தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு ஏற்கனவே முடிவடைந்திருந்தாலும் ஒருசில தேர்வுகளை கொரோனா வைரஸ் பயம் காரணமாக ஒருசில மாணவர்கள் எழுதவில்லை. அந்த மாணவர்களுக்காக 27.7.2020 அன்று நடைபெறும் என தமிழ்நாடு அரசு கடந்த சில நாட்களுக்கு முன் அறிவித்து இருந்தது
பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இது குறித்து வெளியிட்ட அறிக்கையில் “கடந்த கல்வியாண்டின் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் மாதம் நடத்தி முடிக்கப்பட்டது. மார்ச் 24 ஆம் தேதி நடத்தப்பட்ட 12 ஆம் வகுப்பு இறுதி நாள் தேர்வில் சில மாணவர்கள் தேர்வு எழுத முடியாத சூழ்நிலை ஏற்பட்டதாக மாணவர்கள் மற்றும் பெற்றோர் கோரிக்கை விடுத்தனர்.
இந்த கோரிக்கையை ஏற்ற முதலமைச்சர் பரிசீலித்து 24 அன்று தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு மட்டும் தனியாக வேறொரு நாளில் தேர்வு நடத்தப்படும் என அறிவித்திருந்தார். அதன்படி அந்த தேர்வை வரும் 27 ஆம் தேதி நடத்த தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. மாணவர்கள் அவர்கள்தம் சொந்த பள்ளிகளிலேயே தேர்வு மையங்கள் அமைக்கப்படும்.
இதற்கான ஹால்டிக்கெட்டுகளை www.dge.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாகவோ அல்லது அவரவர் பள்ளிகளிலோ ஜூலை 17 வரை பெற்றுக்கொள்ளலாம். தனி தேர்வர்கள் தங்கள் ஹால்டிக்கெட்டுகளை சம்பந்தப்பட்ட தனித்தேர்வு மையங்களில் பெற்றுக்கொள்ளலாம்.
தேர்வு மையங்களுக்கு மாணவர்கள் செல்வதற்காக போக்குவரத்து வசதிகள் செய்து தரப்படும். நோய்கட்டுப்பாட்டு பகுதியில் வசிப்பவர் எவராவது இருப்பின் அவர்கள் தேர்வு மையங்களில் தனி அறையில் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்” இவ்வாறு அறிக்கையில் அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருந்தார்.
எனவே மாணவர்கள் தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை நாளைக்குள் சென்று பெற்றுக்கொள்ளுங்கள். அல்லது இணையதளத்தில் டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்.
இந்த நிலையில் இன்று பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகியிருக்கும் நிலையில் மறுதேர்வு எழுதும் மாணவர்களின் நிலை என்ன? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள விளக்கத்தில் கூறியிருப்பதாவது:
4.03.2020 அன்று நடைபெற்ற மார்ச் 2020, மேல்நிலை இரண்டாமாண்டு தேர்வுகளான வேதியியல், கணக்குப்பதிவியல் மற்றும் புவியியல் (புதிய பாடத்திட்டம் மற்றும் பழைய பாடத்திட்டம்) பாடத் தேர்வுகளை எழுத முடியாத தேர்வர்களுக்கு, அவர்கள் தேர்வெழுதிய பாடங்களுக்கான மதிப்பெண்கள் மட்டும் தற்போது வெளியிடப்படும்.
27.07.2020 அன்று நடைபெறவுள்ள மேல்நிலை இரண்டாமாண்டு மறு தேர்வினை எழுதும் தேர்வர்களுக்கு மட்டும், மறுதேர்வு முடிவடைந்த பின், தேர்வெழுதிய அனைத்து பாடங்களுக்குமான தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.