கல்யாண் மாவட்ட சுபேதார் தற்போதைய ஸ்ரீவரத விநாயகர் ஆலயத்தை ‘மஹத்’ கிராமத்தில் நிர்மாணித்தார்.

5. ஸ்ரீ சிந்தாமணி விநாயகர்:-

கதம்ப தீர்த்தத்தருகில் அமைந்துள்ள விநாயகர் ஸ்ரீ சிந்தாமணி விநாயகர். புனாவிலிருந்து 22 கி.மீ. தொலைவில் புனே, ஷோலாப்பூர் நெடுஞ்சாலையில் ‘தேவூர்’ கிராமத்தில் மூலா, முத்தா, பீமா என்ற மூன்று நதிகளின் சங்கம ஸ்தானத்தில் அமைத்துள்ளது இப்புனிதத் தலம்.

ஆலயத்தின் பின் புறம் உள்ள ஏரி கதம்ப தீர்த்தம் என்றழைக்கப்படுகிறது. வடக்கு நோக்கிய கோபுர வாசல் கொண்ட ஆலயம். இடஞ்சுழி விநாயகர் கிழக்கு நோக்கி அமர்ந்துள்ளார்.

ஆலயத்தை ‘ஸ்ரீ மொரயா கோசா’ வின் வழி வந்த ‘ஸ்ரீ தரந்தர் மகாராஜ் தேவ்’ என்பவர் கட்டியதாகக் கூறப்படுகிறது. அதற்கு நூறு ஆண்டுகளுக்குப் பிறகு மரத்தாலான வெளி மண்டபத்தை ஸ்ரீ மாதவ்ராவ் பேஷ்வா கட்டியுள்ளார்.

தேவூர் கிராமத்தில் கபில மகா முனிவர் தவம் செய்து வந்தார். அவரிடம் பக்தர்களின் குறை தீர்க்கும் சிந்தாமணி ஆபரணம் இருந்தது. அந்தப் பகுதியை ஆண்ட அபிஜித் மகாராஜாவின் மகன் ‘குணா’ என்பவன் சிந்தாமணியின் சிறப்பை அறிந்து அதனை முனிவரிடமிருந்து திருடி விட்டான். கபில முனிவர் கணபதியின் உதவியோடு அரசனை வென்று மணியைத் திரும்பப் பெற்று கணபதியின் கழுத்தில் அணிவித்தார். அன்று முதல் சிந்தாமணி கணபதியாக ஆராதிக்கப்படுகிறார்.

6. ஸ்ரீ கிரிஜாத்மஜ விநாயகர் ;-

புனேவிலிருந்து 94கி.மீ. தொலைவில் புனே, நாசிக் நெடுஞ்சாலையில் ‘குகடி’ நதிக்கரையில் ‘லென்யாத்ரி’ என்ற மலை மீதுள்ள 18 பௌத்த குகைளின் நடுவே உள்ள ஆலயம் கிரிஜாத்மஜ விநாயகர் ஆலயம். இது 8வது குகையில் அமைந்துள்ளது.

பார்வதி தேவி குழந்தை வரம் வேண்டி இங்கு 12 ஆண்டுகள் தவம் இருந்த பின் மஞ்சள் பொடியால் செய்த பாலகணபதிக்கு உயிர் கொடுத்தாள் என்றும் கணபதி அங்கேயே தாயுடன் தங்கியுள்ளார் என்றும் புராணம் விவரிக்கிறது. கிரிஜாவின் ஆத்மஜன் (மகன்) கிரிஜாத்மஜன்.

இந்த கணபதியை தரிசிக்க 307 படிகள் ஏற வேண்டும். தூண்கள் இன்றி வெறும் ஒற்றைக் கல்லாலான கோவில். இந்த கோவிலின் மண்டபம் 53 அடி நீளமும் 51 அடி அகலமும் 7 அடி உயரமும் கொண்டது. மின்சார விளக்கின் தேவையின்றி பகற் பொழுதில் சூரிய கிரணங்கள் ஆலயத்தில் விழும்படி கட்டியிருப்பதால் இந்த சுவாமியை சுகமாக தரிசிக்க முடிகிறது. இது இந்த ஆலயத்தின் விசேஷ சிறப்பு .

இடஞ்சுழி பிள்ளையாராக வடக்கு பார்த்து அமர்ந்துள்ளார் கிரிஜாத்மஜர். கோவில் தெற்கு பார்த்த வாயில் கொண்டுள்ளது. இயற்கை அழகு மிகுந்த மலை மேல் அமைந்துள்ள இவ்வாலயம் பக்தர்களை அதிக அளவில் ஈர்க்கிறது.

சத்ரபதி சிவாஜி பிறந்த ‘ஷிவனேரி’ கோட்டை இங்கிருந்து 6 கி.மீ.தொலைவில் உள்ளது.

7. ஸ்ரீ விக்னேஷ்வர விநாயகர்:-

ஜுன்னா மாவட்டத்தில் ‘நாராயண் காவ்’ நகரிலிருந்து 12 கி.மீ. தொலைவில் புனே, நாசிக் நெடுஞ்சாலையில் ‘ஓஜூர்’ நகரில் ‘குகடி’ நதி தீரத்தில் விக்னேஷ்வர விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது.

சித்தி புத்தியோடு இடஞ்சுழி பிள்ளையாராக கோயில் கொண்டுள்ளார். ஆலயம் கிழக்கு பார்த்துள்ளது. கல்லாலான பெரிய சுற்றுச் சுவரால் சூழப்பட்டுள்ளது.

முன்பு விக்னாசுரன் என்ற அசுரன் முனிவர்களை பீடிக்கவே, அவர்கள் விநாயகரை பிரார்த்தித்தனர். ஏகதந்தரான விநாயகர் நீண்ட நாள் அந்த அசுரனுடன் யுத்தம் செய்தார். அவரை ஜெயிக்க இயலாது என்றுணர்ந்த அசுரன், சுவாமியிடம் சரணடைந்தான். தன் பெயரால் அவ்விடத்திலேயே கொலு வீற்றிருக்கக் கோரினான். அவன் வேண்டுகோளை சுவீகரித்து சுவாமி விக்னேஷ்வர விநாயகராக அங்கு நிலைகொண்டார். அக்காலத்தில் முனிவர்களே அவருக்கு ஆலயம் எழுப்பினர். பிற்காலத்தில் ‘பேஷ்வா சிமாஜி அப்பா’ என்பவர் போர்துகீசியரை வென்ற பின் இந்த ஆலயத்தை புனருத்தாரணம் செய்வித்தார். தங்கத் தகடுகளால் பளபள வென்று ஒளிரும் ஆலய சிகரம் பக்தர்களை வசீகரிக்கிறது.

8. ஸ்ரீ மகா கணபதி:-

புனேவிலிருந்து 50 கி.மீ. தொலைவில் ‘மணிபுரம்’ என்றழைக்கப்பட்ட ‘ரஞ்சன்காவ்’ என்ற கிராமத்தில் ஸ்ரீமகா கணபதி கோயில் கொண்டுள்ளார்.

திரிபுராசுர சம்ஹார காலத்தில் பரமேஸ்வரன் இந்த கணபதியை மனதில் தியானித்து யுத்தம் செய்து அசுரர்களை சம்காரம் செய்தார். அதற்கு நன்றியாக சிவனே ஸ்ரீமகா கணபதியை இங்கு பிரதிஷ்டை செய்தார் என்று கணேச புராணம் தெரிவிக்கிறது.

9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் இந்த ஆலயத்தில் தக்ஷிணாயனத்தில் சூரிய கிரணங்கள் நேராக சுவாமி மீது விழுகின்றன.

18ஆம் நூற்றாண்டில் ஸ்ரீமாதவ்ராவ் பேஷ்வா இவ்வாலயத்தைப் புனருத்தாரணம் செய்துள்ளார். சித்தி புத்தி சமேதராக இடஞ்சுழி பிள்ளையார் பத்மாசனத்தில் வீற்றிருக்கிறார்.

இக்கோயில் மிக அழகிய கிழக்கு பார்த்த வாயில் முகப்பைக் கொண்டுள்ளது. ஜய விஜயர்கள் இருபுறமும் காவல் உள்ளனர்.

இந்த எட்டு விநாயகத் தலங்களிலும் அர்ச்சனை அபிஷேகங்கள் ஒரே விதமாகவே இருக்கின்றன. இத்தலங்களை தரிசித்த பின் மீண்டும் மயூரேஷ்வரரை தரிசித்தால்தான் இந்த யாத்திரை பூர்த்தியாகும் என்பது பக்தர்களின் ஆழ்ந்த நம்பிக்கை.

  • தரிசித்து எழுதியவர் – ராஜி ரகுநாதன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version