![கேலி கிண்டல் தூள் பறக்குது! ட்விட்டர் முடக்கமும் எலான் மஸ்க் விதித்த கட்டுப்பாடுகளும்! 1 twitter down](https://dhinasari.com/wp-content/uploads/2023/07/twitter-down-1024x576.jpg)
ட்விட்டர் தளம் உலகம் முழுதும் திடீரென முடங்கியது. இதனால் உலகளவில் ட்விட்டரில் தகவல்களை அனுப்ப முடியாமலும் பெற முடியாமலும் கோடிக்கணக்கானோர் தவித்தனர்.
இந்தப் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் கோளாறை சரி செய்யும் நடவடிக்கையில் ட்விட்டர் நிறுவனம் இறங்கியுள்ளது. இதனிடையே, ட்விட்டர் நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் தற்காலிகமாக புதிய கட்டுப்பாடுகளை விதித்து அறிவிப்பு வெளியிட்டார். அதில், அளவுக்கதிகமான டேடா பகிர்வு மற்றும் கையாள்தலில் ஏற்பட்டுள்ள நிலையால் சில கட்டுப்பாடுகளை தற்காலிகமாக விதிக்க வேண்டியுள்ளது. இதன்படி ,
அங்கீகரிக்கப்பட்ட கணக்குகளில் நாள் ஒன்றுக்கு 6 ஆயிரம் பதிவுளை மட்டுமே பார்வையிடலாம்.
அங்கீகரிக்கப்படாத கணக்குகளில் நாள் ஒன்றுக்கு 600 பதிவுளை மட்டுமே பார்வையிடலாம்.
அங்கீகரிக்கப்படாத புதிய பயனாளர்கள் தினசரி 300 பதிவுகளை மட்டுமே பார்வையிட முடியும்… என்று குறிப்பிட்டிருந்தார். இதன் மூலம் பயனர்களின் டேடா பகிர்வுகளுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என தெரிகிறது.
இதனிடையே எலான் மஸ்க் அறிவிப்புக்கு ட்விட்டர் பதிவுகளில் கேலியும் கிண்டலும் தூள் பறக்கிறது. சிலர் ட்விட்டர் சமாதியாகிவிட்டதாக கருத்து தெரிவித்து படங்களை வெளியிட்டுள்ளனர். டிவிட்டர் பறவை மெதுவாக பறந்து பறந்து அப்படியே குளத்து நீரில் விழுவது போல் படங்கள் பகிரப்பட்டுள்ளன.
எலான் மஸ்க் ட்விட்டர் தளத்தை வாங்குவதற்கு முன் பேச்சுரிமை எழுத்துரிமை என்பதெல்லாம் குறித்து குறிப்பிட்டு இருந்தார். ட்விட்டர் களம் பேச்சுரிமைக்கான கருத்தை வெளிப்படுத்தும் உரிமைக்கான தளமாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார். இந்நிலையில் 600, 6000 என்றெல்லாம் பார்ப்பதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் அதையும் கேலி செய்து சிலர் கருத்துள்ளனர்.
மருத்துவர் மருந்து சீட்டு எழுதிக் கொடுப்பது போல் காலை மதியம் இரவு என மூன்று வேலைக்கும் இத்தனை இத்தனை ட்வீட்களை பார்க்கலாம் என ஒருவர் கேலி செய்துள்ளார்.
இன்னும் எலான் மஸ்க் ட்விட்டர் தலைமை பதவியில் இருந்து விலகலாமா என்று கேட்டு பதிவிட்டு இருந்ததை இப்போது எடுத்து போட்டு தாங்கள் அதற்காகவே காத்திருப்பதாக கிண்டல் செய்திருக்கிறார்கள்.