“அடக்கத்தின் அவதாரம்”
“பெரியவா, சங்கரர் என்பது, உடனிருந்த கிங்கரர்களுக்குப் புரியவில்லை
(கூர்காவுக்குத் தெரிந்திருந்தது.)
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்
ஒரு கூர்கா, தரிசனத்துக்கு வந்தார். முகத்தில் கவலை தெரிந்தது.
“என்ன சமாசாரம்னு கேளு” என்று தொண்டரிடம் சொன்னார்கள் பெரியவா.
கூர்கா சொன்னார்.
“நான் பிறந்ததிலிருந்தே கஷ்டங்களைத்தான் அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்.ஆனால் ஏதோ புண்ணிய வசத்தால் தெய்வ ஸ்வரூபமான பெரியவா தரிசனம் கிடைச்சிருக்கு….இனி எனக்கு ஜன்மாவே வரக் கூடாது என்று அனுக்ரஹம் பண்ணணும்…”
“ஆகா,அப்படியே ஆகுக! உனக்கு இனி ஜன்மாவே கிடையாது!” என்று பெரியவாள் சொல்லி விடவில்லை.
பின் மெதுவாகச் சொன்னார்கள்.
“அந்த மாதிரி வரம் கொடுக்கும் சக்தி எனக்கு இல்லை. நான் தினந்தோறும் பூஜை செய்யும் சந்த்ரமௌளீஸ்வரரையும் த்ரிபுர சுந்தரியையும் உனக்காகப் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்….”
கூர்காவுக்கு இந்தப் பதில் நியாயமாகப்பட்டது போலும். ஒரே குதூகலம் அவருக்கு.
பிரசாதம் பெற்றுக் கொண்டு;, “எனக்கு இனிமேல் ஜன்மா கிடையாது….ஈசுவராக்ஞை” என்று திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டே போனார்.
“ரொம்ப நாள் கழிச்சு இந்த மாதிரி, எனக்கு ஜன்மா வரக் கூடாதுன்னு கேட்டு, இவன் ஒருத்தன் தான் வந்திருக்கான்!” என்று கண்களில் ஞானஒளி வீசக் கூறினார்கள் பெரியவா.
“மனுஷ்யனாக அவதாரம் பண்ணிய ராமன், எந்தத் தைரியத்தில் ஜடாயுவுக்கு ஸ்வர்க்க லோகத்தைக் கொடுத்தான்? அவனறியாமல் நாராயணத்வம் வெளிப்பட்டு விட்டது” என்று ஒரு பௌராணிகர் கூறியது நினைவுக்கு வந்தது.
பெரியவா, சங்கரர் என்பது, உடனிருந்த கிங்கரர்களுக்குப் புரியவில்லை.
கூர்காவுக்குத் தெரிந்திருந்தது.