திமிங்கலத்தின் வாயில் சிக்கிய கடற்சிங்கம் உயிருடன் தப்பித்த நிகழ்வு வியப்பை ஏற்படுத்தியுள்ளது. கலிபோர்னியாவில் உள்ள மான்டேரி விரிகுடா கடற்கரையில் படகில் சென்றுகொண்டிருந்த லாஸ் ஏஞ்சல்ஸ் நகரை சேர்ந்த வனவிலங்கு புகைப்படக் கலைஞர் சேஸ் டெக்கர், கடலிலிருந்த மீன்களையும், மேலே பறந்துகொண்டிருந்த பறவைகளையும் படம் பிடித்துக் கொண்டிருந்தார்.
திடீரென அவர் சென்ற படகிற்கு வெகு அருகில் திமிங்கலம் ஒன்று தனது வாயை பிளந்து, இரைகளை விழுங்கியுள்ளது. அதில் ஏராளமான மீன்கள் இருந்ததோடு, கடற்சிங்கம் ஒன்றும் சிக்கியுள்ளது.
அவற்றை எல்லாம் திமிங்கலம் விழுங்க முயற்சித்த நிலையில், மயிரிழையில் கடற்சிங்கம் அப்படியே தப்பி மீண்டும் உயிருடன் கடலில் குதித்துள்ளது. இதை, சேஸ் டெக்கர் தனது கேமிராவில் கவனமாகப் புகைப்படம் எடுத்துள்ளார்.
கண்ணிமைக்கும் நேரத்தில் கடலில் நிகழ்ந்த அதிசய நிகழ்வாக இது பார்க்கப்படுகிறது. திமிங்கலம், கடற்சிங்கம் என இரண்டுமே காயம் அடையாமல் தப்பிய இந்த நிகழ்வு வியப்பை ஏற்படுத்துவதாகவும், தனக்கு கிடைத்த மிக அரிய வாய்ப்பு எனவும், இதுபற்றி இன்ஸ்டாகிராமில் சேஸ் டெக்கர் வெளியிட்ட பதிவில் குறிப்பிட்டுள்ளார்.